சனி, 25 ஜூன், 2016

ஆவி, பேய், பிசாசு, பில்லி, சூனியம்...மதங்கள்!

ந்து, முஸ்லீம், கிறித்தவர் உள்ளிட்ட பல மதத்தவரும் பேய், பிசாசு, ஆவி போன்றவற்றை நம்புகிறார்கள். இந்துமதத்தைப் பொருத்தவரை வகை வகையான பேய் பிசாசுகள் இருப்பதும், பூசாரிகளைக்கொண்டு அவற்றை விரட்டியடிப்பதும் இன்றும் நடைமுறையில் உள்ள நிகழ்வுகளாகும்.

கிறித்தவர்களின் புனித நூலான பைபிளிலும், இஸ்லாமியரின் புனித நூலாகக் கருதப்படும் குர்-ஆனிலும் பேய் பிசாசுகள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இன்றும்கூட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில், கிறித்தவ மத போதகர்களால் நடத்தப்படும்  ‘சரீர சுகமளிக்கும்’ கூட்டங்களில் பேய் விரட்டும் நிகழ்ச்சிகளும் உண்டு.

இந்தப் பேய் விரட்டல் போட்டியில் வென்றவர் யார் என்று முடிவு செய்ய இயலாத வகையில் மூன்று பெரிய மதங்களைச் சார்ந்தவர்களும் பேய் விரட்டும் சாகசங்களைத் தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்.

தற்கொலை செய்துகொண்டவர்கள், படுகொலைக்குள்ளானவர்கள், விபத்தில் இறந்தவர்கள் ஆகியோரே பேய்களாகவும் பிசாசுகளாகவும் அலைவதாக நம்பப்படுகிறது.
பேய் பிடித்துப் பெரும் துன்பங்களுக்கு ஆளாகுபவர்கள் பெரும்பாலும் கிராமத்துப் பெண்களே. ஆண்களில் வெகு சிலருக்கு மோகினிப் பேய் பிடிப்பதுண்டு. விபத்தால் இறக்கும் அல்லது உணவுக்காகக் கொல்லப்படும் ஆடுகள், கோழிகள், மாடுகள் போன்ற பிராணிகள் ஆவிகளாகவும் பேய்களாகவும் உலவுவதாக எவரும் நம்புவதில்லை. கடவுளுக்கு மனிதன் மட்டுமே செல்லம்!

சிலர் பேயையோ பிசாசையோ ஆவியையோ பார்த்ததாகவும் சலங்கையொலி கேட்டதாகவும் சொல்கிறார்கள். கடவுளைக் கண்டதாகக்கூட, கூசாமல் பொய் சொல்கிறார்கள். 

இவர்கள் இவ்வாறு சொல்வதற்குப் ‘புலன்களை ஏய்க்கும்’ உணர்ச்சிகளே காரணம் என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள். அவர்கள், தாம் நிகழ்த்திய ஆராய்ச்சியின் முடிவுகளை மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள்.

1. மாயப் புலன் உணர்ச்சி[Illusion]

2. மயக்கப் புலன் உணர்ச்சி[Hallucination]

3. மருட்சி[Delusion]

மாயப் புலன் உணர்ச்சி:
கண், காது, மூக்கு உள்ளிட்ட ஐந்து புலன் உணர்வுகளின் அடிப்படையில் மாய உணர்ச்சிகள் ஐந்து வகையாகப் பிரிக்கப்படுகின்றன. நல்ல வெய்யிலில் நீண்ட தார்ச்சாலையில் நடக்கும்போது மிகத் தொலைவில் நீர் இருப்பதுபோல் தெரியும். உண்மையில் இருக்காது. இதனைக் கானல் நீர் என்பர். இது கண் உணரும் மாயக் காட்சியாகும்.

நெல்லிக்காய் தின்ற பின் நீரைக் குடித்தால் இனிப்பதுபோல் உணருவோம். அதனால், நீர் இனிப்பானது என்று அர்த்தமல்ல. இது நாக்கின் ஒருவகையான மாய உணர்ச்சியாகும். நம் ஐம்புலன்களாலும் இம்மாய உணர்ச்சிகளை உணர முடியும்.

மயக்கப் புலன் உணர்ச்சி:
இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் உளவியல் காரணங்களால் உண்டாகும் உணர்ச்சிகளே மயக்கப் புலன் உணர்ச்சியாகும்.

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த வால்டர்ஹெஸ், மிக்சிகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜே.டெல்காடோ ஆகியோர், மின் துடிப்புகள்[Electric Impulses] மூலம் மூளையில் பல்வேறு கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தூண்டிவிட்டு சினம், அச்சம், பசி, வருத்தம், எக்களிப்பி, காதல், காமம், விருப்பு, வெறுப்பு போன்றவற்றைச் சாதாரண நடைமுறை வாழ்வில் உணருவது போல [செயற்கையாகத் தூண்டும் முயற்சியில்] உணரச் செய்வதில் வெற்றி பெற்றார்கள்.

தாலக்கட்டமைந்த பறையோசை, சீராகக் கை தட்டும் ஓசை, மந்திர உச்சாடணம், பண்ணோடு இசைந்த பாடல், நடனம், அங்க அசைவுகள், கண்களில் மாற்றி மாற்றி வெளிச்சத்தையும் இருட்டையும் உண்டாக்குதல் போன்றவற்றை, உற்று நோக்கல் போன்ற செயல்கள் மூலம் [மயக்கப் புலன் உணர்ச்சி அனுபவங்களை] உண்டாக்க முடியும் என்கிறார்கள்.

மேற்கண்டது இயற்பியல் காரணங்களால் உண்டாகும் மயக்கப் புலன் உணர்ச்சியாகும்.

இன்னும், வேதியியல் காரணங்களாலும் உயிரியல் காரணங்களாலும் உளவியல் காரணங்களாலும் மயக்கப் புலன் உணர்ச்சிகளை உண்டாக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள் அறிஞர்கள்.

மருட்சி:
சிறு வயதிலிருந்து பிள்ளைகளின் மனதில் பொய்யான கருத்துக்ளை மனதில் திணித்து வருவதன் விளைவாக ஏற்படுவது மருட்சியாகும். பேய், பிசாசு, ஆவி போன்றவற்றைப் பார்த்ததாகச் சொல்வதும், ஜோதிடம், கைரேகை, மறுபிறப்பு, மந்திரம் போன்றவற்றை நம்புவதும் மருட்சி காரணமாகத் தோன்றும் புலன் உணர்ச்சிகளாகும். இவை குறித்தும் அறிவியல் உலகம் விரிவாக ஆராய்ந்திருக்கிறது.
===============================================================================
நன்றி: ‘பேய்,பில்லி, சூனியம், ஆவி, சோதிட மோசடிகள்’, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு, சென்னை.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக