எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

சனி, 17 பிப்ரவரி, 2018

பிரதமர் 'மோடி' அவர்களுக்கு ''நன்றி'' சொல்லலாமா? எப்போது?

''சமஸ்கிருதத்தை விடவும் தமிழ் மொழி மிகவும் தொன்மையானது'' என்று டெல்லியில் இடம்பெற்ற, மாணவர்களுடனான சந்திப்பின்போது, நம் பிரதமர் மோடி அவர்கள் நம் தமிழ் மொழியைப் பெரிதும் புகழ்ந்துரைத்திருக்கிறார்[தி இந்து, 17.02.2018.].
இத்தகு புகழுரைக்காகவோ, ''வணக்கம்'' என்று தமிழில் சொல்லித் தம் சொற்பொழிவைத் தொடங்குவதற்காகவோ நாம் அவருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோமா எனின், ''இல்லை'' என்பதே என் பதில்.

பேச்சளவில் நம் மொழியைப் புகழ்வது மட்டும் போதாது; இதன் வளர்ச்சிக்கு அவர் தமக்குரிய பங்கைச் செலுத்துதல் அவசியம். 

'சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்குதல் வேண்டும். நடுவணரசின் ஆட்சிமொழியாகத் தமிழையும்[பிற மாநில மொழிகளையும்தான்] தேர்வு செய்தல் வேண்டும்'[ஒரு மொழியில் பேசினால் அதை இன்னொரு மொழியில் உடனுக்குடன் மொழிபெயர்ப்புச் செய்வதற்கான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதும், அவை பிற நாடுகளில் பயன்பாட்டில் இருப்பதும் அறியத்தக்கது].

இவை இரண்டும் தமிழர்களின் தலையாய கோரிக்கைகள்; நீண்ட நாள் கோரிக்கைகளும்கூட.

இக்கோரிக்கைகள் ஏற்கப்பட்டால் மட்டுமே மோடி அவர்களுக்கு நாம் மனம் திறந்து நன்றி சொல்வது சாத்தியம் ஆகும்.

இது விசயத்தில் அவர் தாமதமின்றிச் செயல்படுவாரா?!