அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 28 பிப்ரவரி, 2018

தமிழகத் தொழில் அதிபரின் போற்றுதலுக்குரிய தமிழ்ப்பணி!

பல கல்வி நிறுவனங்களின் தலைவரும், 'சக்தி சுகர்ஸ்' செயல் தலைவரும், 'அருட்செல்வர்' என்று போற்றப்பட்ட, மறைந்த தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களின் மகனுமான டாக்டர் ம.மாணிக்கம் அவர்களின் நேர்காணல், 24.01.2018 அன்று சன் டி.வி.யின் 'சன் நியூஸ்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும்பயன் அளிக்கும் அரிய பல கருத்துகளை டாக்டர் ம.மாணிக்கம் அவர்கள் வழங்கினார்கள்.

அவர் அளித்த பேட்டியிலிருந்து ஒரு சிறு பகுதி உங்கள் பார்வைக்கு.....
'சன் நியூஸ்' கேள்வி:
நீங்கள் ஆன்மிகத்திலும், இலக்கியப் பணியிலும், மொழிபெயர்ப்பிலும் கவனம் செலுத்தி வருகிறீர்கள். மொழிபெயர்ப்பில் உங்களுக்கு ஏன் ஈர்ப்பு?

டாக்டர் ம. மாணிக்கம் பதில்:
அமெரிக்காவில் எங்களுடைய பேராசிரியர் திரு. கே.பிரகலாத் சொல்லுவார், ஜப்பானியர்கள் முன்னேறியதற்குக் காரணம், உலகில் எந்தப் புத்தகம் புதிதாக வந்தாலும், அது நல்ல புத்தகம் என்றால், மூன்றே மாதத்தில் ஜப்பானிய மொழியில் வந்துவிடுமாம். ஜப்பானியர்கள் ஜப்பானிய மொழியில்தான் படிக்கிறார்கள்.

தமிழகத்தில் பார்த்தால், ஆங்கில மோகம் அதிகமாக இருக்கிறது. நான் தமிழ்வழிக் கல்வியில் படித்தவன்.

ஆங்கில மோகம் ஏன் வருகிறது என்றால், ஏதாவதொன்றை அறிய வேண்டுமென்றால் அதைப் பற்றிப் படிக்க நம்முடைய தாய்மொழியில் அந்தப் புத்தகம் இருப்பதில்லை. அது அந்நிய மொழியில் இருக்கிறது. அந்த அந்நிய மொழி தெரியவில்லை என்றால் நாம் தற்குறிகள் ஆகிவிடுகிறோம். ஆங்கிலத்தில் படித்தால்தான் தேவையான துறைகள் பற்றிய அறிவைப் பெற முடியும் என்ற நிலை வந்துவிட்டது.

எனவேதான், தேவையான நல்ல நூல்களை மொழிபெயர்ப்புச் செய்யும் மையத்தைத் தொடங்கினோம். மொழிபெயர்ப்புப் பணி தொடர்கிறது.

ஆங்கிலத்தில் படிப்பதைவிடவும் தமிழில் படித்தால் நன்கு புரியுமாதலால் படிப்பவர்களுக்குப் பெரிதும் பயன்படும்.

கேள்வி:
அரிதான புத்தகங்களைக்கூட நீங்கள் மொழிபெயர்ப்புச் செய்து வெளியிடுகிறீர்கள். ஆனால், அவற்றிற்கு வரவேற்பு இருக்கிறதா?

பதில்:
வரவேற்பு ஓரளவிற்கு இருக்கிறது. ஓர் ஆயிரம் பிரதிகள் வெளியிடும்போது ஓரளவிற்குப் போகிறது.

தேர்வில் மாணவர்கள் வெற்றி பெற்றால் நாம் இனிப்பு வாங்கிக் கொடுக்க வேண்டாம்; புத்தகம் வாங்கி கொடுப்போம் என்ற ஒரு பழக்கம் வந்துவிட்டால், நிச்சயமாக மொழிபெயர்ப்புத் துறை நன்றாக வளரும். அந்த ஒரு விழிப்புணர்வு இப்போது தேவை.

டாக்டர் ம.மாணிக்கம் அவர்களின் உயரிய தமிழ்ப்பணியைப் போற்றுகிறோம். இவரனைய பிற தொழிலதிபர்களும் இம்மாதிரியான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது நம் விழைவு.
=================================================================================
நன்றி: 'ஓம் சக்தி' மாத இதழ்.