வியாழன், 20 டிசம்பர், 2018

ராஜேஷ்குமாரின் பதிலுக்குப் பதிலாக ஒரே ஒரு கேள்வி!

எழுத்தாளர் ராஜேஷ்குமார், 'உங்கள் கணை...என் அஸ்திரம்' என்னும் 'கேள்வி-பதில்' பகுதியில், 'கண்ணுக்குத் தெரியாத கடவுளை நம்ப மறுக்கிறதே மனம்?' என்னும் 'ராணி' வார இதழ்[23.12.2018] வாசகரின் கேள்விக்கு.....

'பார்ப்பதற்குப் பெட்ரோல் வெறும் திரவம்தான். ஆனால், ஆகாய விமானத்தையே தூக்கிக்கொண்டு பறக்கும் சக்தி அதில் இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா?' என்று பதில் சொல்லியிருக்கிறார். இதன் மூலம், நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், கடவுள் என்னும் சக்தி இருப்பதாகச் சொல்கிறார் எழுத்தாளர்.
மேம்போக்காக யோசித்தால், ''ஆகா, என்ன அருமையான பதில்!'' என்று பாராட்டத் தோன்றும். கொஞ்சம் நுணுகி ஆராய்ந்தால்.....

நம் கண்ணுக்குத் தெரியாத சக்தி பெட்ரோலுக்குள் இருக்கிறது. அது விமானத்தையே அந்தரத்தில் பறக்கச் செய்கிறது. இது உண்மை. இதன்மூலம், பிரபஞ்சத்திலுள்ள பொருள்களையும் உயிர்களையும் இயக்குவதற்கு ஏதோ ஒரு சக்தி இருப்பதும் உண்மை என்றாகிறது.

இப்போது, எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களிடம் நாம் கேட்க விரும்பும் கேள்வி.....

பெட்ரோலில் உள்ளடங்கியிருக்கிற சக்தியை நாம் 'சக்தி' என்று அறிந்திருக்கிறோம். அவ்வளவுதான். அதற்கென்று ஒரு 'பெயர்' சூட்டி, அதனை வழிபடுவது இல்லை. பிரபஞ்சப் பொருள்களையும் உயிர்களையும் இயக்குகிற அந்தச் சக்தியும் ஒரு 'சக்தி' மட்டுமே[அது, எப்போதும் இருந்துகொண்டே இருப்பதா? தோன்றியது என்றால், தோன்றியது எப்படி? எப்போது? நல்லது, கெட்டதுன்னு எல்லாவற்றிற்கும் அதுதான் காரணமா? இப்படிக் கேட்கப்படுகிற கேள்விகளுக்கு விடை தெரிந்தவர் எவருமில்லை] அந்தச் சக்திக்கு மட்டும் 'கடவுள்' என்று நாமகரணம் சூட்டியதோடு, அதை வழிபடவும் செய்கிறார்களே, இது ஏன்?

பதில் சொல்வாரா ராஜேஷ்குமார்?
------------------------------------------------------------------------------------------------------------------
100% உண்மைக் கதைகள்: சிறுகதைகள் (Tamil Edition)
அமேசான்கிண்டிலில் 6 நூல்கள்(புதுப்பிக்கப்பட்டவை)வெளியாகியுள்ளன.