பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 17 மே, 2019

பிரெஞ்சுக்காரன் சொன்ன நரிக்கதை!!

#காட்டு ராஜாவான சிங்கம் காட்டிலுள்ள மிருகங்களையெல்லாம் தன் குகை வாசலுக்கு வருமாறு கட்டளையிட்டது. அனைத்து விலங்குகளும் வந்து குழுமின.

சிங்கம் தின்றது போக மிஞ்சிய விலங்குகளின் தசைகளும் எலும்புகளும் வாசலில் சிதறிக் கிடந்தன. கெட்ட வாசனை எங்கும் பரவியிருந்தது.

குகையிலிருந்து வெளிப்பட்ட சிங்கம், ''என் குகை வாசல் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?'' என்று விலங்குக் கூட்டத்திடம் கேட்டது.

பயந்து நடுங்கிக்கொண்டிருந்த அத்தனை விலங்குகளும் மௌனம் காக்கவே, யானையின் பக்கம் திரும்பி, ''பதில் சொல்'' என்று ஆணை பிறப்பித்தது சிங்கம்.

சிறிது நேரத் தயக்கத்திற்குப் பிறகு, ''கெட்ட நாற்றம் வீசுது. வாசலில் நிற்கவே முடியவில்லை'' என்றது யானை.

''என் குகை வாசலையா நீ பழிக்கிறாய்?'' என்று சினந்து சீறிய சிங்கம் யானையின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டது. யானை அலறியது. அதன் கன்னத்திலிருந்து பெருக்கெடுத்து வழிந்தது குருதி.

குரங்கு இருந்த திசையில் பார்வையை ஓட்டிய சிங்கம், ''நீ சொல். என் குகை வாசல் பற்றி என்ன நினைக்கிறாய்?'' என்றது.

வெலவெலத்து நடுங்கிக்கொண்டிருந்த குரங்கு, ''வாசலெங்கும் நறுமணம் கமழ்கிறது. காட்டிலுள்ள அவ்வளவு மலர்களையும் கொண்டுவந்து இங்கே கொட்டியது போல வாசம் கமகமக்கிறது'' என்றது.

''அநியாயத்துக்குப் புளுகுகிறாய். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும்'' என்ற சிங்கம் மிகப் பலமாகக் குரங்கை எட்டி உதைத்தது.

அரண்டுபோன குரங்கு உருண்டு புரண்டு ஒரு புதரின் மீது விழுந்தது.

சுற்றுமுற்றும் பார்வையை நகரவிட்ட சிங்க ராஜா மற்ற விலங்குகளுக்கிடையே பதுங்கியிருந்த நரியிடம், ''நீ சொல்'' என்றது.

கொஞ்சமும் தயங்காமல், சமயோசிதமாக, ''கடந்த நான்கு நாட்களாக எனக்கு ஜலதோசம் பிடித்திருக்கிறது'' என்றது.

நரியின் புத்திசாலித்தனத்தை மெச்சிய சிங்கம் அந்தக் கணம் முதல் நரியைத் தன் அந்தரங்க ஆலோசகராக நியமனம் செய்தது#
-இது பிரெஞ்சு மொழியில் வெளியான கதை. சூழ்நிலைக்கேற்பப் பொய் பேசிக் காரியம் சாதிக்கும் பிரெஞ்சு நாட்டு அரசியல்வாதிகளை மக்களுக்கு அடையாளம் காட்டுவதற்காக எழுதப்பட்டது இது[நன்றி: அறிஞர் க.ப.அறவாணன். நூல்: 'தமிழர்...சமுதாயம், கல்வி, அரசியல்'

இந்தப் பிரெஞ்சு நாட்டுக் கதை நம் நாட்டுக்கும் பொருந்துகிறதா?
=================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக