பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 15 மே, 2019

திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை!?!?!?

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகேயுள்ள ஹபூரைச் சேர்ந்தவர் அந்தச் சிறுமி. 14 வயதில்[2009ஆம் ஆண்டு] அவளுக்குத் திருமணம் செய்வித்தார் அவளின் தந்தை.

கணவன் ஒரு நாள் காணாமல் போனான்; திரும்பி வரவேயில்லை.

தந்தையிடமே அடைக்கலம் தேடி வந்த அச்சிறுமியை ஒரு நபரிடம் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றார் விற்றான் அந்த ஆள். வாங்கியவன் அவளை வீட்டு வேலைகளுக்கு அனுப்பினான்.

வீட்டு உரிமையாளர்களும் அவர்களின் நண்பர்களும் அந்தப் பாவப்பட்ட பெண்ணைத் தொடர்ந்து வன்புணர்வு செய்தார்கள்.

நிராதரவான நிலையில் இப்படிப் பல ஆண்டுகள்[24 வயதுவரை] சீரழிக்கப்பட்டு, உடம்பும் மனமும் சிதைந்து உருக்குலைந்துபோன நிலையில், தெரிந்த ஒருவரின் வீட்டில் தீக்குளித்துத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாள் அவள். ஆனால், உயிர் பிரியவில்லை. அருகில் உள்ளவர்கள் அந்த அனாதையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள். சிகிச்சை தொடர்கிறது[ஊடகச் செய்தி 15.05.2019].
முகம் தவிர உடலின் தோல் முழுதும் உரிந்து தாங்கொணாத மரண வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கும் நிலையில் அந்தப் பாவப்பட்ட பெண் சொல்கிறாள்.....

''நான் இறக்கவே விரும்புகிறேன். வேறு எந்தவொரு பெண்ணும் என்னைப்போல் வாழ்நாளெல்லாம் வதைபடக் கூடாது.'' 

அவள் கடந்த காலத்தில் ஆடவர்களால் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் விவரித்தாள். இறுதியில், அவள் சொன்ன சில வார்த்தைகள் காலமெல்லாம் நம் நெஞ்சை வதைத்துச் சிதைக்க வல்லவை. அவள் சொன்னாள்.....

''நான் முற்றிலுமாய்க் கருகிவிட்டேன். இனி யாரும் என்னைப் பலாத்காரம் செய்ய முடியாது.''

'திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை' என்பது நம் முன்னோர் வாக்கு. நம் மக்கள், காலங்காலமாய்க் கணக்கு வழக்கில்லாமல் பல தெய்வங்களையும் வழிபடுகிறார்கள். அவற்றில் எந்தத் தெய்வம் இம்மாதிரி திக்கற்ற பெண்களுக்குத் துணை புரிந்தது? புரிகிறது?

யாருக்குக்கேனும் தெரியுமா?

வாரம் தவறாமல் பக்கம் ஒதுக்கி ஆன்மிக நெறி பரப்பும் இதழாளர்களுக்குத் தெரிந்திருக்குமே, சொல்வார்களா??

சாதாரண ஒரு மனிதர் சாட்சாத் முழுமுதல் கடவுளாகவே இந்த மண்ணில் நடமாடினார் என்று  ஓயாமல் கதை திரிக்கும் அந்த நம்பர் 1 பத்திரிகைக்காரர்களுக்குத் தெரிந்திருக்குமே, சொல்வார்களா?

மனித நேயம் வளர்ந்தால் மட்டுமே மனிதகுலம் வாழும் என்பதை மறந்து, நாளும் சாமி தரிசனம், அபிஷேகம், ஆராதனை என்று அலையும் கோடானுகோடி பக்தர்களில் சிலருக்காவது தெரிந்திருக்குமே, சொல்வார்களா?
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக