பக்கங்கள்

சனி, 19 அக்டோபர், 2019

இன்னும் என்னங்கடா பகவான்?!

காப்பீட்டு நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து, சிறிது காலம் தலைமறைவாகி, மீண்டும் வெளிப்பட்டுத் தன்னைத்தானே “நான் கல்கி[விஷ்ணு எடுக்கவிருந்த 10ஆவது அவதாரம் என்பார்கள்]யாக அவதரித்திருக்கிறேன்” என்று சொல்லிச் சொல்லிச் சொல்லி மிகப் பெரும்பாலான மக்களை மூளைச் சலவை செய்து, கோடி கோடியாய்ச் செல்வம் சேர்த்துள்ள விஜயகுமாரை ஊடகச் செய்திகளின் வாயிலாக நம்மில் மிகப் பெரும்பாலோர் அறிந்திருப்பர் என்பதே என் நம்பிக்கை.

இன்றைய நாளிதழ்களில்.....

#இன்று 3ஆவது நாளாக இவருடைய ஆசிரமத்தில் சோதனை நடத்தப்பட்டபோது, ஆசிரம நிர்வாகிகள் ஒரு மூட்டையை ஆசிரமத்தின் பின்புறமாக வீசியெறிந்ததைக் கண்ட வருமான வரித்துறையினர் ஓடிச் சென்று அந்த மூட்டையைக் கைப்பற்றிச் சோதனையிட்டபோது அதில் 45 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது தெரிய வந்தது.

ஏற்கனவே, 24 கோடி இந்திய ரூபாய்களும் 9 கோடி வெளிநாட்டுக் கரன்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தொடர்பான பத்திரங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்# என்றிப்படியான பரபரப்பூட்டும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவை போன்ற இன்னும் பல செய்திகள் வெளியாகிட நிறையவே வாய்ப்புள்ளது.

ஏற்கனவே நீங்கள் அறிந்திருப்பதற்கான வாய்ப்புள்ள இச்செய்திகளை நினைவுபடுத்தி உங்களின் நேரத்தை வீணடிப்பது என் நோக்கமல்ல.

ஒரே ஒரு கேள்வியை நம் இதாழாளர்கள் முன்வைப்பது என் விருப்பம் ஆகும். அது.....

“நானே கல்கி அவதாரம்” என்பது தொடங்கி இந்த ஆள் பரப்புரை செய்த அத்தனை பொய்களையும் இந்நாள்வரை தவறாமல் வெளியிட்டு மூடநம்பிக்கைகளில் சிக்குண்டு தவிக்கும் மிகப் பெரும்பாலான மக்களுக்குப் பெரும் தீங்கு விளைவித்தீர்கள்.

இந்த நபர் ஒரு மோசடிப் பேர்வழி என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும், ‘பகவான் கல்கி’ என்றே குறிப்பிட்டுச் செய்தி வெளியிடுகிறீர்கள். இது நீங்களெல்லாம் தெரிந்து செய்யும் குற்றமா, அறியாமையில் செய்யும் தவறா என்பது புரியவில்லை.
[இது இன்றைய நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது]

உண்மை எதுவாயினும் இனியேனும் இந்தத் தவற்றைச் செய்யாதீர்கள்; இந்த ஆள் குறித்துச் செய்தி வெளியிட நேர்ந்தால், ‘தன்னைத்தானே கல்கி அவதாரம் என்று சொல்லிக்கொண்ட விஜயகுமார்’ என்று குறிப்பிடுங்கள்.

இது என் வேண்டுகோள்.
===========================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக