எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

கடவுளின் படைப்பும், மதவாதிகள் போட்ட ‘தப்புக் கணக்கு’ம்!!!

உலக உயிர்கள் படைக்கப்பட்ட முறை குறித்து மதங்கள் பலவும் தத்தம் கொள்கைகளை எடுத்துரைத்துள்ளன.

முதல் இரண்டு நாட்களில் பகல் இரவு, வானம், பூமி ஆகியவற்றையும், மூன்றாம் நாளில் புல்பூண்டுகள், மரங்கள் போன்றவற்றையும், நான்காம் நாளில் ஊர்வனவற்றையும், ஐந்தாம் நாளில் நீர் வாழ்வன, பறவைகள் ஆகியனவற்றையும், ஆறாம் நாளில் முதல் மனிதனையும் மங்கையையும் கடவுள் படைத்தார்’ என்கிறது கிறித்தவ மதம்.

நீர், காற்று, பூமி ஆகியவற்றை முதலிரண்டு நாட்களிலும், கடல் வாழ் உயிரினம், ஊர்வன முதலானவற்றை மூன்றாம் நாளிலும், ‘ஜான்’ என்னும் தேவதையை நான்காம் நாளிலும், மற்ற இரு நாட்களில், முதல் மனிதன் ஆதாமையும், முதல் மங்கை ஏவாளையும் அல்லா படைத்தார் என்று இஸ்லாம் கூறுகிறது.
இந்த ‘நாள்’ கணக்கையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, பரமாத்மாவால் சிருஷ்டிக்கப்பட்ட ‘பிரஹிமா’ 16 லட்சம் கோடி ஆண்டுகள் வாழ்ந்து அனைத்து உயிர்களையும் படைத்ததாக இந்து மதம் சொல்கிறது[இது, தனி ஆய்வுக்கு உட்பட்டது].

கிறித்தவம், இஸ்லாம் ஆகிய மதங்கள் குறிப்பிடுகிற ‘முதல் இரண்டு நாட்கள்’ நம் மனதில் மிகப் பெரியதொரு சந்தேகத்தை எழுப்புகின்றன.

பூமி, சூரியன் ஆகியவற்றின் நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டுதான் நாள் கணக்கிடப்படுகிறது.

கடவுள், தம் படைப்புத் தொழிலை மேற்கொண்ட தருணத்தில் நாள் கணக்கே இல்லை[பூமி இல்லாததால்]. உண்மை இதுவாக இருக்கையில்.....

மேற்கண்ட இரண்டு மதங்களும், ‘இரண்டு நாட்களில்’ என்று சொன்னது எந்த அடிப்படையில்?

ஈடுஇணையில்லாத மாபெரும் சக்தி வடிவம் கடவுள் என்கிறார்கள். அவர் நினைத்தால் நொடியினும் நொடிப்பொழுதில் எதையும் ஆக்கவோ அழிக்கவோ முடியும். ரெண்டு நாளில் இதைப் படைத்தார், நாலு நாளில் அதைப் படைத்தார் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பது எள்ளி நகையாடற்குரியது.
=======================================================================