அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 8 ஏப்ரல், 2020

அடடா!...மதவாதிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு!!!

இம்மண்ணில் தோன்றிய மதங்களை எண்ணி விடலாம். மதவாதிகள் பரப்பிய புனைகதைகளையும், கற்பித்த பொய்ச் சம்பவங்களையும் எண்ணி முடிப்பது சாத்தியமே இல்லாத ஒன்று!

“தீய சக்திகளை நிர்மூலம் செய்து நல்லவர்களை வாழ வைக்கப் பல அவதாரங்கள் எடுத்தார் எங்கள் கடவுள்; இன்னும் எடுக்க இருக்கிறார்.” 

"பாவிகளின் பாவங்களைச் சுமப்பதற்காகவே தேவன் இங்கே மனிதனாகப் பிறக்கிறார். செத்துப் பிழைத்து அதிசயங்கள் நிகழ்த்துகிறார்.” 

“நாங்கள் தொழுகின்ற கடவுளே உண்மையானவர். வாருங்கள். வந்து கையேந்தி முறையிடுங்கள். நீங்கள் கேட்பதெல்லாம் அவர் தருவார்.” 

மதவாதிகள் பலரும், மேற்கண்டவை போன்ற பல உறுதிமொழிகளைக் காலங்காலமாய்ப் பரப்புரை செய்தார்கள்; செய்துகொண்டிருக்கிறார்கள். அவை, எக்காலத்தும் நிறைவேற்றப்படாத நிலையிலும் அறியாமையில் புதையுண்டு கிடந்த/கிடக்கும் அப்பாவி மக்கள் அவற்றை நம்பினார்கள்; நம்புகிறார்கள்.

கொஞ்சமே கொஞ்சம் சிந்திக்கக் கற்ற எவரும் நம்பியதில்லை. இவர்களின் எண்ணிக்கை உலகின் மக்கள் தொகையில் கணிசமானது.

இந்தக் கணிசமானவர்களை மட்டுமல்லாது, பிற மதம் சார்ந்தவர்களையும் தம் பக்கம் இழுக்க அனைத்து மதத் தலைவர்களுக்கும் மிக மிக மிக அரிய வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. அது.....

இருந்த இடத்தில் இருந்துகொண்டே[ஒன்றுகூடினால் கொரோனா வைரஸ் தாக்கிக் கொன்றுவிடும்] தத்தம் கடவுளிடம் வேண்டுகோள் வைத்து, ஒட்டுமொத்த உலகையும் கதிகலங்கச் செய்துகொண்டிருக்கிற இந்தக் கொடூரக் கொரோனாவைச் சில மணித்துளிகளில், ஏன், மிக மிக மிகச் சில நொடிகளில் பூண்டோடு அழித்தொழிக்கலாம். 

“இதோ இக்கணமே இதை நாங்கள் சாதித்துக் காட்டுகிறோம்” என்று சவால் விட்டுச் செய்து முடிப்பதற்கான அரிய வாய்ப்பு அனைத்து மதத் தலைவர்களுக்கும் வாய்த்திருக்கிறது[இதற்கு முன்பு கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் நழுவவிட்டுவிட்டார்கள்!].

வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள, உடனடியாக அவர்கள் களத்தில் இறங்குவார்களா?
========================================================================