அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 19 ஜூலை, 2020

‘கறுப்பர் கூட்டம்’...இவர்கள் சறுக்கியது எப்படி?!

ஆழி செந்தில்நாதன் மிகச் சிறந்த சிந்தனையாளர்; எழுத்தாளர்; சொற்பொழிவாளர்; பதிப்பாளர்; மொழிபெயர்ப்பாளர். ‘கறுப்பர் கூட்டம்’ பிரச்சினை குறித்துத் தம் முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கிறார். ‘சமயம் தமிழ்’இல் பிரசுரமான அதனை நான் இங்கே நகல் எடுத்துப் பதிவு[தலைப்பு நான் தந்தது] செய்திருக்கிறேன்.

ஆழி செந்தில்நாதன் அவர்களுக்கும், ‘சமயம் தமிழ்’ செய்தி நிறுவனத்திற்கும் என் நன்றிகள்.
கந்த சஷ்டி கவசம் Vs கருப்பர் கூட்டம்: எந்த இடத்தில் பிரச்சினை?
Mariathangaraj Jeyapal | Samayam Tamil | Updated: 17 Jul 2020, 07:05:00 PM
கந்த சஷ்டி கவசம் குறித்து எழுத்தாளர் ஆழி செந்தில்நாதன் முன்வைக்கும் முக்கியமான 
கருத்துகளை இங்கு பார்க்கலாம்.

கொரோனா பாதிப்பு, பலி, தடுப்பு நடவடிக்கைகள் ஆகிய செய்திகளை எல்லாம் பின்னுக்குத் 
தள்ளி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது கந்த சஷ்டி கவசம் Vs கருப்பர் கூட்டம் 
சர்ச்சை.

மக்களின் நம்பிக்கைகளை இழிவுப்படுத்தும் விதமாக விமர்சனம் செய்தது தவறு என்று ஒரு 
சாராரும், கருத்துரிமை இல்லையா என்று ஒரு சாராரும் மாறி மாறி சமூகவலைதளங்களில் 
கருத்துப் போர் புரிந்துவருகின்றனர். இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட யூடியூப் சேனலைச் 
சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலும் விவாதங்கள் ஓய்ந்தபாடில்லை.

இது குறித்து எழுத்தாளர் ஆழி செந்தில்நாதன் தனது கருத்தை முகநூல் வாயிலாக 
வெளியிட்டுள்ளார். “நான் கருப்பர் கூட்டம் சானலின் கந்த சஷ்டி கவசம் பற்றிய 
காணொளியின் அணுகுமுறையை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் விமர்சித்த முறை 
இந்து மதவெறியர்களுக்கு சாதகமாக ஆகிவிடும் என்று உறுதியாக நான் அச்சப்படுகிறேன். 
ஆனால் அது மட்டுமே காரணம் அல்ல.

பக்தி என்கிற விஷயத்தை இப்படி அணுகக்கூடாது என்பதே என்னைப் பொறுத்தவரை 
அதைவிட முக்கியமான காரணமாகும். மேலும் "ஆபாசம்" குறித்த இத்தகைய மதிப்பீடுகள் 
எங்கிருந்து வருகின்றன என்கிற கேள்வியும் எழுகிறது. முலையும் அல்குலும் 
எப்போதிலிருந்து ஆபாசமானது? கிருஷண லீலை குறித்தும் ஐயப்பன் கதை குறித்தும் 
பேசும்போதெல்லாம் நமது தோழர்கள் முன்வைக்கும் "ஆபாசத்துக்கு எதிரான" கருத்துகள் 
குறித்து எனக்கு கேள்விகள் உண்டு” என்று பதிவிட்டுள்ளார்.

மதத்தை, கடவுளை எப்படி அணுகவேண்டும் என்று கேள்வி எழுப்பி அவரே அதற்கு 
பதிலளித்துள்ளார். “இதற்கு ஒற்றைப் பதில் கிடையாது. ஒருபக்கம், பகுத்தறிவு, நாத்திகம், 
பொருள்முதல்வாதம், மதச்சார்பின்மை, அறிவியல் என பல முனைகளிலிருந்து அதை 
அணுகவேண்டும். மற்றொரு பக்கம் மதச் சீர்திருத்தம் என்கிற மிகப்பெரிய அணுகுமுறையும் 
முக்கியமானது.

இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ, பெளத்த மதங்களை அரசியல் கருவிகளாக ஆதிக்க சக்திகள் 
கருதும்போது, அந்த மதங்களின் மீது ஆதிக்க சக்திகள் உருவாக்கும் மேலாதிக்கத்தை 
உடைப்பது எல்லாவற்றையும் விட முக்கியமானது. ஆர் எஸ் எஸ்ஸும் பாஜகவும் இந்து என்கிற 
அடையாளத்தினூடாகத் தம்மை இந்துக்கள் என்று நம்பும் மக்களின் மீது ஆதிக்கம் 
செலுத்துவதை நாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாது. கூடாது.

முருகன் எனும் தமிழ் அடையாளம்!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, முருகன் என்கிற தமிழ் அடையாளத்தை முன்னிறுத்துவதும் 
முக்கியமான அரசியல் செயல்பாடுதான். அதில் தவறில்லை. (நாம் தமிழர் கட்சி அதை 
செய்வதால் மட்டுமே அது தப்பாகிவிடாது!)

அத்துடன் கொற்றவை, அம்மன் வழிபாடு, தமிழ்நாட்டு சைவ சித்தாந்தம், தமிழ்நாட்டு 
மாயோன் / திருமால் வழிபாடு, ஏன் பார்ப்பனர்களையும் உள்ளடக்கிய பக்தி இயக்கத்தின் சில 
முக்கியக் கூறுகள் என தமிழ்நாட்டு சமய நெறிகள் பலவற்றையும் நாம் கவனத்தோடு 
ஆராயவேண்டியுள்ளது. சமணம், ஆசிவகம், ஐயனார் வழிபாடுகள் குறித்தக் 
கோட்பாடுகளையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். இவை அனைத்தும் இந்து 
ராஷ்ட்டிரவாதிகளின் அதிகாரபூர்வ இந்து மதத்தின் உட்கூறுகளைக் கேள்விக்கேட்கக் 
கூடியவை. இந்து மதம் ஒற்றை மதம் என்கிறமாயையை உடைக்கவல்லவை. வைதீக 
சக்திகள் இவை அனைத்தும் ஒன்றுதான் என்றும் அதுதான் இந்து மதம் என்றும்சொன்னால் 
நீங்கள் அதற்கு தலையாட்டுவீர்களா?

அத்துடன் நடைமுறை சார்ந்த அரசியல் அணுகுமுறையும் மிக முக்கியமானது. சில 
ஆண்டுகளுக்கு முன்பு ஜார்கண்டிலுள்ள முற்போக்கு சக்திகளிடமிருந்தும் சமீபத்தில் 
வங்காளிகளிடமிருந்தும் ஒரு விஷயத்தைக் கண்டேன்.

ஒற்றை இந்துத்துவத்துக்கு எதிராக, ஜார்கண்டைச் சேர்ந்த ஆதிவாசி சமூகங்களின் 
ஆதரவாளர்கள், துர்க்கைக்கு எதிராக துர்க்கையால் கொல்லப்பட்ட மகிஷாசுரனை அசுர 
தெய்வம் என்று கூறி முன்னிறுத்தினார்கள். ஆனால் மேற்கு வங்கத்திலுள்ள வங்க 
தேசியவாதிகள் - பலரும் இந்துக்கள் - பாஜக முன்னிறுத்தும் இராமர் எங்கள் தெய்வமல்ல, 
துர்க்கை என்கிற காளியே எங்கள் தெய்வம் என்று கூறி வங்காள சமய அடையாளத்தை 
முன்னிறுத்தினார்கள். ஓரிடத்தில் துர்க்கை இந்துத்துவத்தின் குறியீடு, மற்றொரு இடத்தில் 
அதே துர்க்கை இந்துத்துவத்தின் ஒற்றை மதவாதத்துக்கு எதிரான ஒரு பெரிய தேசிய இனத்தின் 
குறியீடு!

மகாராஷ்டிராவில் சிவன் இந்துத்துவத்தின் குறியீடு, கர்நாடகத்தில் பசவரின் பக்தர்களுக்கு 
அது தனி மதம். மகாராஷ்டிராவில்கூட சில சமயம் அது இந்துத்துவத்தின் பெருங்குறியீடு. சில 
சமயங்களில் அது வட இந்திய வைணவத்துக்கு மாற்றான உள்ளூர் சைவத்தின் குறியீடு!

ஆக மதவாத அரசியல் தலைதூக்கும்போது இத்தகைய உள்முரண்கள் குறித்தும் கவனம் 
செலுத்தவேண்டும். இந்தப் பார்வை சில சமயம் நமது பெரியாரியர்களிடம் இல்லாமல் 
போய்விடுகிறது. (ஆனால் பெரியாரின் பார்வை அல்ல இது. பெரியாரியத்தையும் சரியாக 
உள்செரித்துக்கொள்ளாத, எது முதன்மையான போராட்டக்களம் என்பதை அறியாத 
நிலையால் வந்த சறுக்கல்தான் இது. இது பொறுப்பின்மையின் வெளிப்பாடாக இருப்பதைப் 
பல தடவை உணர்ந்திருக்கிறேன்.)

கடவுளையும் மதங்களையும் விமர்சித்துவரக்கூடிய ஒரு நீண்ட மரபு நம்முடையது. அதுதான் 
தமிழ் மரபு, சித்தர் மரபு, வள்ளலார் மரபு, வைகுந்தர் மரபு, சுய மரியாதை இயக்க மரபு என அது 
நீள்கிறது.

ஏன் சைவ வைணவ மரபிலிருந்து வந்தவர்கள்கூட ஆரிய புராணங்களின் 
அலங்கோலங்களை கிழித்துத் தொங்கப் போட்டிருக்கிறார்கள். வைதீகம் 
தமிழர்களுக்கானதல்ல என்பதுதானே தமிழ்ச் சைவ சித்தாந்தத்தின் முடிவு? இந்த அறிவுப் 
பின்புலம் இருக்கும் சமூகமாக தமிழ்ச்சமூகம் இருப்பதால்தான் இங்கே தந்தை பெரியார் 
உள்வாங்கப்பட்டார். வெறுமனே கடவுளர்களை விமர்சித்ததால் அல்ல. சைவ அறிஞர் 
மறைமலையடிகளும் வைணவ அறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியாரும் தந்தை
பெரியாரோடு கைகோர்த்து நின்று தமிழைக் காத்திட்ட காலம் அது.

அந்தக் காலத்தில் இராமாயணம் பெரிய அளவுக்கு விமர்சிக்கப்பட்டது. இன்றைய காலத்தில் 
எத்தகைய அணுகுமுறை சரி என்பது குறித்து என்னுடைய தாழ்மையான கருத்தொன்றை கூற, 
அந்தக் காலத்துக்குச் செல்வோம். அதற்கு அண்ணாவையே துணைக்கழைத்துக்கொள்வோம்!

அண்ணாவின் நீதி தேவன் மயக்கம்!

இராமாயணத்தை முன்னிட்டு அறிஞர் அண்ணாவின் மூன்று நூல்களை எடுத்துக்கொள்வோம். 
முதலாவது. தீ பரவட்டும். இரண்டாவது, கம்ப ரசம். மூன்றாவது, நீதி தேவன் மயக்கம்.

இராமாயணத்தை உண்மையிலேயே ஏற்பவர்களுக்கும் அதை தீயிட்டுக் கொளுத்தவேண்டும் 
என்று கூறியவர்களுக்கும் இடையில் நடந்த விவாதம்தான் 'தீ பரவட்டும்'. அது எழுபது எண்பது 
ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ச்சமூகத்தில் இருந்த கருத்துச் சுதந்தர வெளியைக் குறிக்கிறது. 
அப்போது அணணாவும் தமிழறிஞர் ரா பி சேதுப்பிள்ளையும் முரண்பட்டு ஒருவரை ஒருவர் 
கடுமையாக விமர்சித்து வாதாடினார்கள். ஆனால் ஒருவர் மீது ஒருவர் மதிப்புக்
கொண்டிருந்தார்கள். இராமன் வாலியைக் கொன்றது சரியா தவறா, சீதைக்கு அக்கினிபரீட்சை 
வைத்தது சரியா தவறா, சம்புகனைக் கொன்றது சரியா தவறா, சூழ்ச்சிகளாலும் 
துரோகங்களுமே இராவணனைக் கொன்றது சரியா தவறா என்கிற வாதங்கள் மக்களுக்கு 
சிந்தனைகளை ஊட்டின.

பெரியார் சொன்னதை சொன்ன கறுப்பர் கூட்டம், கைது அவசியமா?

அண்ணாவின் கம்ப ரசம் - இது அந்தக் காலத்து இளைஞர்களை ஈர்த்த நூல். ஆனால் கம்பனின் 
கவிதைகளில் உள்ள காதலையும் காமத்தையும் கவிதை சுதந்திரத்தையும் பக்தியையும் 
தெய்வீக அதீதத்தையும் அதன் வரம்புகளை மீறி விமர்சித்த நூல் இது. இந்த நூலின் 
அணுகுமுறையை தவறு என்று சொல்லமுடியாவிட்டாலும், இந்த அணுகுமுறையில் ஒரு 
அங்குலம் தவறினாலும் பிரச்சினையை சிறுமைப்படுத்துவதிலும் மற்றவர்கள் மனங்களை 
புண்படுத்துவதிலுமே இது போய்முடியும். எனவே இந்த அணுகுமுறையை இப்போது 
தவிர்க்கவேண்டும்.

இந்த இரு அணுகுமுறைகளைவிட சிறந்த அணுகுமுறை நீதி தேவன் மயக்கத்தில் உள்ள 
அணுகுமுறைதான். அணணாவின் நீதி தேவன் மயக்கம் ஒரு சிறந்த அரசியல் இலக்கியம். இந்த 
நாடகத்தில் இராவணனின் நியாயமான கேள்விகளைக் கொண்டு ஒட்டு மொத்த 
கடவுளர்களையும் அவர்களுடைய வர்ண நீதியையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுகிறார் 
அண்ணா. இங்கே இராவணன் தமிழ்ப் பேரரசன் மட்டுமல்ல. அவன்தான் சுயமரியாதை 
இயக்க வீரனும்கூட. தன்னுடைய நிலத்தில் ஆரியர்கள் அவர்களுடைய கலாச்சாரத்தைக் 
கொண்டுவந்து திணித்தால் அதை அழிப்பேன் என்கிற இராவணனின் குரல் விடுதலைக் 
குரல். தாயகத்தின் குரல். நீதிதேவன் மயக்கம் மக்களை ஏன் ஈர்த்தது என்றால் அது 
நியாயத்தின் மீது நின்றிருந்தது. கம்பனால் பதில் சொல்லமுடியாமல் இருந்தது. அந்தக் 
கம்பனுக்கும் சிலைவைத்தவர் அண்ணா என்பது வேறு கதை.

தீ பரவட்டும் என்கிற நூலின் தர்க்கத்தையும் நீதி தேவன் மயக்கம் என்ற நாடகத்தின் நியாயச் 
சீற்றத்தையும் நாம் இப்போதும் படித்து இன்புறமுடியும். அது மட்டுமல்ல ஒரு ஆத்திகர் அதைப் 
படிக்க நேர்ந்தாலும்கூட அவர் தன் மனம் புண்படுத்தப்பட்டதாக நினைக்கமாட்டார். 
மாறாக அவர் மனத்தில் ஏதோ ஒரு கேள்வி எழவே செய்யும். கம்ப ரசம் அப்படி அல்ல. அது 
அவருக்கு எரிச்சலையே அதிகம் உண்டாக்கும்.

கருஞ் சட்டைக்காரர்கள் கவனிக்க வேண்டியவை!

அது மட்டுமல்ல, பெரியாரும் அண்ணாவும் புலவர் குழந்தையும் பாரதிதாசனும் என் எஸ் 
கிருஷ்ணனும் எம் ஆர் இராதாவும் மதங்களை எதிர்த்துக் கேள்விகள் கேட்டபோது, 
கடவுளர்களை வம்புக்கிழுத்தபோது, அவர்கள் கலகத்தின் குரலாக இருந்தார்கள். எனவே 
அப்போது அது சமூகத்தின் கலகக்குரலோடு சேர்ந்து நின்றது.

ஆனால் திராவிட இயக்கங்களும் கட்சிகளும் இன்று நிறுவனமயமாக்கப்பட்ட அமைப்புகள். 
எனவே இன்றைய திராவிடக் கட்சிகளின் மீதான கோபமும் விமர்சனமும்கூட பகுத்தறிவு 
எதிர்ப்புக் கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படும் அபாயம் இருக்கிறது. எனவே காலம் 
மாறியிருக்கிறது என்பதையும் கருப்புச்சட்டைக்காரர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

வர்ணாசிரமமும் சனாதனமும் சாதியமும் அதன் வழி வந்த அனைத்து சமூக, பாலின 
ஏற்றத்தாழ்வும்தான் நமது இலக்காக இருக்கவேண்டும். பரிதாபத்துக்குரிய நமது மாஜி 
கடவுளர்களைப் பொறுத்தவரை, காலம் அவர்களின் இடத்தைத் தீர்மானித்துக்கொள்ளும். 
அதில் மக்களின் விருப்பங்கள் உரிமைகள் குறித்து நாம் மரியாதையுடன்தான் அணுகவேண்டும்.

நாம்தான் இந்த மக்களின் சுயமரியாதைக்காகப் போராடியிருக்கிறோம். அதை நாமே 
தவறாகப் பயன்படுத்திவிடக்கூடாது. மீண்டும் கருப்பர் கூட்டம் விஷயத்துக்கு வருவோம். 
மதவாதிகள் நம்மை காலம் காலமாக அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தி வந்தார்களே, 
அதனுடன் கருப்பர் கூட்டம் வீடியோவை ஒரு துளிகூட ஒப்பிடமுடியாது. அதிக பட்சம் இது 
ஒரு சீண்டல், அவ்வளவுதான்.

இங்கே ஒரு சாதாரண யூட்யூப் சானலுக்கு எதிராக பாஜக என்கிற மிகப்பெரிய கட்சியே 
களத்தில் குதிக்கிறது என்றால், அது தமிழ் முருகன் மீதான பக்தியால் அல்ல, தங்களை 
யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்கிற திமிர், ஆணவத்தால் என்பதை புரிந்துகொள்வதில் 
நமக்குச் சிரமம் இல்லை. ஆனால் மக்களுக்கு? எந்தக் காலத்திலும் கருத்துரிமையின் பக்கம் 
நிற்கவேண்டும் - பாசிஸ்ட்களின் காலத்தில் சற்று கூடுதலாகவே.”