புதன், 8 ஜூலை, 2020

‘அம்மா அறுபது!’...குடும்பத் தலைவிகளுக்கான கதை!!

ம்மாவைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

எங்களின் ஒட்டுமொத்த குடும்பமும் ஆனந்தப் பரவசத்தில் திளைத்திருக்க, அவர் மட்டும் ஒருவிதக் குற்ற உணர்விலிருந்து விடுபட முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார்.

நான் மும்பையில், தம்பி சண்முகம் ஐதராபாத்தில், தங்கை சாலினி சென்னையில் என்று வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்துகொண்டிருந்தாலும், நாமக்கல்லில் இருக்கும் பெற்றோரைப் பார்க்க வரும்போது முதலில் சென்னையிலிருக்கும் தங்கை சாலினி வீட்டில் சங்கமம் ஆகி, பெற்றோருக்குத் தகவல் தந்துவிட்டு வருவது வழக்கமாக இருந்தது.

இந்த முறை, 'திடுதிப்' வருகை மூலம் பெற்றோர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கத் திட்டமிட்டதுதான் பிரச்சினை ஆகிவிட்டது.

ரயிலில் பயணித்து, நகரப் பேருந்தில் ஊர்ந்து, கொஞ்சம் நடந்து, அப்படி இப்படியென்று வீடு போய்ச் சேர்ந்தபோது இரவு நெருங்கிவிட்டது.

வாண்டுகள் அழைப்பு மணி அடித்ததோடு,  கதவையும் படபடவென்று தட்டியதில் உட்பக்கம் தாளிடப்படாமலிருந்த  கதவு தானாகத் திறந்துகொண்டது. கண்ணெதிரே விரிந்த காட்சி நாங்கள் கொஞ்சமும் எதிர்பாராததாக இருந்தது.

சோபாவில் வசதியாகச் சாய்ந்தவாறு டி.வி.பார்த்துக்கொண்டிருந்த அப்பாவின் மடியில் தலை சாய்த்த நிலையில் அம்மா. அப்பாவின் ஒரு கை வாஞ்சையுடன் அம்மாவின் ஒரு பக்கக் கன்னத்தையும் நெற்றியையும் மாறி மாறி வருடிக்கொண்டிருந்தது.

முதலில் அப்பாதான் எங்களைக் கவனித்தார். இருந்த நிலையிலேயே இருந்தார். திடுக்கிட்ட பார்வையுடன் பதறி எழுந்து, அப்பாவிடமிருந்து விலகி நின்ற அம்மா, சில கணங்கள் சிலையாகி நின்றார்.

''ஹாய்...பாட்டி...தாத்தா...'' என்று குழந்தைகள் எழுப்பிய ஆரவாரம்தான் அம்மாவை எதார்த்த நிலைக்கு மீட்டெடுத்தது.

வழக்கமாகப் பேரப்பிள்ளைகளைப் பார்த்த மாத்திரத்திலேயே, அத்தனை பேரையும் மாறி மாறிச் சேர்த்து அணைத்து முத்தங்களை வாரி வழங்கும் அந்த அம்மா அன்று காணாமல் போயிருந்தார். அவரின் பரிதாப நிலை விவரிப்புக்கு அப்பாற்பட்டிருந்தது.

''என்ன இது, ஒரு ஃபோன்கூடப் பண்ணாம... லீவு விட்டாச்சுதானே...வருவீங்கன்னு தெரியும்... ரயில் பயணமா?'' -தனக்குண்டான தர்மசங்கடத்திலிருந்து விடுபட ஏதேதோ பேசி, இரண்டு பேரன்களையும் இரண்டு பேத்திகளையும் ஆரத் தழுவியவாறு மாற்றி மாற்றி அவர்களின் கன்னங்களை வருக்கொடுத்தார்; எங்களிடம் மெலிதானதொரு புன்னகையை மட்டும் பகிர்ந்துகொண்டு சமையல் கட்டில் புகுந்துகொண்டார்.

உணவு பரிமாறும்போதுகூட, அவர் இயல்பு நிலைக்குத் திரும்பாதது வெளிப்படையாகத் தெரிந்தது. பேரப் பிள்ளைகளைக் கொஞ்சிக் குலாவிவிட்டு, அவர்களுக்கு உணவு ஊட்டிவிடும்போதுகூட, பதற்றத்தின் பிடியிலிருந்து அவர் மீளவில்லை.

“எதிர்த்த வீட்டு நளினி கொடுத்துட்டுப் போன கொஞ்சம் வறுத்த நிலக்கடலையைத் தின்னு தொலைச்சிட்டேன். அதுவும், காலங்காத்தால, வெறும் வயித்துல. பித்தம் தலைக்கேறிடிச்சி. மண்டைக் கிறுகிறுப்பு இன்னமும் குறையல” என்று சொல்லி அம்மா அசடு வழிந்தபோது மருமகள்கள் இருவரும் தங்களுக்குள் அர்த்தமுள்ளதொரு பார்வையைப் பகிர்ந்துகொண்டு கமுக்கமாய்ச் சிரித்துக்கொண்டார்கள்.

“பனை வெல்லம் பித்தத்துக்கு நல்லதுன்னு சொல்வாங்க. வாங்கிவரட்டுமா?” என்றாள் சாலினி. அம்மா கவனிக்காதது போல் பாத்திரத்தில் எதையோ கரைத்துக்கொண்டிருந்தாள். மருமகள்களுக்கிடையே மீண்டும் புன்னகைப் பரிமாற்றம்.

“என்னமோ தெரியல. பக்கத்தில் உட்கார்ந்து டி.வி. பார்த்துட்டிருந்த உங்க அம்மா, திடீர்னு மயக்கம் போட்டு என் மடியில் சாஞ்சிட்டா. நீங்க வந்தப்பதான் மயக்கம் தெளிஞ்சுது”ன்னு பொய் சொல்லி அப்பா அம்மாவுக்கு நேசக்கரம் நீட்டியிருக்கலாம். அம்மா படும் பாட்டை அவர் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

அன்றிரவு நாங்கள் எல்லோரும், பயணக் களைப்பில் அடித்துப்போட்டாற்போல் தூங்கிவிட்டோம். அம்மா சரியாகத் தூங்கியிருக்க வாய்ப்பில்லை.

பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் தரிசனம், சினிமா என்று இரண்டு நாட்கள் கழிந்தன.

முன்கூட்டியே திட்டமிட்டபடி, ஒரு வேன் ஏற்பாடு செய்து ஏற்காட்டுக்குப் பயணம் ஆனோம்.

அம்மாவின் நிலைமை கொஞ்சமே கொஞ்சம் தேவலாம் போலிருந்தது. கலகலப்பான பழைய அம்மாவைப் பார்ப்பது இன்னும் சாதியப்படவில்லை.

“அம்மா, உங்க இந்த வயசுக்கு இதெல்லாம் தப்பே இல்ல. தற்செயலா நாங்க பார்க்கும்படி ஆயிடிச்சி. இது நடந்திருக்கக் கூடாதுதான். நடந்திடுச்சி. நாங்க இதை மறந்துடுவோம். நாலு நாளா வருத்தப்பட்டது போதும். இனிமே சகஜமா இருங்க” என்று பெற்ற தாயிடம் சொல்ல முடியுமா?  சொன்னால் அதை அந்தத் தாயின் மனம் ஏற்காதே. அம்மாவுக்காக என்னால் கவலைப்பட மட்டுமே முடிந்தது.

பயணத்தின்போது, தங்கையின் இரண்டு வயது மீனா, அம்மாவின் மடியே தஞ்சம் என்றிருந்தாள். தம்பியின் ஐந்து வயது மகனும் மூன்று வயது மகளும் அம்மாவின் பக்கத்தில் சன்னலை ஒட்டி உட்கார்ந்து, வெளியே வேடிக்கை பார்ப்பதும் அவ்வப்போது மீனாவைச் சீண்டுவதுமாக இருந்தார்கள். என் மகன் முன்னிருக்கையில் தாத்தாவின் மடியில்.

அம்மாவை அடுத்து என் மனைவி சுகந்தி. என் தோளில் சாய்ந்து தூங்குவதுபோல் பாவனை செய்வதும், விழித்து வெளியே பார்ப்பதுமாக இருந்தாள். ஒரு கட்டத்தில், திட்டமிட்டபடி, என் மடியில் தலை சாய்த்துவிட்டாள். அம்மா கவனிக்கிறார்களா என்பதையும் அவ்வப்போது உறுதிப்படுத்திக்கொண்டாள். ஆனாலும், அதனால் எதிர்பார்த்த பலன் இல்லை. குற்ற உணர்விலிருந்து அம்மா விடுபட்டதாகத் தெரியவில்லை.

ஏற்காட்டில், படகுச் சவாரியை முடித்துக்கொண்டு பூங்காவிற்குள் நுழைந்தபோதுகூட அம்மாவில் நிலையில் மாற்றம் இல்லை.

அது நாங்கள் கொஞ்சமும் எதிர்பாராத நிகழ்வுதான்.

பூங்காவில் உலவிக்கொண்டிருந்த ஒரு வெள்ளைக்காரத் தம்பதியர், ஏதோ ஒருவகை ஈர்ப்பு காரணமாக, எங்களை ஒருங்கிணைத்துப் படம் எடுத்தார்கள். எங்களோடு ஒன்றாகப் படம் எடுத்துக்கொண்டார்கள். மலர்ச் செடிகள் நிறைந்த பின்னணியில் இருவரும் சேர்ந்து நின்று எங்களைப் படம் எடுக்கச் சொன்னார்கள்.

அவர்கள் இருவருமே வயது அறுபதைக் கடந்தவர்கள். தன்னிடமிருந்த புகைப்படக் கருவியை நீட்டியவாறு என்னை நெருங்கிய அவர், மனம் மாறி அதை அப்பாவிடம் கொடுத்தார். சற்றே நகர்ந்து, புல்தரையில் அமர்ந்த அவர் மனைவியை அருகில் இருத்தித் தன் மடியில் சாய்த்துக்கொண்டார். ‘கிளிக்’ செய்யும்படி அப்பாவுக்குச் சைகை செய்தார். அப்பாவும் நிறைந்த மகிழ்ச்சியுடன் அதைச் செய்து முடித்தார்.

அப்போதுதான், நான் ஆசைப்பட்டுக்கொண்டிருந்த அது நடந்தது.

புகைப்படக் கருவியைப் பெற்றுக்கொண்ட வெள்ளைக்காரர், அவர்கள் முன்பு அமர்ந்த இடத்திலேயே அப்பாவையும் அம்மாவையும் வற்புறுத்தி அமரச் செய்தார். அம்மா எவ்வளவோ மறுத்தும், “பிளீஸ்...பிளீஸ்...” என்று குழைந்து, கொஞ்சு தமிழ் கலந்த ஆங்கிலத்தில் கெஞ்சுவதுபோல் பேசி அப்பா மடியில் அம்மாவைத் தலை சாய்த்துப் புன்னகைக்க வைத்தார்; படமும் எடுத்தார். எதையோ சாதித்துவிட்ட பெருமிதம் அவர் முகத்தில் நிரம்பி வழிந்தது.

எங்களருகே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சில சுற்றுலாப் பயணிகள் உட்பட நாங்கள் எல்லோரும் கை தட்டி ஆரவாரித்து  மகிழ்ச்சியை வெளிப்படுத்தினோம்.

வெள்ளைக்கரத் தம்பதியருடன் சற்று நேரம் அளவளாவிய பின்னர், ஏற்காடு மலையின் உச்சியிலிருந்த லேடீஸ் சீட்டை நோக்கிப் பயணித்தோம்.

பயணத்தின் போதே அம்மாவின் முகத்தை மிக உன்னிப்பாகக் கவனித்தேன். சற்று முன்னர்வரை அவர் முகத்தில் ஒட்டிக்கொண்டிருந்த குற்ற உணர்ச்சி ஏறத்தாழ மறைந்துவிட்டிருந்ததைக் காண முடிந்தது.

பயணம் முடிந்து வீடு திரும்பும்போது அந்தக் குற்ற உணர்ச்சி முற்றிலுமாய் அகன்றுவிட்டிருந்தது. மானசீகமாய் வெள்ளைக்காரத் தம்பதியருக்கு நன்றி சொன்னேன்.
========================================================================
கதை மாந்தர் ஒருவர் கதை சொல்வது, சிறுகதைக்கான உத்திகளுள் ஒன்று.