எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

நடுநிலை பிறழும் நடுவணரசு! உயர் நீதிமன்றம் குட்டு!!

இந்தி தெரியாதா ? தமிழ்நாட்டுக்கு ...

ஆயுர்வேதா, சித்தா ஆகியவை குறித்த வழக்கின் உயர் நீதிமன்ற விசாரணையில், ஆயுர்வேத மருத்துவத்துறைக்கு கடந்த 10 ஆண்டுகளில், ரூ3000 கோடியும், சித்தாவுக்கு 437 கோடியும் செலவழித்துள்ளதாக நடுவணரசு அறிக்கை கொடுத்துள்ளது.

அந்த அறிக்கையை ஆதாரமாகக்கொண்டு, “ஆயுர்வேதாவுக்கு 3000 கோடி ரூபாய் செலவழித்த நீங்கள், சித்தாவுக்கு 437 கோடி ரூபாய் மட்டும் செலவழித்துள்ளீர்களே, ஏன் இந்தப் பாரபட்சம்?(மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்)” என்று நீதியரசர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

பாலிமர் தொலைக்காட்சியில் இன்று[20.08.2020] பிற்பகல் 03.30 மணியளவில் இது குறித்த செய்தி வெளியிடப்பட்டது.

நீதியரசர்கள், மேற்கண்ட கேள்வியின் மூலமாக நடுவணரசின் நடுநிலை தவறிய செயல்பாட்டைக் கண்டித்திருப்பது நம்மைப்  பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்துகிற ஒரு நிகழ்வாகும்.

இந்த அரசின் பாரபட்சமான போக்கு உயர் நீதிமன்றத்தால் அம்பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதைவிடவும் பாரபட்சமான இன்னொரு செயல்பாட்டையும் முன்னிலைப்படுத்திட விரும்புகிறேன்.

மாநில மொழிகளின் வளர்ச்சிக்குச் செலவிடும்[???] தொகையைக் காட்டிலும் மிகப் பல மடங்கு இந்தி மொழிக்குச் செலவிடுகிறது அது. நாடு சுதந்திரம் பெற்றபோதிருந்து நிகழ்த்தப்படுகிற மாபெரும் பாதகச் செயல் இது.

இச்செயலை, தாய்மொழிப் பற்றாளர்கள் பலரும் அவ்வப்போது கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறார்கள். பலன் சிறிதும் இல்லை என்பது யாவரும் அறிந்ததே.

இப்போதிய சாதகமான  சூழ்நிலையைப் கருத்தில்கொண்டு மொழி குறித்ததும், சமூக நலன் குறித்ததுமான அமைப்புகள் ஒருங்கிணைந்து, நடுவணரசின் பாராபட்சமான போக்கு குறித்து நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தால்[ஏற்கனவே வழக்குத் தொடுக்கப்பட்டதா என்பதை நான் அறியேன்], நடுவணரசு நீதியரசர்களிடம் ‘வாங்கிக் கட்டிக்கொண்டு' கொஞ்சமேனும் திருந்த வாய்ப்பிருக்கிறது.

தாமதமின்றிச் செய்து முடிக்கப்படவேண்டிய கடமை இதுவாகும்.
=====================================================================

கொசுறுப் பதிவு!

நியூஸ் 7 தொலைக்காட்சி, சற்று நேரத்தில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் அவர்கள் ‘மீண்டு வர’ இசை ஆர்வலர்களின் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற இருப்பதாகவும், அனைவரும் கலந்துகொள்ளுதல் வேண்டும் என்றும் செய்தி[[பிற்பகல் 03.45 மணி] சொல்லிக்கொண்டிருக்கிறது.

நல்ல முயற்சி. 

மேலும், எஸ்.பி.பி.யுடன் உலகிலுள்ள அனைத்துக் கொரோனா நோயாளிகளும் மீண்டு வர வழிபாடு நிகழ்த்தலாமே?

ஒரு பெரும் நோயாளிக் கூட்டத்தையே சேர்த்துக்கொண்டால் கூட்டுப் பிரார்த்தனையால் பலன் விளையாதா? கடவுள்கள் கண்டுகொள்ள மாட்டார்களா?!