திங்கள், 1 பிப்ரவரி, 2021

ஜக்கி[வாசுதேவ்]யின் அசுர வளர்ச்சி! அவிழ்க்கப்படாத 'மர்ம' முடிச்சுகள்!!

தன்னைச் சத்குரு எனவும், தானே முக்திக்கு வழிகாட்டி எனவும் சொல்லிக்கொள்ளும் இவர் 1957இல் தெலுங்கராக மைசூரில் பிறந்தவர்; இதைத் தன்னுடைய மூன்றாவது பிறவி என்று சொல்லிக்கொள்ளும் இவர், தன் முதல் பிறவியில் பில்வாஸ் என்னும் தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்ததாகவும், இரண்டாவது பிறவியில் சத்குரு ஸ்ரீப்ரமா என்ற பெயரில் தேனி அருகில் பிறந்து ஊட்டியில் வாழ்ந்து வெள்ளியங்கிரி மலையில் உயிர் விட்டதாகவும் சொல்லிக்கொள்கிறார்.

தம் மூன்று பிறவியின் நோக்கம் ஒன்றே; அது தியானலிங்கம் கோவில் கட்டுவதே என்றும், அது முடிந்தவுடன் உயிர் துறப்பதாகவும் உறுதி கொடுத்திருந்தார் (அப்பணி முடிந்து 15 ஆண்டுகள் கடந்து போனது).

'ஆன்மீகப் பாதைக்குத் துறவற வாழ்க்கைதான் சிறந்தது; குடும்ப வாழ்க்கை ஒரு சுமையோடு மலை ஏறுவது போல கடினமானது' என்று உலக மக்களுக்குப் போதனை செய்த ஜக்கி வாசுதேவ், கோவையில் தன் சேவையைத் துவங்கும் முன், மைசூரில் ரிஷி பிரபாகர் என்ற யோகா குருவிடம், யோகா ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.

அங்கு அவர் விஜி என்ற பெண்ணைச் சந்திக்க நேர்ந்தது, அவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்துப் பெற்றவர், அவருடன் நெருங்கிப் பழகியதில் காதல் வயப்பட்டுத் திருமணமும் செய்துகொண்டார்['ஆன்மீகப் பாதைக்குத் துறவற வாழ்க்கைதான் சிறந்தது' என்று அவர் கூறியதை நினைவுகூர்க].

சில நாட்களுக்குப் பிறகு, கோவையில் சுதர்சன் வரதராஜ் [இவர் பிரபல ELGI வரதராஜ் அவர்களின் மகன்] என்பவரின் நட்பு இவருக்குக் கிடைத்தது. ஜக்கி வாசுதேவ் பற்றி அறிந்த இவர் தன் மனைவி பாரதி வரதராஜ் [இவர் ஆந்திர முன்னாள் எம்பி ஒருவரின் மகள்] அவர்களை யோகா வகுப்பிற்கு அனுப்பி வைக்க, அங்கு இவருடன் நெருங்கிப் பழகிய பாரதி வரதராஜினால் பலமுறை விஜிக்கும் ஜக்கி வாசுதேவ் அவர்களுக்கும் மனஷ்தாபங்கள் வந்ததாகவும் கூறப்படுகிறது.

பிறகு விஜி தனது “அணாகத்தா” சக்ராவில் இருந்து தனது உயிரை விட்டதாக ஜக்கி வாசுதேவ் கூறுகிறார்.

ஆனால், தனது மகளை ஜக்கி வாசுதேவ் கொன்றுவிட்டதாகவும், ஆசிரமத்தில் வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் விஜியின் தந்தை காங்கன்னா போலீஸிடம் புகாரும் கொடுத்துள்ளார்.

அதன்பின் பாரதி வரதராஜ் தனது கணவனை விவாகரத்துச் செய்துவிட்டு ஜக்கி வாசுதேவுடன் ஆன்மீகப் பணியாற்ற வந்துவிட்டார்.

விஜிக்கும் ஜக்கி வாசுதேவுக்கும் பிறந்த குழந்தை தான் ராதே. முக்திக்கு வழிகாட்டி என்று பிறர் வீட்டுப் பிள்ளைகளுக்கு மொட்டையிட்டு, சாமியாராக்கும் ஜக்கி வாசுதேவ் அவர்களின் செல்ல மகள், டீசர்ட் போட்டுக்கொண்டும் சார்ட்ஸ் போட்டுக்கொண்டும் பப், குடி, கொண்டாட்டம் என வளர்ந்த நவீன காலத்து மங்கையாக வலம் வருகிறார். “நீங்கள் என்றும் பக்கத்து வீட்டு விவேகானந்தாவையே விரும்புவீர்கள்; உங்கள் வீட்டில் உருவாக விடமாட்டீர்கள்" என்று ஜக்கி வாசுதேவ் கூறிய உபதேசம் பிறருக்கு மட்டும்தான் போலிருக்கிறது, உபதேசம் என்பதெல்லாம் ஊருக்கு மட்டுமே என்பதற்குச் சிறந்த உதாரணம் ஜக்கி வாசுதேவ் மட்டுமே.

ஈஷாவில் சந்நியாசம் எடுக்கிறவர்கள் முதலில் குடும்பத் தொடர்பை முழுமையாக நிறுத்திக்கொள்ள வேண்டும் . அவர்களின் கல்விச் சான்றிதழ்கள் முதற்கொண்டு அனைத்து ஆவணங்களும் ஈஷா மையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் போய்விடும். சம்பந்தப்பட்டவர்கள் பெயரில் இருக்கும் சொத்து, நகை, பணம் போன்றவைகூட ஈஷாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். இவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள்தான் என்னவென்பது தெரியவில்லை. கிட்டத்தட்ட அரை போதையில்தான் இவர்கள் இருப்பார்கள்.

18 வயதான பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே அமைத்துக்கொள்ளும் உரிமையைக் கொடுக்கும் அதே சட்டம்தான் வயதான பெற்றோர்களைக் கவனிக்காத பிள்ளைகளின் மேல் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும்  சொல்கிறது.

பாவம், பெற்றமனம் புகார் கொடுக்கவா முற்படும்?

புரண்டு அழ மட்டுமே தெரியும் அதற்கு.

"18 வயதான பிள்ளைகள் தன் சந்நியாசம் போக வேண்டுமா? இல்லை 10 வயதானாலும் போதும், என்னிடம் அனுப்பி வையுங்கள்" என்கிறார் ஜக்கி.

இவரால் 10 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்காக உருவாக்கப் பட்டதே இந்த சம்ஸ்கிருதி என்ற குருகுலப் பள்ளி. இதில் குழந்தைகளைக் சேர்க்கக் கட்டணம் 7 லட்சம்,

இங்கு அதிகாலை 5மணிக்கு எழுந்து, தீர்த்த குண்டம் எனும் குளத்தில் 10-12° குளிர்ந்த நீரில் குளியல். பின்பு யோகா, களரி பயிற்சி. பின் 2-3kms நடைப் பயிற்சி, பின் மீண்டும் குளியல். அதன்பின் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட உணவு, பின் மீண்டும் இரவு 7 மணிக்கே அடுத்தவேளே உணவு. இடையில் ஒன்றும் கிடையாது.

பிடிக்காமலும், உடல் நலம் குன்றியும் விலகினால் வாங்கிய பணத்தில் பத்து பைசாக்கூடத் திரும்பக் கொடுக்கப்பட மாட்டாது. பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு நைட்ரஸ் ஆக்சைடு கொடுக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

அந்த வயதில் அந்தப் பிள்ளைகள் அனுபவிக்க வேண்டிய தண்டனையா இது? இதுதான் குருகுலக் கல்வியா? இதுதான் சந்நியாசமா?

“குழந்தைகள் உங்கள் மூலம் இந்த உலகிற்கு வந்த ஒரு உயிர் மட்டுமே. அவர்களின் மேல் உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை, நீங்கள் எதையும் கற்றுத்தர முயற்சிக்காதீர் "- ஜக்கி வாசுதேவ்

அப்படியானால் இவர் செய்துகொண்டிருப்பது என்ன? அவர்களின் மேல் இவருக்கு என்ன உரிமை இருக்கிறது இப்படிக் கொடுமை செய்வதற்கு?

தன் சுயலாபத்திற்காகப் பிஞ்சுகளை வதைப்பதேன்?

இந்தக் குருகுலம் கற்பிக்கும் பாட்டும், ஆட்டமும், களரியும் வைத்துக்கொண்டு அவர்கள் வாழ்வில் என்ன சாதித்துவிடப் போகிறார்கள்? நல்ல கல்விமுறை என்பது வாழ்வை வளப்படுத்துவதாகதாக இருக்க வேண்டுமே தவிர, வாழ்வைக் கெடுப்பதாக இருக்கலாமா என்ற கேள்வியை மக்களாகிய உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து, இந்தியாவில் கர்நாடக இசைப்பாடகர் இருக்கும் சந்தீப் நாராயணுடன் ராதேக்கு காதல் மலர, சந்நியாசம் மட்டுமே முக்திக்கு வழி; என்னுடன் வந்துவிடுங்கள் என்று அனைவரையும் அன்போடு அழைத்து மொட்டையிடும் ஜக்கி வாசுதேவ் அவர்கள் தன் மகளான ராதேக்கு அவள் காதலிக்கும் காதலனையே திருமணம் செய்துவைக்க முடிவு செய்து, திருமணமும் முடிக்கிறார்.

அதுமட்டும் அல்லாது, சன்னியாசிகள் அனைவரும் முக்தியடைய, இந்தத் திருமண முகூர்த்தம் மற்றும் சாந்தி முகூர்த்தம் போன்ற நிகழ்ச்சிக்காக 24 மணி நேரம் உழைத்தால் போதும், முக்தி உறுதி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்

அத்தனைக்கும் ஆசைப்படு என இவர் சொல்வது இவரின் திருப்புதல்விக்கும், இவருக்கும் மட்டும் தான் போலிருக்கிறது.

ஈஷா யோகாவில் சந்நியாசியாகப் போனவர்களில் 80% பேர் படித்தவர்கள். இப்படிப் படித்தும் முட்டாள்களாக இருப்பது ஏன்?

இல்லை, மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை என்று படித்தும் படித்ததைத் தேர்வில் கக்கவும் தூண்டும் பள்ளிகளின் தவறா?

இல்லை, அனைத்தும் அறிந்தும் கண்டுகொள்ளாத அரசியல்வாதிகளின் தவறா?

யார்மீது தவறாக இருந்தாலும் சரி, நம்மை நாமே மாற்றிக்கொள்ள முற்படுவோம்,

இறை பக்தி வேறு, மூட நம்பிக்கை வேறு,

முக்தி என்பது இருக்கிறதோ இல்லையோ தெரியாது; நமக்கான வாழ்க்கை ஒன்று இருக்கிறது; நமக்கான குடும்பம் ஒன்று இருக்கிறது. அதைத் தொலைத்துவிட வேண்டாம்.

– க.பாரதிக் கண்ணன்

https://malaysiaindru.my/136890  [ 05.08.2016]

=================================================================================

சந்திப் பிழைகளும் நிறுத்தக் குறிகளும் மற்றும் சில பிழைகளும் சரிசெய்யப்பட்டதைத் தவிர, கட்டுரையில் வேறு எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. பதிவின் தலைப்பு என்னுடையது.

நன்றி: பாரதிக் கண்ணன்.