அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 17 ஜூன், 2021

6000 அழகிகளும் சீன அரசனின் 'சாகாவரம்' பெறும் ஆசையும்!!!

கி.மு.209இல் 'சின்' வம்சத்தைச் சேர்ந்த 'சின் சி ஹுவாங்' என்பவர்  'சீனா'வை ஆண்டுகொண்டிருந்தார்['சின்'இல் இருந்துதான் 'சீனா' என்னும் பெயர் உருவானது].

சீனாவில், சிறப்பான சட்டங்களை உருவாக்கி, மிகச் சிறப்பாக ஆட்சி செய்தவர் என்று வரலாற்று ஆசிரியர்களால் புகழப்பட்டவர் இவர். இவருக்கிருந்ததாகச் சொல்லப்படும் ஒரே பலவீனம் 'மரணபயம்'.

அள்ளக் குறையாத ஆசைகளையும், அனுபவிப்பதற்கான அளவிறந்த வசதிகளையும் பெற்றிருந்த  பேரரசர் 'சின் சி ஹூவாங்' சாகாவரம் பெற்றிட ஆசைப்பட்டார்.

அதற்கான 'மந்திர பானம்' ஒன்றைத் தேடிக் கொண்டுவரத் தன் அமைச்சர்களுள் ஒருவரான 'ஷூஃபூவை அயல்நாட்டுக்கு அனுப்பினார் மன்னர். அவர் நாடு திரும்பவே இல்லையாம்[மந்திர பானம் இல்லாமல் வந்தால் உடம்பில் உயிர் தங்காது என்பது அவருக்குத் தெரியாதா என்ன?].

மரணம் இல்லாமல் வாழ்வதற்கான மருந்தைக் கண்டுபிடிக்குமாறு மருத்துவர்களுக்கு உத்தரவு போட்டார் மன்னர். பெரும்பாலான மருத்துவர்கள் அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டார்கள். ஆய்வைத் தொடங்காமலிருந்த மருத்துவர்கள் உயிருடன் புதைக்கப்பட்டார்கள். மன்னரின் உத்தரவை எதிர்த்த தத்துவவாதிகளும் கொல்லப்பட்டார்கள்.

புரட்சி எதுவும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக, மக்கள் தலைவர்கள் பலரின் தலைகள் துண்டிக்கப்பட்டன.

மரணத்திற்கு எதிரான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால் தான் கடவுள் ஆகிவிடலாம் என்றும் கனவு கண்டார் 'சின் சி ஹூவாங்'. மக்கள் சிந்திக்கத் தொடங்கினால் தனக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வார்கள் என்றஞ்சி, நூலகங்களில் இருந்த வரலாற்று நூல்களையும் தத்துவ நூல்களையும் எரித்துவிடச் செய்தார்.

நாட்கள் கழிந்தனவே தவிர, தான் எதிர்பார்த்த மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், மாந்திரீகம், பில்லி சூனியம் என்பவற்றைச் செய்வோரின் உதவியையும் நாடினார் மன்னர். அவற்றாலும் பயன் கிட்டவில்லை.

வெகுவாக மனம் சலித்த நிலையில், தென்சீனக் கடலில் 'திஃபூ' தீவில் வசிக்கும் 'சூபு' என்னும் துறவியால் இதற்கான மருந்தைக் கண்டுபிடிக்க முடியும் என்று யாரோ ஓதி வைக்க, அவரைத் தேடிப்போய்ச் சந்தித்தார் மன்னர்.

'டாங்க்லாங்' மலையில் மரணத்தை வெல்வதற்கான மருந்து இருப்பதாகவும், அதை ஆண்கள் தொடக் கூடாது என்பதால், அதைத் தொட்டு எடுக்க 6000 கன்னிப் பெண்கள் தேவை" என்றும் துறவி சொன்னார்.

தன்னுடைய நாட்டிலிருந்த, 6000 அழகிய கன்னிப் பெண்களைத் தேடிக் கண்டுபிடித்து பிரமாண்டமானதொரு கப்பல் மூலம் தீவுக்கு அனுப்பி வைத்தார் மன்னர்.

'டாங்லாங்' மலை என்று ஒன்று இருப்பதாகத் துறவி 'சூபு' சொன்னது பொய் என்பது பின்னர் தெரிந்தது. அத்துடன், பொய்யுரைத்த துறவியும் 6000 அழகிகளும் காணாமல் போயிருந்தது மன்னரைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது[அவர்கள் யார் யாருக்கோ விற்கப்பட்டார்கள் என்பது வரலாற்றுச் செய்தி. துறவி தன்னை ஏமாற்றப்போவது தெரிந்திருந்தால் அந்த 6000 அழகுப் பதுமைகளையும் தன் அந்தப்புரத்திலேயே தங்கவைத்து, அதைச் சல்லாபபுரியாக இவர் ஆக்கியிருப்பாரோ என்னவோ ?!].

இவ்வாறான அனுபவங்களுக்குப் பிறகும் இவர் மனம் திருந்தாத நிலையில்.....

மருந்தைக் கண்டுபிடித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்த மருத்துவர்கள், ஒரு நாள் அதிகாலையில் மன்னரைச் சந்தித்தார்கள்; மரணத்தைத் தவிர்க்க மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும் சொன்னார்கள்; அதை இவருக்குக் கொடுக்கவும் செய்தார்கள். வாங்கிக் குடித்த மன்னர்  'சின் சி ஹூவாங்' பரலோகம் போய்ச் சேர்ந்தார்.

மருத்துவர்கள், மருந்தில் பாதரசம் கலந்திருந்தது மன்னருக்குத் தெரிந்திட வாய்ப்பே இல்லாமல் போனது!

                                                       ...............

*** இது கதை அல்ல; வரலாறு என்கிறது இந்தக் கட்டுரையை வெளியிட்ட இணையத்தளம். இந்தப் பதிவு அதிலிருந்து சுடப்பட்ட சிறு பகுதி மட்டுமே; சற்றே மாற்றியமைக்கப்பட்டதும்கூட.

===========================================================================

https://www.neotamil.com/history/imsai-arasargal-series-most-breathtaking-life-history-of-china-first-emperor-qin-shi-huang/