பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 18 ஜூன், 2021

மதனும் 'மதன்'களும் !!!

'யூடியூபர்' என்று ஊடகங்களால் அடைமொழி கொடுத்து அழைக்கப்படுகிற 'பப்ஜி மதன்' குறித்த பரபரப்பான செய்திகளை அறிந்திருப்போருக்கு, இவன் கைது செய்யப்பட்டதும் தெரிந்தே இருக்கும்.

இவன் யூடியூபில் ஆபாசமாகப் பேசியது, இவன் மனைவியும் இவனுக்கு உறுதுணையாக இருந்ததோடு அவரும் ஆபாசமாக உரையாடியது, இவர்களைக் காவல்துறை கைது செய்தது போன்ற தகவல்களைவிடவும், நம்மை விடுபட இயலாத பிரமிப்பில் ஆழ்த்துவது, ஆபாசப் பேச்சின் மூலம் மாதம் 10 லட்சத்துக்கு மேல் இவன் வருமானம் பண்ணியதும், கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள கார்கள், சொகுசு பங்களாக்கள், வங்கி முதலீடுகள் என்று பெரும் சொத்துக்கு அதிபதி ஆனதும்தான். 

யூடியூப் சேனல் மூலமாக மட்டும் மாதம் 10 லட்சத்திற்கும் மேல் வருமானம் பார்துள்ளான் இவன். அது மட்டும் இல்லாமல் பிற யூடியூப் சேனல்களுக்குத் தனது ஆபாச வீடியோக்களை விற்பது மூலமாகவும் நிறையச் சம்பாதித்துள்ளான் என்கின்றன ஊடகங்கள்.

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக முகத்தைக் காட்டாமல், தான் யார் என்ற அடையாளத்தையும் வெளிகாட்டாமல் ஆரவாரமாகவும் ஆபாசமாகவும் தனது யூடியூப் பக்கத்தில் பேசியவன் இவன். இவனது பேச்சால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள் கண்மூடித்தனமாக இவனது ரசிகர்களாக[ரசிகர்களா, அடிமைகளா?] ஆனார்களாம்.

இவனுடைய யூடியூப் பக்கத்திற்கான வருகையாளர்[சந்தாதாரர்] எண்ணிக்கை 7.8 லட்சம்

இவனுடைய யூடியூப் சேனலைப் பின்தொடர்வோரில் பதின் பருவத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அதிகம். குறிப்பாக 13 முதல் 20 வயதுக்குட்பட்டவர்களே பெரிதும் பின்தொடர்ந்தனர்.

மதனின் ஆபாச பேச்சுக்கான 'யூடியூப் பக்கம்', இவனின் தோழியும் மனைவியுமான கீர்த்திகா பெயரில்தான் இருந்துள்ளது. மேலும், மதனின் யூடியூப் சேனலுக்கு நிர்வாகியாகவும் அவர் இருந்துள்ளார். மதன் யூடியூப் சேனலில், மதனின் நேரலை வரும்போது கீர்த்திகாவும் நேரலையில் வந்து ஆபாசமாகப் பேசியுள்ளாராம்.

'பப்ஜி'யை யூடியூபில் ஸ்டீரிம் செய்து பெண்களுடன் ஆபாசமாகப் பேசியதுடன், மதன் அவர்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு வரச்செய்து, [தன் முகம் காட்டாமல்]நிர்வாணப் புகைப்படங்களைப் பார்க்கச் செய்திருக்கிறான்; வீடியோ கால்களையும் செய்து பலரின் வாழ்க்கையைச் சீரழித்துள்ளதாகவும் கூறப்படுகிறது[இச்சைகளைத் தூண்டுவதன் மூலம் ஆண்களும் சீரழிக்கப்பட்டிருக்கலாம்].

நம்மைத் திகைக்க வைக்கிற விடை தெரியாத கேள்வி என்னவென்றால்.....

நம்ம ஊர் இளசுகளும் பழசுகளுமான ஆண்களும் பெண்களும் இத்தனை பலவீனமானவர்களா? இப்படியான பலவீனங்களுக்கு மனதில் இடமளிப்பதும் தவறுதானே?

"ஆம்" என்று சொல்ல வைத்திருக்கிறது இந்தச் சம்பவம். 

உலக அளவில், ஆபாசமாக எழுதியும், பாலுறவு நிகழ்வுகளை அப்பட்டமாகப் படம்பிடித்தும் கோடி கோடியாய்ச் சம்பாதிக்கும் தொழில் அமோகமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதை[சில நாடுகளில் அரசாங்கத்தின் அனுமதியோடும் நடக்கிறது] நம்மில் பலரும் அறிந்திருக்கக்கூடும்.

ஆபாசமாகப் பேசி மட்டுமே கோடி கோடியாய்ச் சம்பாதிக்க முடியும் என்பதை[இவன் சேலத்துக்காரன். என் பக்கத்து ஊர்க்காரனாக்கும்!] மதன் சாதித்துக் காட்டியிருக்கிறான்.

உலக அளவில் எப்படியோ, இந்த நாட்டில் இப்படி ஆபாசமாகப் பேசிப் பேசியே கோடிகளுக்கு அதிபதி ஆனவன் இவன் மட்டும்தானா? இன்னும் பல மதன்கள் இருக்கிறார்களா?[தேடிக் கண்டறிய வேண்டியது காவல்துறையின் கடமை],

இவனுக்கு முன்னோடிகள் உண்டா?

உண்டோ இல்லையோ, 13 வயது முதல் 20 வயதுக்கு உட்பட்ட பதின் பருவத்தினர் மனங்களில் பாலுணர்வைத் தூண்டிய இவனே இன்னும் பல மதன்களுக்கு 'முன்னோடி'யாக அமையக்கூடும்!

இவன் விசயத்தில் அரசாங்கம் மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டிய நேரம் இது!

====================================================================================

***தகவல்கள் ஊடகச் செய்திகளிலிருந்து சேகரிக்கப்பட்டவை.