எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

சனி, 11 செப்டம்பர், 2021

இதனாலெல்லாம் பக்தி வளராது! வளரவே வளராது!!

#நீலகிரி மாவட்டம், கூடலூர் முதுமலைக் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. 

விழாவை முன்னிட்டு அங்குள்ள விநாயகர் கோவிலில், பழங்குடியினர் தங்கள் பாரம்பரிய முறைப்படி, சிறப்புப் பூஜை செய்தனர்.

அதன் பின்னர், வளர்ப்பு யானைகளான 'மசினி', 'கிருஷ்ணா' ஆகியவை மணியடித்துக்கொண்டே கோவிலைச் சுற்றிவந்து பூஜை செய்ததுடன், விநாயகரை வணங்கவும் செய்தன.

[வணங்கிய யானைகளுக்கு வழக்கமாகத் தரப்படும் உணவுகளுடன் பழங்கள், பொங்கல் ஆகியவையும் வழங்கப்பட்டன]#

மேற்கண்டது ஒரு நாளிதழ்ச் செய்தி[https://temple.dinamalar.com/news_detail.php?id=116874].

இதைத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது, அது.

                                  *  *  *

'விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகரை வணங்கிய வளர்ப்பு யானைகள்'

இப்படித் தலைப்புக் கொடுத்துச் செய்தி வெளியிட்டுள்ள நாளிதழ்க்காரரே,

வளர்ப்பு யானைகள், பயிற்சியளிக்கப்பட்டு 'நடனம்' ஆடுவது, பந்தை உதைத்துக் 'கால்பந்து' விளையாடுவது பற்றியெல்லாம் நம் மக்கள் அறிந்துகொண்டிருக்கிறார்கள். முறையான பயிற்சி கொடுத்தால்.....

மசினியும் கிருஷ்ணாவும் விநாயகர் சிலையை உடைக்கவும் செய்வார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும்; கொஞ்சமே கொஞ்சம் சிந்தித்தால் உங்களுக்கும் புரியும்.

எனவே, 

இனியும் இம்மாதிரி உதவாக்கரைத் தகவல்களுக்கு முக்கியத்துவம் தராமல், அறிவு வளர்ச்சிக்குப் பயன்படுகிற வகையில் உருப்படியான செய்திகளை வெளியிடுங்கள் ஐயா!



=====================================================================================