எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

சனி, 15 ஜனவரி, 2022

அணுக்களால் ஆன மனிதன் ஆறறிவு பெற்றது எப்படி?!?!

'மனித உடம்பு 30,000,000,000,000 அணுக்களால்[30 trillion] ஆனது' என்கிறது அறிவியல். ஒவ்வொரு வினாடியிலும் கோடிக்கணக்கான உயிரணுக்கள் பிறக்கின்றன; அதே எண்ணிக்கையில் மடியவும் செய்கின்றன.

மரபணு, எலும்பணு, ரத்த அணு, தசை அணு, நரம்பணு, கொழுப்பணு என்று ஏறத்தாழ 200 வகையான அணுக்கள் மனித உடம்பில் உள்ளதாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது.

  • ஒவ்வொரு வகை அணுக்களும் ஒன்றாக இணைந்து[குழு சேர்தல்], மேற்கண்டவற்றையும், பிற உறுப்புகளையும் உருவாக்கும் பணிகளைச் செய்கின்றன[..... Different tissues then combine and form specific organs].

நாம் எந்நேரமும் சிந்தித்துக்கொண்டே இருக்கிறோம். ஒரு நாளில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான விஷயங்களைச் சிந்திக்கிறோமாம்.  சிந்திக்க வைப்பது மூளையாகும்.

மூளை என்று பொதுவாகச் சொல்வதைக் காட்டிலும், மூளையிலுள்ள அணுக்கள் இணைந்து சிந்திக்க வைக்கின்றன என்பதே சரியாக இருக்கும்.

இங்கே ஒரு கேள்வி எழுவது தவிர்க்க இயலாததாகும். அது.....

குழு சேராத நிலையில், தனித்தனியாக இயங்கும் அணுக்களுக்குச் சிந்திக்கும் திறன் உள்ளதா?

"இல்லை" என்பதே சரியான பதிலாக இருக்கும் என்பது என் நம்பிக்கை[தவறு எனின் இந்தப் பதிவு முற்றிலுமாய்ப் புறக்கணிக்கத்தக்கது]. ஆனால், அவை குழுவாக இணையும்போது சிந்திக்கும் திறன் உருவாகிறது.

இது வியக்கத்தக்க நிகழ்வாகும். 

இது எப்படிச் சாத்தியமாகிறது?

இந்நாள்வரை அறிவியலாளரால் இதற்கு விடை காண இயலவில்லை.

'விடை கிடைக்கும்போது கிடைக்கட்டும்' என்று தொடர்ந்து அவர்கள்[அயல்நாட்டு விஞ்ஞானிகள்] ஆய்வு நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார்கள்.

என்றேனும் ஒரு நாள் கிடைக்கக்கூடும். அதுவரை நாம்.....

வழக்கம்போல,  சாமி சிலைகளுக்குத் தங்கக் கிரீடம் சூட்டிச் சரம் சரமாய் நகைகள் பூட்டித் தெருத்தெருவாய்ப் பவனி வருவதிலும், ஆறுகளுக்குக் கொண்டுசென்று குளிப்பாட்டுவதிலும், ஆண்டு தவறாமல் கல்யாணம் ஆன சாமிகளுக்கு மீண்டும் கல்யாணம் கட்டிக் குதூகளிப்பதிலும், பால் வடியும் வேப்ப மரங்களுக்குப் பாவாடை கட்டிக் குங்குமம் பூசிக் கும்பிடுவதிலும், புற்றுகளுக்குப் பால் வார்த்துப் பாம்புகளைக் கடவுளாக்கி வழிபடுவதிலும் இப்படியாக இன்னும் பல ஆன்மிகரீதியான கடமைகளை ஆற்றுவதில் நம்மை அர்ப்பணித்துக் கொண்டிருப்போம்.

நாமல்லவோ புத்திசாலிகள்!!!
============================================================================
குறிப்பு: 'பரிணாம வளர்ச்சி'யால் மனிதன் ஆறறிவு பெற்றான் என்பது என் மரமண்டைக்குப் புரியாதது, இப்பதிவு உருவானதற்கான முக்கியக் காரணம் ஆகும்!