எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வியாழன், 10 பிப்ரவரி, 2022

வாரத்தில் ஒரு நாள் காவி உடை 'கட்டாயம்' ஆகுமா? எப்போது?!

//'இந்துக் கோயில்களுக்குள் வேட்டி தவிர்த்த உடையுடன் நுழைவதைத் தடுக்கவும், 'பிற மதத்தவர் உள்ளே நுழையக் கூடாது' என்று கோயில்களின் முன்னால் பெயர்ப் பலகை வைக்கவும் உத்தரவிடக் கோரி வழக்குத் தொடுக்கிறார்கள்.

'ஹிஜாப்'புக்காகவும் 'வேட்டி'க்காகவும் போராட்டம் நடத்துகிறார்கள்.

இவையெல்லாம் இந்த நாட்டில்தான் நடக்கின்றன.

இதென்ன மதச் சார்பற்ற நாடா, மதங்களால் பிளவுபட்ட நாடா? கோயில்களுக்குள் வேட்டியுடன்தான் செல்ல வேண்டும் என்று ஆகமம் சொல்கிறதா?//

மேற்கண்ட கேள்விகளை எழுப்பி, பெரிதும் மன வேதனைக்குள்ளாகியிருப்பவர் சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் அவர்கள்[இது, பிற்பகல் 03.00 மணியளவில் 'பாலிமர்' தொலைக்காட்சியில் வெளியான செய்தி].

இதற்கு முன்னரும் இவை போன்ற மூடத்தனமான செயல்களை நீதியரசர்கள் கண்டித்திருக்கிறார்கள். 

'ஆடையால் போர்த்தப்படும் உடல் அழியக்கூடியது. ஆன்மா மட்டுமே நிலைபேறுடையது. பல பிறவிகள் எடுத்து, செய்த புண்ணியங்களால் இறைவனின் திருவடி சேர்தல்தான் அது பிறவி எடுத்ததன் பயன்'  என்றிவ்வாறெல்லாம் அறநெறி புகட்டுகிற மதத்தைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்ளும் இவர்களுக்கு, நீதியரசர்கள் கொடுக்கும் சூடு இதுவரை உறைத்ததில்லை; இனி உறக்கப் போவதும் இல்லை; 

ஆபாசங்களை மறைக்க உதவும் ஆடைக்காக, புண்ணிய பூமி எனப்படும் இந்த நாட்டைக் கலவரப் பூமியாக்கி,  மயான பூமியாகவும் ஆக்கிய பிறகுதான் இவர்கள் ஓய்வார்கள் போலிருக்கிறது.

போகிற போக்கைப் பார்த்தால், வாரத்தில் ஒரு நாள், அல்லது குறைந்தபட்சம் மாதத்தில் ஒருநாளேனும் காவி ஆடை உடுப்பதைக் காட்டாயம் ஆக்குவார்களோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது!

==========================================================================