எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

நான்கு காணொலிகளும் ஒரு 'சுருக்... நறுக்' கேள்வியும்!!

 

நான்கு காணொலிகளிலும் இடம்பெற்றுள்ள விலங்குகளுக்கிடையிலான கொடூரத் தாக்குதல் காட்சிகள் கடின நெஞ்சங்களையும் கலங்க வைப்பவை.

இணையத் தளங்களிலும், காணொலிகளிலும் இவை போன்றவையும், இவற்றைவிடவும் பயங்கரமானவையுமான, குலை நடுங்க வைக்கும் வாழ்க்கைப் போராட்ட நிகழ்ச்சிகள் நிறையவே காணக்கிடக்கின்றன.

மனிதக் கண்களுக்குத் தென்படாத வனவிலங்கு மோதல்களோ  கணக்கில் அடங்காதவை.

ஒட்டுமொத்த உலகமும் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருந்த பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளில் விலங்குகளுக்கிடையே நடந்த மோதல் நிகழ்வுகள் அளவிறந்தவை.

அந்த விலங்குகள் அனுபவித்த சித்திரவதைகளும் துன்பங்களும் அனுமானங்களுக்குக்குள் அடங்காதவை.

அனைத்தையும், சில கணங்கள் ஒருங்கிணைத்து மனதில் பதிய வையுங்கள். இனி, நான் கேட்க விரும்பிய அந்த  ஒரு 'சுருக்... நறுக்" கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன்.

கேள்வி:

கோடானுகோடி உயிரினங்களில், விலங்குகளுக்கிடையே மட்டுமான இத்தனைக் கொடூர மோதல்களையும், சித்திரவதைகளையும், அழிவுகளையும் நம் பக்தகோடிகள் பார்க்க நேர்ந்தாலோ, பார்த்திருந்தாலோ, மனம் வெறுத்து, கடவுளைக் கருணை வடிவானவர் என்று நம்பியது தவறு என்று உணர்ந்து, இனியேனும் அவரைத் துதிபாடிக் கொண்டாடுவதை நிறுத்துவார்களா?

நிறுத்தமாட்டார்கள். 

"எல்லாம் 'அவன்' நடத்தும் நாடகம்" என்று படைத்தவனை வியந்து பாராட்டவே செய்வார்கள்.

பக்தியுணர்வு அவர்களின் உடம்பிலுள்ள அனைத்து உயிரணுக்களிலும் ஊறிக்கிடக்கிறது. அத்தனை எளிதில் அவர்கள் திருந்தமாட்டார்கள்!

==========================================================================