அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 10 மார்ச், 2022

'உக்ரைன் போர்'... சாதனை நிகழ்த்துவாரா ரஷ்ய அதிபர் 'புடின்'?

மில்லியன் கணக்கில் மனித உயிர்களைப் பலிகொண்ட போர்கள் குறித்த ஒரு புள்ளிவிவரம்:

*நெப்போலியன் போர்கள்(1803-1815) - 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நெப்போலியன் போனபார்டே நடத்திய போர்களில் 3.5 முதல் 6 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர்.

*ரஷ்யப் பேரரசின் வீழ்ச்சி மற்றும் கடைசி ரஷ்ய ஜார் மரணத்தைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் நடந்த ரஷ்ய உள்நாட்டுப் போரில் சுமார் 5 முதல் 9 மில்லியன் மக்கள் இறந்தனர். வரலாற்றின் மிகவும் மோசமான உளநாட்டுப் போர்களில் இதுவும் ஒன்றாகும்.

முதல் உலகப் போர்(1914-1918): முதல் உலகப் போரில் 20 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

*லூஷன் கலகம்(755-763) டாங் ஜெனரல் வடக்கில் ஒரு போட்டி வம்சத்தை நிறுவியபோது சீன டாங் வம்சத்தில் அன் லுஷன் கிளர்ச்சி நடந்தது. வல்லுநர்கள், இதில் 13 முதல் 36 மில்லியன் பேர்வரை உயிரிழந்துள்ளதாகக் கணக்கிட்டுள்ளனர்.

தைப்பிங் கிளர்ச்சி(1850): தைப்பிங் கிளர்ச்சியின்போது,  20 முதல் 100 மில்லியன் மக்கள் (பெரும்பாலும் பொதுமக்கள்) கொல்லப்பட்டனர்.

*ஐரோப்பாவில் மங்கோலிய வெற்றிகள் குறித்த வரலாறு மிகவும் மோசமான ஒன்றாகும். 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கி, மங்கோலியர்கள் பூமியின் கிட்டத்தட்ட 20 சதவீத நிலத்தைக் கைப்பற்றினர். இந்த வெற்றிகளின்போது இறந்தவர்களின் எண்ணிக்கை 60 முதல் 70 மில்லியன். மங்கோலியர்களால் கொல்லப்படுவதைத் தவிர்ப்பதற்காகச் சுமார் 1,00,000 சீன மக்கள் தற்கொலை செய்துகொண்டதாக நம்பப்படுகிறது.

*சீனாவின் மன்ச்சு போர்கள்(17ஆம் நூற்றாண்டு): சீனா சுமார் 25 மில்லியன் உயிர்களை இழந்தது,

இரண்டாம் உலகப் போர்(1938-1945): 40 முதல் 85 மில்லியன் வரையிலான இறப்பு நிகழ்ந்தது.  

                                          *   *   *   *   *

மேற்கண்டவை, கடந்த காலங்களில் நிகழ்ந்த போர்கள். இப்போது நிகழ்ந்துகொண்டிருப்பது, ரஷ்ய அதிபர் 'புடின்' அவர்களால் தொடுக்கப்பட்ட போர் ஆகும்.

இந்தப் போர், சற்று முன்னர்வரை[இந்திய நேரம்: 10.03.2022 முன்னிரவு 20.00]யிலான செய்திகளின்படி, தொடர்ந்து நடைபெறுகிறது. நிறுத்தப்படுவதற்கான அறிகுறியும் தென்படவில்லை[Russia-Ukraine war live updates: Ukraine's Dmotry Kuleba says no progress on ceasefire]. 

இந்தவொரு சூழலில், இனம் புரியாத உள்மன உந்துதல் காரணமாகப் 'புடின்' அவர்களுக்கு அடியேன் சமர்ப்பிக்கும் வேண்டுகோள்:

'வெகு வெகு வெகு சாமானியனும், ஒரு தமிழ்ப் பதிவரும் ஆன என்னைப் பற்றித் தாங்கள் அறிந்திருக்க 100% வாய்ப்பே இல்லை. ஆயினும், நான் முன்வைக்கும் இந்த வேண்டுகோளை எவ்வகையிலேனும் தாங்கள் அறிய நேர்ந்தால், இது குறித்துப் பரிசீலனை செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

போரை நிறுத்தும் எண்ணம் தங்களுக்கு இல்லவே இல்லை என்றால்.....

கடந்த காலங்களில் நடைபெற்ற போர்களால் நேர்ந்த உயிர்ப்பலிகள் குறித்த ஒரு பட்டியலை மேலே தந்துள்ளேன். நேரம் ஒதுக்கி, பலியான உயிர்களின் எண்ணிக்கையை ஒரு முறை உற்று நோக்குங்கள்.

உக்ரைன் போரை எக்காரணம் கொண்டும் நிறுத்தாமல் நடத்துவீர்களேயானால், நிச்சயமாக இது உலகப் போராக மாறிட வாய்ப்புள்ளது. மூன்றாவதாக ஒரு உலகப்போர் நடக்குமேயானால், அதில் பலியாகும் மனித உயிர்களின் எண்ணிக்கை, கடந்த காலப் போர்களில்[தனித்தனியாக] பலியான உயிர்களின் எண்ணிக்கையை மிஞ்சும் என்பதில் சந்தேகமே இல்லை[அதிகபட்சமாக 'தைப்பிங் கிளர்ச்சியில் 100 மில்லியன் உயிர்கள் பலி. மொத்த எண்ணிக்கையைக் கணக்கிட்டால் அது நம்மைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும்].

உக்ரைன் போர் காரணமாக விரிவடையவிருக்கும் 3ஆம் உலகப் போரில், 100 மில்லியனுக்கு அதிகமாக மக்கள் உயிரிழப்பார்களேயானால், அது தங்களால் நிகழ்ந்த சாதனை என்று உலக வரலாற்றில் பதிவு செய்யப்படும். இதுவரை நிகழ்த்தப்பட்ட சாதனைகளை முறியடித்தவர் என்னும் பெருமையைப் பெறுவீர்கள்!

வாழ்த்துகள்! நன்றி!!

==========================================================================

https://tamil.boldsky.com/insync/pulse/most-brutal-wars-in-the-history-in-tamil/articlecontent-pf252141-033931.html?ref_medium=Desktop&ref_source=BS-TA&ref_campaign=Similar-Topic-Slider