அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 11 மார்ச், 2022

"ஒரே நாடு ஒரே தேர்தல்'... உறுத்துதே!!!

"அண்மையில் நடந்துமுடிந்த தேர்தல்களில், உத்திரப்பிரதேசம் முதலான 4 மாநிலங்களில் 'பாஜக' பெற்ற வெற்றியை அடுத்து, ஊடக நிருபர்களுக்கு, தமிழ்நாடு 'பாஜக' தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில்,  2024இல் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' வந்தாலும் எதிர்கொள்ளத் தயார் என்று தெரிவித்தார். ஒரே நாடு ஒரே தேர்தலுக்குத் தயாராகிவிட்டதாகத் தேர்தல் ஆணையர் கூறியுள்ளதால் 2024 அல்லது 2026இல் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறலாம்" என்றார்.[https://www.dailythanthi.com/News/TopNews/2022/03/10143258/BJP-rule-in-Tamil-Nadu-in-2024-or-2026--Annamalai.vpf]

'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்று பேசுவதை, இவர் உட்பட 'பாஜக' கட்சிக்காரர்கள் அண்மைக்கால வழக்கமாக்கியிருக்கிறார்கள்.

'நாடாளுமன்றத்திற்கோ, மாநிலச் சட்டமன்றங்களுக்கோ இடைத் தேர்தல்கள் நடத்துவதைத் தவிர்த்து, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓரே ஒரு காலக்கட்டத்தில் நடத்தி முடித்தல்' என்பதைத்தான் இவர்கள் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்று ஆளாளுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் இப்படிச் சொல்வது நமக்கு ஒரு பொருட்டல்ல; ''ஒரே நாடு[இந்தியா]' என்று சொல்வதுதான் நம் நெஞ்சை உறுத்துகிறது.

'ஐந்தாண்டுக்கு ஒரு முறை மட்டுமே தேர்தல் நடத்தப்படும்' என்று சொன்னாலே, அந்தத் தேர்தல் இடம்பெறுவது  இந்த நாட்டில்தான் என்பது சொல்லாமலே புரிகிற ஒன்று. 

எனவே, 'ஒரே நாடு' என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஒரு நாட்டுக்குள்[இந்தியா] இருபது முப்பது என்று பல இந்திய நாடுகளா உள்ளன? 

இருக்கிற ஒரு இந்திய நாட்டுக்குத் தேர்தல் நடத்தாமல், வேறு சில/பல நாடுகளுக்கும் சேர்த்தா இங்கு தேர்தல் நடத்துகிறோம்?

இல்லையே!

'உங்க குடும்பத்தைப் பத்தி ஏதும் சொல்லுங்க"ன்னு ஒருத்தர் கேட்டா, "எனக்கு ஒரு பொண்ணு ஒரு பையன்"னு ஆரம்பிச்சு, சொல்ல நினைப்பதைச் சொல்லாமல், "என்னுடையது ஒரே குடும்பம்"னு சொல்லித் தொடங்குவது எப்படியோ அப்படித்தான், "ஒரே நாடு[இந்தியா]..." என்பதும். 

இனியும், இவர்கள் இப்படிச் சொல்லிச் சொல்லி, 'இந்த நாடு[இந்தியா] எதிர்காலத்தில் ஒரே நாடாக இருக்கும் வாய்ப்பு இல்லாமல் போகுமோ' என்னும் அவநம்பிக்கையை நம் மக்கள் மனங்களில் விதைக்க வேண்டாம் என்பது நம் வேண்டுகோள்.

"இந்தியாவில் இனி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே தேர்தல் நடத்தப்படும்" என்று சொல்வதே போதுமானது. தேவையற்ற சொல்லாடல்கள் தவிர்க்கப்பட வேண்டியவை!

==========================================================================