எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வியாழன், 14 ஜூலை, 2022

அடங்காத காமமும் விடை தெரியாத கேள்வியும்!!!

 https://tamil.asianetnews.com/crime/illegal-love-affair-esi-drug-employee-murder-murder-college-women-professor-arrest-kanniyakumari-rezrvq  -Jul 14, 2022

மேற்கண்ட தளம், 'ஒரு பேராசிரியைக்கு இத்தனை காம வெறியா!?" என்று தலைப்பிட்டு, அந்தப் பேராசிரியை தன் கள்ளக் காதலனை 40க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்திக் கொலை செய்த நிகழ்வைச் செய்தியாக வெளியிட்டுள்ளது.

ஓர் இணையதளம் என்ற வகையில், "பேராசிரியைக்கு இவ்வளவு காம வெறியா?" என்று கேட்டிருப்பது ஏற்றதொரு ஊடக நெறியாகத் தோன்றவில்லை.

காம உணர்ச்சி என்பது மனித இனத்துக்குப் பொதுவானது எனினும், அவ்வுணர்ச்சி, அத்தனை மனிதர்களுக்கும் ஒரே அளவினதாக இல்லை என்பதை அந்தத் தளத்துக்காரர் அறிந்திருக்கவில்லை.

கொஞ்சுண்டு காம உணர்ச்சியோடு காலம் கடத்துபவர்களுக்கிடையே மலையளவுக் காமத்தைக் கட்டுப்படுத்த இயலாமல் அதனுடன் அல்லாடுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

பேராசிரியை அவர்கள் அத்தகைய அல்லாட்டக்காரர்களில் ஒருவராக இருக்கலாம்.

இந்தப் பேராசிரியைக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதையும் தளத்துக்காரர் சுட்டிக்காட் வடடியிருக்கிறார். ஒன்றென்ன, ஒன்பதைப் பெற்றெடுத்தாலும் 'அது' குறைய வேண்டும் என்பதில்லை. அவரவர் உடலமைப்பையும் மனப் பக்குவத்தையும் பொருத்து 'அது' கூடும்; குறையும்.

2013இல் இவருக்கும் ரதீஷ்குமாருக்கும்[கள்ள உறவுக்காரன்] இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளத்தொடர்பாக மாறியதாம்.

தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனை விவாகரத்துச் செய்தார் பேராசிரியை; குழந்தைகளையும் பிரிந்தார்.

கள்ள உறவு நீடித்த நிலையில் ரதீஷ்குமாருக்குத் திருமணம் ஆனது.

பேராசிரியையுடனான தொடர்பை அவர் துண்டித்தார்.

உடலுறவுக்கான தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பெரும் துயருக்கு ஆளானர் பேராசிரியை.

உறவைத் தொடர ஒரு பெரும் தொகையை ரதீஷ் கேட்டுள்ளார். பேராசிரியை கொடுத்தார். இருந்தும், அவருடன் 'இருந்து' சுகம் வழங்க மறுத்தார் ரதீஷ்[பிறிதொரு ஊடகச் செய்தி இது].

கணவனையும் பெற்றெடுத்த மழலைகளையும் பிரிந்தது; கேட்ட பெரும் தொகையைக் கொடுத்தது; கட்டிய மனைவி போல் வாழ்ந்தது என்றிப்படிக் காதலன் மீது கொண்ட அளப்பரிய நேசத்தால் செய்த தியாகங்கள் வீணாகிப் போன ஆத்திரத்தில், ஓரே ஒரு முறை தன்னைச் சந்திக்குமாறு கெஞ்சி உடன்பட வைத்து, உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, அவன் மயக்கமடைந்த நிலையில், கத்தியால்[40 இடங்களில்] அந்தத் துரோகியை[?]க் குத்திக் கொலை செய்துவிட்டு காவல்துறைக்கும் தகவல் அனுப்பினார் பேராசிரியை.

மேம்போக்காகப் பேராசிரியையின் செயல்பாடுகளை ஆராய்ந்தால், கட்டுக்கடங்காத காம வெறி கொண்ட பெண் என்று சாடத்தான் தோன்றும். சற்றே நுணுகி ஆராய்ந்தால்.....

இன்றையச் சமூகச் சூழலில், ஒரு பெண் கள்ளக் காதலனை நம்பி, கட்டிய கணவனையும் பாசத்துக்குரிய பிள்ளைகளையும் பிரிந்து அவனுடன் வாழ்ந்து, பின்னர் அவனாலும் நிராகரிக்கப்படும் நிலையில் அவனையே கழுத்தறுத்துக் கொல்லுதல், சூழ்நிலைக்கேற்பக் கணவனையே தீரத்துக்கட்டுதல் என்பவையெல்லாம் இயல்பாகிவிட்ட நிகழ்வுகளே என்று சொல்லலாம்[அடாத செயல்களைச் செய்யத் தூண்டும் 'காம வெறி'யை அறிவியல் ரீதியாகக் கட்டுப்படுத்துவதற்கான வழிவகைகளைக் கண்டறிவது கட்டாயமானதும் உடனடியானதுமான தேவை ஆகும்].

எனவே, பேராசிரியையின் செயல் பத்தோடு பதினொன்று என்று கருதி அவருக்காக அனுதாபப்படலாமே தவிர அடங்காத காமவெறியள், காமாந்தகி என்றெல்லாம் வசைபாடத் தேவையில்லை.

ஆனாலும்.....

"பெற்றெடுத்த தாய் 'இருந்தும் இல்லாத' நிலையில், தந்தை நிலையில் உள்ள ஓர் ஆடவனால் வளர்க்கப்படும் அந்த இரண்டு மழலைகளின் எதிர்காலம் எவ்வாறு அமையும்?" என்று நம் உள்மனம் கேள்வி எழுப்புவதை நம்மால் தவிர்க்க இயலவில்லை. 

ஏற்றதொரு சரியான பதிலைத் தருவதும் நமக்குச் சாத்தியமானதாக இல்லை!

======================================================================================