எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 25 ஆகஸ்ட், 2022

'ஓஷோ' சொன்ன ஒரு 'ஹி... ஹி... ஹி!!!' கதை!

'ஒரு நகரத்தில், ஒரு கடையின் முன்பு இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள்.

அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களில் ஒரு பத்து வயதுச் சிறுவனும் இருந்தான்.

அங்கு வந்த ஒரு மனிதர், "அவர்கள் யார்?" என்று சிறுவனிடம் கேட்டார்.

"இருவரில் ஒருவர் என் தந்தை" என்றான் சிறுவன்.

"உன் தந்தையும் இன்னொருவரும் எதற்காக அடித்துக்கொள்கிறார்கள்?"

"அந்த இருவரில் என் தந்தை யார் என்பதை முடிவு செய்யத்தான்[இருவருக்குமே சிறுவனின் தாயுடன் உறவு இருந்திருக்க வேண்டும். மரபணுச் சோதனையும் அப்போது இல்லை] சண்டையிடுகிறார்கள்" என்றான் சிறுவன்'

இத்துடன் கதையை முடித்துவிட்டார் ஓஷோ.

இதன் மூலம் அவர் சொல்லவந்தது மிகப் பெரிய கடவுள் தத்துவம்.

ஓஷோ சொல்கிறார்.....

"இவ்வகையில்தான் மதவாதிகள் நூற்றாண்டுக் காலமாகக் கடவுளைக் கண்டறிவதில் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். உயர்ந்த தத்துவக் கோட்பாடுகளையெல்லாம் உருவாக்கியிருப்பதாக அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மை என்னவென்றால், அவர்களைப் பற்றியே அவர்களுக்கு ஏதும் தெரியாது."

ஓஷோ மேலே சொன்ன 'சிறுவன்' கதை எதார்த்தமானது அல்ல என்றாலும், கடவுள் குறித்த, மனிதர்களின் அறியாமையை வெளிப்படுத்துவதற்கு அது உதவுகிறது என்று சொல்லலாம்.

'செக்ஸ் சாமியார்' என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஓஷோவின் தத்துவ விளக்கங்கள் பெரும்பாலும் நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்துவனவாக இருப்பினும், சிந்திக்கத் தூண்டும் வகையிலும் அவர் கருத்துரைகளை வழங்கியிருக்கிறார்.

நம்ம ஊர், 'கடவுளின் குரு' ஜக்கி வாசுதேவுடன் ஒப்பிட்டால், ஓஷோ எவ்வளவோ தேவலாம்! ஜக்கி, 'நடை, உடை, பாவனை, போதனை' என்று எல்லாவற்றிலுமே 'ஓஷோ' வைக் 'காப்பி' அடிக்கிறார் என்பது அறியத்தக்கது!!


===========================================================================

உதவி: 'ஈஸா உபநிஷத உரை', நர்மதா பதிப்பகம், சென்னை; 1995.