திங்கள், 8 ஆகஸ்ட், 2022

ஊடக மூடத்தனங்கள்

க்கள் மனங்களில் புதிய புதிய மூடநம்பிக்கைகளைத் திணிப்பதிலும், மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டுவிடாமல் அவர்களைத் தடுப்பதிலும் முக்கியப் பங்காற்றுபவை நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், காணொலிகள், வானொலிகள் போன்ற ஊடகங்கள்.

இது விசயத்தில் முன்னிலை வகிப்பவை நாளிதழ்கள்.

'பெரும்பாலும் வீட்டின் பூஜை அறையில் கிழக்குத் திசை பார்த்தபடி வைத்துத்தான் தெய்வங்களை வழிபாடு செய்வார்கள். எந்தெந்தத் தெய்வத்தை எந்தெந்தத் திசையில் வைத்து வழிபட வேண்டும் என்று சாஸ்திர நியதி உள்ளது...'

இன்றைய நாளிதழ் ஒன்றின் ஜோதிடப் பக்கத்தில் வெளியாகியிருக்கும் இது ஒரு புதிய மூடநம்பிக்கைத் திணிப்பாகும்.

'கடவுள் ஒருவரே. அவர் அண்டவெளியெங்கும் நிறைந்திருக்கிறார்; நல்ல மனங்களிலும் குடிகொண்டிருக்கிறார்' என்று சொல்லப்படும் நிலையில், அவரைப் பல்வேறு பெயர்களில், சிலைகளாக அறைகளில் அடைத்து வைத்து வழிபடுவதே அறியாமையின் உச்சம்.

இந்த நிலையில் அந்தச் சிலைகளைக் குறிப்பிட்ட திசை பார்த்து வைத்து வழிபட வேண்டும் என்று சொல்வது மக்களை மடையர்கள் ஆக்கும் அடாவடித்தனமான செயல் ஆகும். 

சாஸ்திர நியதி வேறாம். எந்தச் சாஸ்திரம் சொல்கிறது? அது நம்பத் தகுந்ததா?

மக்கள் நலனில் அக்கறை இருந்தால் புதிய புதிய பயனுள்ள அறிவியல் செய்திகளுக்கும், பகுத்தறிவுச் சிந்தனைகளுக்கும் பக்கங்கள் ஒதுக்கலாம்.

செய்வதில்லை. மாறாக.....

பொய்யும் புளுகும் கலந்த ஆன்மிகச் செய்திகளுக்கு வாரம் தவறாமல் முழுப் பக்கங்களை ஒதுக்கும் இந்த நாளிதழாளர்கள், அறிவியல் அறிஞர்களால் ஆதாரமற்றது என்று நிரூபிக்கப்பட்ட ஜோதிடத்திற்கு அதைவிடவும் அதிகப் பக்கங்களை ஒதுக்குகிறார்கள். இணைப்புப் புத்தகங்கள் வேறு.

எந்த நம்பிக்கையில் இதை இவர்கள் செய்கிறார்கள்?

ஆன்மிகச் செய்திகளையும், ஜோதிடப் புளுகுகளையும் சில மாதங்கள் வெளியிடாமல் நிறுத்திவிட்டு, அறிவியல் & பகுத்தறிவு தொடர்பான செய்திகளுக்குச் சில பக்கங்கள் ஒதுக்க வேண்டும். 

பத்திரிகை விற்பனை கூடுவதையோ குறைவதையோ வைத்து மக்கள் எதை அதிகம் விரும்புகிறார்கள் என்பதைக் கண்டறியலாம்.

ஊடக வணிகர்கள் இதைச் செய்வார்களா?!

===========================================================================