எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

புதன், 17 ஆகஸ்ட், 2022

'ஹர் கர் திரங்கா' (Har Ghar Tiranga)?!?!?!


நான் இந்தியத் தமிழன் என்பது எனக்குத் தெரியும்.

நடுவில் அசோகச் சக்கரம் பொறித்த, காவி, வெள்ளை, பச்சை ஆகிய  நிறங்களுடன் வடிவமைக்கப்பட்ட மூவண்ணக் கொடி என் தேசத்தின் கொடி என்பதை நான் அறிவேன்.

நாட்டின் விடுதலை நாளை உள்ளடக்கிய மூன்று நாட்களில் வீடுதோறும் தேசியக் கொடி ஏற்றப்படுதல் வேண்டும் என்னும் நடுவணரசின் அறிவுறுத்தலையும் நான் அறிந்தே இருந்தேன்.

என் வீட்டில் கொடி ஏற்றி அதற்கு மரியாதை செலுத்தி மகிழ்ந்தேன்.

மூன்று நாட்கள் முடிந்ததும் அக்கொடியை உரிய முறைப்படிக் கையகப்படுத்தி, அதை மடித்து வைப்பது பற்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பற்றியும் முழுமையாகத் தெரிந்துகொண்டிருந்தேன்.

இவை தவிர, நம் தேசியக் கொடி குறித்த வரலாற்றைக்கூட அத்துபடியாய் என் மனதில் பதித்து வைத்திருந்தேன். ஆனால்.....

கடந்த சில நாட்களாக, அனைத்து ஊடகங்களிலும் ஒலித்துக்கொண்டே இருந்ததே 'ஹர் கர் திரங்கா'... இதற்கான பொருளை மட்டும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட என்னால் தெரிந்துகொள்ளவே இயலவில்லை.

தேசப் பற்றை ஆண்டுதோறும் புதுப்பிக்கும்போதுகூட இந்தியைத் தவறாமலும் மறவாமலும் திணித்துவிடுகிறார்கள்[மறந்தும் 'ஹர் கர் திரங்கா'வை மாநில மொழிகளில் 'மொழியாக்கம்' செய்யவே இல்லை] நம் ஆட்சியாளர்கள்.


அவர்கள் அதி புத்திசாலிகள்!

'ஹர் கர் திரங்கா'!!

========================================================================