எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 25 அக்டோபர், 2022

வன்புணர்வு நிகழ்வுகளைக் காணொலியாக்கும் கயவர் கூட்டம்!!!

#த்தரப்பிரதேச மாநிலம் கனோஜ் மாவட்டத்தில் ஞாயிற்றுகிழமை வீட்டைவிட்டுக் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 13 வயதுச் சிறுமி ஒருவர், அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு அருகில் தலை உட்பட உடலில் பல இடங்களில் படுகாயங்களுடன் விழுந்துகிடக்கும் நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

இந்த அதிர்ச்சியான சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. 25 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஒரு சிறுமி ரத்தக்காயங்களுடன் காணப்படுகிறாள்; கைகளை நீட்டித் தன்னைச் சுற்றி இருக்கும் கூட்டத்தை நோக்கி உதவி கேட்கிறாள். ஆனால் சிறுமியைச் சுற்றி நிற்கும் ஆண்கள் அவளுக்கு உதவுவதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல் தங்களின் செல்போனில் சிறுமியைப் படம் எடுப்பதில் மட்டுமே குறியாய் இருக்கின்றனர்.

இடையில், போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதா என்றும், போலீஸ் உயர் அதிகாரியின் எண் என்ன என்றும் சிலர் விசாரிக்கின்றனர். ஆனாலும், அவர்களுக்குப் பதில் தராமல் தொடர்ந்து படம் பிடிப்பதிலேயே அக்கறை செலுத்துகின்றனர். அந்த இடத்திற்குப் போலீஸார் வந்துசேரும்வரையில் சிறுமிக்கு யாரும் உதவவில்லை. 

இந்தச்சம்பவம் குறித்து வெளியான இரண்டாவது வீடியோ ஒன்றில், போலீஸ்காரர் ஒருவர் சிறுமியைத் தனது கைகளில் தூக்கிக்கொண்டு ஆட்டோவை நோக்கி ஓடுகிறார்# https://www.hindutamil.in/news/india/887219-up-shock-injured-girl-seeks-help-people-busy-filming-her.html  -25 Oct, 2022 12:37 PM

வன்புணர்வோ வேறு வன்முறையோ, மனம் பதறச் செய்யும் அவல நிகழ்வு எதுவானும், அதைக் காணொலியாக்கி, சமூக வலைதளங்களில் பகிர்ந்து இன்புறும்[பணம் சம்பாதிப்பவர்களும் உண்டோ?] மனிதாபிமானம் இல்லாத குரூரப் புத்தி படைத்தோர் எண்ணிக்கை நாளும் பெருகிவருகிறது.

இவர்களும் ஒருவகையில் வன்புணர்வாளர்கள்தான்; வன்முறையாளர்களும்கூட. உதவும் முயற்சி சிறிதுமின்றி, படம் பிடித்துப் பகிர்வதை மட்டுமே நோக்கமாகக்கொண்டு கைபேசியும் கையுமாக அலையும் இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.

அரசு உரிய முறையில் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது உடனடித் தேவை ஆகும்!

***'வன்புணர்வு குறித்த செய்தி வராத நாளே இல்லை' என்று பழைய பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தேன். "வன்புணர்வு குறித்த செய்திகளே இப்போதெல்லாம் வருவதில்லை" என்று சொல்லி மகிழும் நாள் எப்போது வரும்?! 

மனிதர்கள் தாமாகத் திருந்துவார்களா, இல்லை, இவர்கள் நம்பும் கடவுளே நேரில் வந்து சொன்னால்தான் திருந்துவார்களா?