அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 18 நவம்பர், 2022

மரணத்தைத் தவிர்க்க உதவும் மரணங்கள்!!!

நீண்ட முடிகளைக் கொண்ட பெண்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் அதனை வாரிய பின்னர் நன்கு பின்னி, இரட்டைச் சடை போட்டுக் கொள்வார்கள்.

நம் உடம்புச் செல்லில் உள்ள DNA[மரபணு]வும் இரட்டைச் சடை போல்தான் தோன்றும். நீண்ட DNA[மரபணு] இழைகள் நன்கு சுற்றப்பட்ட நூற்கண்டு போலவும் காட்சியளிக்கும்.


இந்த DNA உடைந்துவிடுவதுண்டு. 


உடைந்த DNAவைச் சரி செய்ய. நூற்கண்டில் சுற்றப்பட்ட நூல் பிரிக்கப்படுவது போல் DNA இழைகள் பிரிக்கப்படும். 

 

அடுத்து DNAவில் எந்தமாதிரியான சேதம் ஏற்பட்டுள்ளது என அறியப்படும்.


DNAவில் ஏற்பட்டுள்ள சேதத்தைச் சரி செய்யத் தேவையான கருவிகளும் இயந்திரங்களும் கொண்டுவரப்படும். அந்தக் கருவிகளும் இயந்திரங்களும் இரும்பால் ஆனவை என நினைத்துவிடாதீர்கள். இவை அனைத்தும் DNA சேதத்தைச் சரி செய்யவல்ல புரதங்கள்தான்!  


இவைகளின் தயவால் முறையாக DNA பழுதுபார்க்கப்படும். பின்னர் இந்த DNAவின் தரம் சரிப்பார்க்கப்படும். அனைத்தும் சிறப்பாக நடந்து முடிந்தால் DNA இழைகள் மறுபடியும் நூற்கண்டுகளில் சுற்றப்பட்டது போல் சுற்றப்படும். பின்னர் இந்தச் செல்கள் வழக்கம்போல் தம் பயணத்தைத் தொடர்கின்றன.

 

இதுமாதிரி நம் உடலில் ஒரு நாளைக்கு ஒரு செல்லில் மட்டும் 10 லட்சம் பழுதுபார்ப்புப் பணிகள் நடக்கின்றன! அப்படியெனில் கோடானுக்கோடி செல்கள் உள்ள நம் உடலில் எத்தனைப் பழுதுப் பார்ப்புப் பணிகள் நடக்குமென்பதைக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

 

ஒருவேளை உடைந்த DNAவைச் சரி செய்ய முடியவில்லை என்றால் அல்லது, சரி செய்ய முடியாத அளவிற்கு உடைந்தால், DNA உடைப்பைக் கண்காணிக்கும் புரதக்கூட்டம் அந்தச் செல்லைக் கொல்லவல்ல புரதக்கூட்டத்திற்கு ஆணையிடும். 

 

அந்தக் கொலைகாரப் புரதக்கூட்டம் அந்தச் செல்லை ஈவு இரக்கமின்றிக் கொன்றுவிடும். இதனை ஆங்கிலத்தில் Apoptosis என அழைப்பார்கள்.


சாவு என்ற சொல்லை நாம் விரும்பமாட்டோம். ஆனால், மேற்கண்ட வழிமுறைகளில் நம் உடலில் தினம்தினம் எண்ணற்ற செல்கள் சாவைச் சந்திக்கின்றன. இதனால்தான் நாம் புற்றுநோயிலிருந்து தப்பித்து உயிருடனிருப்பது சாத்தியமாகிறது. அதாவது நம் உடலில் DNA உடைப்பு சரி செய்யப்படாமல் செல்பிரிதல் என்ற பயணம் தொடர்ந்தால் புற்றுநோய் உறுதி; ஏறத்தாழ நம் சாவும் உறுதிசெய்யப்படுகிறது!

========================================================================

நன்றி:

https://www.bbc.com/tamil/science-62540482