எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

சனி, 15 ஏப்ரல், 2023

குடியரசுத் தலைவர்... ஆளுநர்... குற்றங்கள்... தண்டனைகள்.....

கீழே உள்ள செய்திப் பதிவுகள் ‘தமிழ் இந்து’[15.04.2023] நாளிதழிலிருந்து நகலெடுக்கப்பட்டவை.

அனுப்பப்பட்ட ‘கருணை மனு’க்களைப் பரிசீலித்து முடிவெடுப்பதில் சம்பந்தப்பட்டவர்கள் தாமதம் செய்ததால், 16 குழந்தைகளைக் கடத்தி, அவர்களில் 9 பேரைக் கொலை செய்த குற்றத்திற்காக உள்ளூர் நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு[2001], உயர் நீதிமன்றத்தாலும் உச்ச நீதிமன்றத்தாலும்[2006] உறுதி செய்யப்பட்டுத் தூக்கில் தொங்கவேண்டிய மகாராஷ்டிர மாநிலப் பெண்கள்[சகோதரிகள்] இருவருக்கான அந்த ‘மரண தண்டனை’ நிறைவேற்றப்படாமல், மும்பை உயர் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது[என்பது செய்தி]. அதாவது.....

ஈவிரக்கமின்றி, கள்ளங்கபடமற்ற 9 குழந்தைகளைக் கொன்ற அரக்கிகள் தூக்குத் தண்டனையிலிருந்து தப்பித்திருக்கிறார்கள்!

இவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றித் தீர்ப்பளித்தவர் மும்பை உயர் நீதிமன்ற நீதியரசர். அந்த இரு சகோதரிகளின் கருணை மனுக்களைப் பரிசீலித்து முடிவு அறிவிப்பதற்கு ‘ஆளுநரும்[2013இல் நிராகரிக்கிறார்] குடியரசுத் தலைவரும்[2014இல் நிராகரிக்கிறார்] எடுத்துக்கொண்ட 7 ஆண்டுத் தாமதமே அவரின் தீர்ப்புக்குக் காரணமாக இருந்திருக்கிறது.

மகாராஷ்டிர அரசு, தண்டனைக் குறைப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தபோது, வழக்கை விசாரித்த அமர்வு நீதிபதிகள், அரசும் அதிகாரிகளும்[குடியரசுத் தலைவர் என்றோ ஆளுநர் என்றோ குறிப்பிடுவது தவிர்க்கப்பட்டுள்ளது] செய்த தாமதத்தால்தான் உயர் நீதிமன்றம் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்திருக்கிறது என்று கூறியதோடு, அரசின் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்திருக்கிறார்கள்.

இந்தத் தாமதம் குற்றவாளிகள் உரிய தண்டனையிலிருந்து தப்புவதற்குக் காரணமாக அமைந்தது என்று அவர்கள்[அமர்வு நீதிபதிகள்] கூறியிருப்பது.....

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இரு குற்றவாளிகள் அத்தண்டனையிலிருந்து தப்பியதற்குத் ‘தாமதம்’ மட்டுமல்ல,  அதைச் செய்தவர்களும் காரணம்தானே? அவர்களுக்குத் தண்டனை இல்லையா என்று கேட்கத் தூண்டுகிறது.

இந்தக் கேள்வியை இங்கு எவரிடமும் கேட்க இயலாது; கூடாது. கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவரிடம் கேட்கலாம்.

கடவுள் இருக்கிறாரா?!