எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

ஞாயிறு, 18 ஜூன், 2023

வாங்கிவிட்டீர்களா, கையடக்க ‘இ.சி.ஜி’ கருவி?!

ண்ட கண்ட நேரங்களில் புதிய புதிய நோய்கள் நம்மைத் தாக்கி, நம் இருதயத்தைப் பலவீனப்படுத்துகின்றன. அது சீராக இயங்குகிறதா அல்லவா என்பதைப் பரிசோதிக்க அவ்வப்போது மருத்துவமனைகளைத் தேடி ஓடவேண்டியிருக்கிறது.

இந்தச் சிரமத்தைத் தவிர்க்க, கையடக்க ‘இ.சி.ஜி’ கருவி என்று ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்[கண்டுபிடித்தவர்கள், நொய்டாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர்களான ‘ராகுல் ரஸ்தோகி’யும்  நேஹா ரஸ்தோகியும்].

மூன்று சென்ஸார்களைக் கொண்டு இயங்கக்கூடிய இதை நம் மார்பில், கைகளில் என்று மாறி மாறி வைத்துச் சோதிக்கலாம்.

அப்படிச் சோதிக்கும்போது இது அனுப்பும் வரைபடத்தை நம் கைபேசியில் பார்த்து நம் இதயம் சீராக இயங்குகிறதா அல்லவா என்று தெரிந்துகொள்ளலாம்.

இது 2014ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது[இதற்கு ஒரு கதை உண்டு. அது இங்கு வேண்டாம்]; 2018இல் சிறந்த இதய மருத்துவர்களின் உதவியுடன் இது சீரமைக்கப்பட்டது.

இது அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களிலேயே 800க்கும் மேற்பட்ட கருவிகள் விற்பனையாயின என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றையப் பரபரப்பானதும், மனப் பதற்றத்தைத் தூண்டக்கூடியதுமான சூழலில், முதியோர் என்றில்லாமல் அனைத்து வயதினர் மீதும் இதய நோய் திடீர்த் தாக்குதல் நடத்தி நிலைகுலையச் செய்கிறது.

தலைவர் ஆணையிட்டு, மறியல் போராட்டத்தில் ஈடுபடவிருக்கும் தொண்டனுக்கு, போலீஸ்காரன் லத்தியால் அடிப்பதைக் கற்பனை டெய்யும்போதே இதயத் துடிப்பு எகிறும். கைவசம் இந்தக் கருவி இருந்தால், அடி வாங்கும்போது இதயம் அதைத் தாங்குமா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

இப்போதெல்லாம் அன்பு மனைவியுடனோ, ஆசை நாயகிகளுடனோ ஆனந்தக் களியாட்டம் நடத்தும்போதே[இங்குக் கற்புக்கரசர்கள் நிறையவே உள்ளனர்] மாரடைப்பு வந்து மண்டையைப் போடுபவர்கள் கணிசமாக இருக்கிறார்கள்.

எதிர்பார்ப்புக்கு மேலாக, ஆபாசப் படங்களில்[+காணொலிகள்] அசிங்கசிங்கசிங்கக் காட்சிகளைப் பார்த்துப் பரவசப்படும்போது ஏற்படும் பேரின்ப அதிர்ச்சியிலும் இதயம் இயங்குவதை நிறுத்திக்கொள்ளக்கூடும்.

ஆகவே, மேற்கண்டவை போன்ற தவிர்க்க இயலாத கடமைகளில் ஈடுபடுவதற்கு முன்பு, இதயத்துக்கு எதையும் தாங்குகிற சக்தி இருக்கிறதா என்பதைச் சோதிக்க, இளவட்டங்களும் வயோதிக வட்டங்களும் இந்தக் கையடக்க ‘இ.சி.ஜி.’ கருவியைக் கைவசம் வைத்திருப்பது அவசியம்.

மேற்கண்ட கடமைகளிலிருந்து முற்றிலுமாய் விடுபட்டுவிட்ட முதிர் இளம் பருவத்திலும், அடியேனுக்கு[ம்] இது அரியதொரு பாதுகாப்புக் கவசமாக அமையும் என்பது என் நம்பிக்கை.

நாமக்கல்லில் கடைகடையாய்த் தேடினேன், கிடைக்கவில்லை! இப்போது ஊர் ஊராகத் தேடிக்கொண்டிருக்கிறேன்!!

[தினத்தந்தி - 18.06.2023[குடும்பமலர்]