சனி, 3 ஜூன், 2023

'ஒடிசா ரயில் விபத்து’... நம் மக்கள் நல்லவர்கள்! மிக மிக நல்லவர்கள்!!

நேற்றிரவு, ஒடிசா மாநிலத்தில் 3 ரயில்கள் ஒன்றோடொன்று மோதிச் சிதறிய விபத்தில், 288[‘சன்’ தொ.கா. >261 -நண்பகல் 1மணிச் செய்தி] பயணிகள் உயிரிக்க[மேலும் அதிகரிக்கக்கூடும் என்கின்றன ஊடகச் செய்திகள்], 1000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பது நம்மை அளப்பரிய சோகத்தில் ஆழ்த்தும் செய்தியாகும்.

விபத்து நிகழ்ந்த சிறிது நேரத்திற்குள்ளாகவே, மீட்புக் குழுவினர் மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது ஆறுதல் அளிக்கும் தகவல்.

அனைத்து ஊடகங்களும் உடனுக்குடனான செய்திகளை நமக்கு வழங்கிவருவது பாராட்டுக்குரியது.

நடுவணரசும் மாநில அரசுகளும் தத்தமக்குரிய கடமைகளை ஆற்றிவரும் நிலையில், விபத்து நடந்த வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள், குறிப்பாக இளைஞர்கள், பாதிக்கப்பட்ட பயணிகளுக்குப் பிரதிபலனை எதிர்பாராமல் ஆற்றிய/ஆற்றும் பணிகள், பெரிதும் மெச்சத்தக்கனவாகவும், பெருமிதம் கொள்ளத்தக்கனவாக உள்ளன.

அவற்றில் குறிப்பிடத்தக்கவை.....

‘விபத்து நடந்த இரவில் மட்டும் இளைஞர்கள் ஒடிசா மருத்துவ மனைகளுக்குச் சென்று 500 யூனிட் ரத்தம்(தானம்) வழங்கினார்கள்.’

‘விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவி செய்யவும், ரத்ததானம் செய்யவும் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கே குவிந்தார்கள்; குவிந்துகொண்டிருக்கிறார்கள்.’

விபத்து குறித்த செய்திகளுக்கே ஊடகங்கள் முக்கியத்தும் தருவது இயல்பாதலால், மக்களின், பிரதிபலனை எதிர்பாராத பணி பற்றிய இன்னும் அறியப்படாத தகவல்கள் பின்னர் வெளியாக வாய்ப்புள்ளது.

நல்ல உள்ளங்கள் வாழ்க! வளர்க மனிதாபிமானம்!!

                                   *   *   *   *   *

//மேற்கு வங்கத்தின் சோனார்பூரில் வசிக்கும் சுகந்த் ஹல்டர், சென்னையில் மெட்ரோ திட்டத்தில் வேலை செய்வதற்காக ஷாலிமார் நிலையத்திலிருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸின் S7 பெட்டியில் பயணித்துள்ளார்.

முப்பது வயதான இவர் விபத்து குறித்து கூறியதாவது:

"ரயில் ஷாலிமாரில் இருந்து புறப்பட்ட நிலையில் இயல்பான வேகத்தில் இயங்கியது. தொடர்ந்து காரக்பூரைக் கடந்த சிறிது நேரத்திலேயே, மாலை சுமார் 6:30 மணியளவில், திடீரென விபத்துக்குள்ளானது. எங்கள் பெட்டிக்குள் பெரும் அதிர்வு ஏற்பட்டுத் தலைகீழாகப் புரண்டது. முதலில் என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ளச் சிறிது நேரம் ஆனது. பின்னர்தான் ரயில் ஒரு பெரிய விபத்தில் சிக்கியிருப்பதை உணர்ந்தேன்.

பெட்டிக்குள் இருந்த பயணிகளின் அலறல் சத்தம் கேட்கத் தொடங்கியது. சுற்றிலும் ரத்தம் ஓடுகிறது. இருள் சூழ்ந்த பெட்டியில் எப்படி வெளிவருவது என்று சிறிது நேரம் புரியவில்லை. சுமார் அரை மணி நேரம் கழித்து எப்படியோ அறையைவிட்டு வெளியே வந்தேன்” என்றார். 

சுகந்தரின் நெற்றி, கழுத்து, கால்கள் ஆகியவற்றில் காயம் ஏற்பட்ட நிலையில், வெளியே பார்த்த காட்சிகளை அவரால் ஒரு கணம் நம்ப முடியவில்லையாம்.//[https://tamil.news18.com/national/coromandel-express-accident-odisha-train-derailed-migrant-worker-from-west-bengal-shares-horrific-experience-1002180.html]