எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

சனாதனவா[வியா]திகளே, விளக்கம் தேவையில்லை; சனாதனத்தின் விளைவுகளைப் பேசுவீர்!

சனாதனம் என்றால், நிலையான தத்துவ ஞானம்; நம்பிக்கை; பல ஆயிரம் ஆண்டுகளாக இந்து சமயத்தைக் குறித்துவந்த சொல்; நிலையான ஆன்மிகத்தைக் குறிக்கிறது; உணர்வுபூர்வமான அறிவியலை[?]க் குறிக்கிறது” என்றிப்படிச் சனாதனவாதிகள் ஆளாளுக்கு விளக்கம் தந்துகொண்டிருக்கிறார்கள்; வார்த்தைஜாலம் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் தரும் சனாதனத்துக்கான விளக்கவுரைகள் உதயநிதி வெளியிட்ட கருத்துகளுக்கான மறுப்புரைகளாக அமையவில்லை.

உதயநிதி அவர்கள் ஒழிக்க வேண்டும் என்று சொன்னதெல்லாம், சனாதனத்தால் உருவாக்கப்பட்ட சாதி வேறுபாடுகள், பெண் அடிமைத்தனம் போன்றவற்றைத்தான்.

சனாதனம் என்னும் சொல் குறித்து அவர் ஆராய்ச்சி நடத்தவில்லை.

உதயநிதியைக் கண்டிக்க நினைப்பவர்கள், சாதி வேறுபாடுகள், பெண்ணடிமைத்தனம் போன்ற தீமைகள், சனாதனத்தால் விளைந்தவை அல்ல என்பதற்கு உரிய ஆதாரங்களைத் தருதல் வேண்டும். அதை எவரும் செய்யவில்லை.

சனாதனம் என்றால் நிலையான தத்துவ ஞானமாம். 

எது ஞானம்?[மனிதருள் மேம்பட்ட அறிவு வாய்க்கப்பெற்றவர்கள் இருக்கலாமே தவிர, ஞானம் பெற்றவர் என்று எவருமில்லை] ஞானம்தான் அறிவு என்றால், முழுமையான அறிவைப் பெற்றிருந்தவர் அல்லது பெற்றிருப்பவர் எவர்? 

முற்றும் அறிந்த ஞானி என்றோ, கடவுளின் அவதாரம் என்றோ எவரும் இருந்ததில்லை; இருக்கப்போவதும் இல்லை.

நிலையான தத்துவ ஞானமாம்... எது நிலையானது?

நிலையானவர் என்று சொல்லப்படுகிற கடவுளின் இருப்பே அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத நிலையில் நிலையானதென்று எதுவும் இல்லை.

அண்டவெளியில் உள்ள அனைத்துமே மாறிக்கொண்டுதான் இருக்கின்றன.

சனாதனத்தின் பெயரால் உண்டாக்கப்பட்ட தீங்குகள் நிலையானவையாக இருத்தல் கூடாது. அவை மாற்றப்படுதல் வேண்டும் என்கிறார் உதயநிதி.

அதற்கு நான்கு வரிகளில் விளக்கம் சொல்ல எவருக்கும் யோக்கியதை இல்லை. பக்கம் பக்கமாக எழுதித்தள்ளுகிறார்கள்; மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

சனாதனம் போற்றுகிறது இந்துமதம் என்கிறார்கள். அதனால் விளைந்த தீங்குகளை மூடி மறைத்துவிட்டுப் பேசுகிறார்கள்.

கடவுள்களின் பிறப்பு குறித்த ஆபாசக் கதைகளின் தோற்றம். அருவருப்பான சமயச் சடங்குகள்[யோனி வழிபாடு போன்றவை], போலிச் சாமியார்களின் லீலைகள், எண்ணிறந்த மூடநம்பிக்கைகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆக, இறுதியாக சனாதன[வியாதி]வாதிகளுக்கு நாம் அறிவுறுத்த நினைப்பது.....

உதயநிதியின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரபூர்வமாக மறுப்புத் தெரிவியுங்கள். சனாதன நெறி அறநெறி என்பது உண்மையானால், அதனால் தீமைகளுக்கு மாறாக நன்மைகளே விளைந்தன என்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரங்களை முன்வையுங்கள்.

அதை விடுத்து.....

உதயநிதி மன்னிப்புக் கேட்க வேண்டும். தவறினால், கைகால்களை வெட்டுவோம்; தலையைத் துண்டிப்போம் என்றெல்லாம் மிரட்டுவதைத் தவிருங்கள்.

தமிழர்கள் மூடர்கள் அல்ல; கோழைகளும் அல்ல!