அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 20 அக்டோபர், 2023

பங்காரு அடிகளாரின் ஆன்மிகப் புரட்சியும் ஆறறிவு வறட்சியும்!!

கோயில் கருவறைக்குள் அர்ச்சகர்கள் மட்டுமே செல்லலாம் என்னும் பாரம்பரியப் பழக்கத்தை மாற்றி, காலங்காலமாய் அடக்கி ஒடுக்கப்பட்ட பெண்களும், பட்டியலின மக்களும் கருவறைக்குள் சென்று பூஜை செய்ய வழிவகுத்தது பங்காரு அடிகளார் செய்த பெரும் புரட்சியாகும்[கல்வித்துறையில் அவர் ஆற்றியுள்ள பணியும் குறிப்பிடத்தக்கது].

கடவுளை நம்புவதும் வழிபடுவதும் மூடநம்பிக்கைகள்தான் என்றாலும், ஓர் ஆன்மிகராக, மேற்கண்ட வகையில் அவர் ஆற்றிய பணி பிரமிக்கத்தக்கது என்பதால்,  அவற்றைப்[வரையறைக்குட்பட்டவை] பெரிதுபடுத்தத் தேவையில்லை.

ஆயினும், அவர் பகுத்தறிவுக்குப் பொருந்தாத, மேலும் பல, தீங்கு பயக்கும் மூடநம்பிக்கைகளைச் சுமந்து வாழ்ந்தார் என்பதும், அவற்றைப் பொதுமக்களிடையே பரப்பினார் என்பதும் கண்டிக்கத்தக்கக் குற்றங்களாகும்.

இவற்றிற்குப் போதிய ஆதாரங்களாக அமைந்தவை அவருடைய, ‘ஓம் சக்தி’ என்னும் ‘யூடியூப்’ சேனலில்[சேனல்>தமிழ்?] பதிவாகியுள்ள சில தகவல்கள்.

ஒருநாள் பங்காரு அடிகளார் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தபோது, அவரின் உடம்பில் பாம்பு ஊர்வதை உணர்ந்தார். கண் விழித்தபோது, அந்தப் பாம்பு அவரின் உடம்பிலிருந்து இறங்கிச் சென்றதைக் கண்டார். அவரைப் பெற்ற அண்னை அஞ்சி அலற, அக்கம்பக்கத்தார் அங்கு கூடினார்கள். அவர்களின் கண்முன்னே அது மாயமாய் மறைந்தது.

பலரும் பார்த்துக்கொண்டிருக்கையில் பாம்பு மாயமாய் மறைந்தது என்பது நம்பவே இயலாத கதை.

ஆதிபராசக்தியே பாம்பு வடிவில் வந்து அவரை ஆட்கொண்டார் என்று பதிவில் குறிப்பிடப்பட்டிருப்பது வாய்விட்டுச் சிரிக்கத் தூண்டுகிறது.


இதைவிடவும் கீழான இன்னொரு கற்பனைக் கதையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.


பங்காரு அடிகளாருக்கு தனலட்சுமி என்று ஒரு தங்கை இருந்தார். அவர் மீது பங்காரு அடிகளாருக்கு கொள்ளைப் பாசம். திடீரென ஒரு நாள் தங்கை இறந்தார். 


தண்ணீர்கூடக் குடிக்காமல் மணிக்கணக்கில் தங்கை புதைக்கப்பட்ட இடத்திலேயே அழுதுகொண்டிருந்தார் பங்காரு. அங்கு வந்த ஒரு பெண் அவரின் தாகம் தணிக்கத் தண்ணீர் கொடுத்தார்.


தாகத்தால் தவித்த தனக்குத் தண்ணீர் கொடுத்த பெண் யார் என்னும் கேள்வி பங்காரு மனதில் எழுந்தது. அந்தக் கேள்வியோடு அவர் நிமிர்ந்து பார்த்தபோது அங்கு யாருமில்லை. ஆதிபராசக்தி, உமாமகேஸ்வரி உருவத்தில் வந்து தண்ணீர் கொடுத்தார் என்பதை உணர்ந்து அடிகளார் மெய்சிலிர்த்தார்’ என்று முடிகிறது கதை.


ஆன்மிகத் துறையில் பங்காரு செய்த புரட்சி அவரை ‘அடிகளார்’ ஆக்கியது. படு மூடத்தனங்களை மக்களிடையை பரப்பியதால் ‘அடிகளார்’ விடுபட, அவர் மீண்டும் வெறும் ‘பங்காரு’ ஆனார் என்று சொல்ல நினைக்கும்போது மனம் வருந்தவே செய்கிறது!


ஆயினும், அவரின் உயிரிழப்பு தமிழர்களுக்கான குறிப்பிடத்தக்க இழப்பு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.


* * * * *

https://tamil.oneindia.com/news/chennai/how-a-snake-changed-bangaru-adigalar-route-in-spritual-549751.html