எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 9 அக்டோபர், 2023

இவர்தான் கடவுள்... இவரேதான்!!!

கடவுள்:
*இந்தச் சொல் இடம்பெறாத மொழி அகராதி எதுவும் இல்லை. ஆனால் இதற்கானபுரிந்துகொள்ளும்படியான முழுமையான விளக்கம் எந்த அகராதியிலும் இல்லை.

*அண்டசராசரத்திலுள்ள அணுக்கள், கோள்கள், மனித இனம், பிற உயிரினங்கள் என்று அனைத்திற்குமே தோற்றமும் அழிவும் உண்டு. இவை இல்லாதவர் இவர் மட்டும்தானாம்!

*அனைத்துப் பொருள்களும் உயிர்களும் அஃறிணை, உயர்திணை, ஆண்பால், பெண்பால் என்று ஏதாவது ஒன்றில் அடங்கிவிடும். எந்த ஒன்றிலும் அடங்காத பெருமைக்குரியவர் இவர் என்கிறார்கள்[இதனால்தான், ஞானிகள் ‘கடவுள் அவனாகவும் அவளாகவும் அதுவாகம் எதுவாகவும் இருப்பார். அவ்வாறு இல்லாமலும் இருப்பார்’  என்று தாமும் குழம்பி மக்களையும் குழப்பினார்கள்].

*கோள்கள் பல. உயிர்கள் பல. அணுக்கள் பல பல பல. ஆனால், இவர் மட்டும் ஒரே ஒருவர்தான் என்கிறார்கள்.

*எந்தவொரு அளவுகோளுக்கும் கட்டுப்படாத விரிந்து பரந்த பிரபஞ்ச வெளியில் இருந்துகொண்டிருக்கும் அல்லது இயங்கிக்கொண்டிருக்கும் அனைத்தும்  இவருக்கு மட்டுமே சொந்தம். உரிமை கொண்டாட வேறு எதுவுவோ எவையுமோ எவருமோ எவர்களுமோ இல்லாதது இவரின் அதிர்ஷ்டம்.

*அன்பு, பாசம், நேசம் என்று அனைத்துப் பண்புகளின் ஒட்டுமொத்த உருவமாக விளங்குபவர் இவர் மட்டுமே என்பதும், இவரிடமிருந்துதான் இப்பண்புகள் நம்மால் பெறப்பட்டன என்பதும், வரம்பு கடந்த பேரறிவும் ஆற்றலும் வாய்க்கப்பெற்றவர் இவரே என்பதும்  அளப்பரிய இவர்தம் பெருமையின் அடையாளங்கள் என்றியம்புகிறார்கள்.

*உடல் உழைப்பையும் அறிவாற்றலையும் பயன்படுத்திப் பிற மனிதர்கள் வாழ்ந்துகொண்டிருக்க, கணக்குவழக்கில்லாமல் பொய்யான [கடவுள்]கதைகள் சொல்லிச் சில[பல?]பேர் பிழைப்பு நடத்துவதற்குக் காரணமாய் அமைந்தவர் இவர்.

*இவரால் நல்லது ஏதும் நடக்காவிட்டாலும், இவரை நம்பும் மனிதர்கள் எப்போதும் இருந்துகொண்டே இருப்பது புரியாத பெரும் புதிர்.

*இவர் சொன்னதாக, மதவாதிகள் இல்லாதது பொல்லாதது என்று மதப்புத்தகங்களில் எதை எதையோ எழுதி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதைத் தட்டிக் கேட்கும் திராணி கொஞ்சமும் இல்லாதவர் இவர்.

*இவர் படைத்ததாகச் சொல்லப்படும் அனைத்திலும் எத்தனை எத்தனையோ குறைகள்/குளறுபடிகள் இருப்பினும், இவரின் புகழ் பாடுவதற்கென்று எப்போதும் ஒரு கூட்டம் இருந்துகொண்டிருப்பது இவர் பெற்ற பேறு!