எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 19 ஜனவரி, 2024

“எங்க ஊர்ப் ‘பிடாரி அம்மன்’ஐத் தரிசிக்க வருவாரா பிரதமர் மோடி?”

 [‘ஆந்திரப் பிரதேசத்தின் லெபாக்‌ஷி என்ற இடத்தில் உள்ள வீரபத்ர சுவாமி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார்’ -இந்து நாளிதழ்]

அயோத்தியில் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுவரும் ராமர் கோயில் திறப்பு விழா, வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ‘பிராண பிரதிஷ்டை’[?!] விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.

இதை முன்னிட்டு, கடந்த 11ஆம் தேதி முதல் விசேஷ விரதத்தைக் கடைப்பிடித்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள லெபாக்‌ஷி வீரபத்ர சுவாமி கோயிலுக்குப் பிரதமர் மோடி வருகை தந்தார். கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், பின்னர் கோயிலில் அமர்ந்து தெலுங்கில் எழுதப்பட்ட ரங்கநாத ராமாயணத்தின் சில பாடல்களைப் பக்தர்கள் பாடக் கேட்டார்.

லெபாக்‌ஷியின் சிறப்பு: ராமாயணத்தில் ராவணன் சீதையைக் கடத்திச் சென்றபோது அதனைப் பார்த்த பறவையான ஜடாயு, அவரை மீட்கும் முயற்சியில் பலத்த காயமடைந்தது. சீதையைத் தேடி ராமர் அந்த வழியாக வந்தபோது அவரிடம் சீதையை ராவணன் கடத்திச் சென்றதைக் கூறி உயிர்விட்டது. இதனையடுத்து, ராமரால் ஜடாயு மோட்சம் பெற்றது. ஜடாயு மோட்சம் பெற்ற இடமே லெபாக்‌ஷி என்று கூறப்படுகிறது.

ஆந்திரப் பிரதேசப் பயணத்தை முடித்துக்கொண்டு கேரளா செல்லும் பிரதமர் மோடி, அங்கு குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கும், திரிபிராயர் ராமசாமி கோயிலுக்கும் சென்று வழிபடுகிறார்[கடந்த பல மாதங்களுக்கு முன்பிருந்தே இந்தப் புனிதமான வழிபாட்டுப் பயணத்தை இவர் தொடங்கியிருக்கலாம் என்பது நம் எண்ணம்]. -இது சிறப்புச் செய்தி[‘இந்து தமிழ்’.

இவ்விரண்டு கோயில்களிலும் வழிபாட்டை முடித்துக்கொண்டு, நாமக்கல் அருகே உள்ள பிடாரி அம்மன் கோயிலுக்கும் வருகைபுரிந்து, அம்மனை மோடி அவர்கள் தரிசித்துச் செல்லுதல் வேண்டும் என்பது நம் பணிவான வேண்டுகோள்.
* * * * *
பிடாரி அம்மனின் சிறப்பு: சீதாப் பிராட்டியைக் கடத்தும் நோக்கத்துடன் இலங்கையிலிருந்து புறப்பட்ட இராவணன், நாமக்கல்[வான் வழி] வழியாகத்தான் வான ஊர்தியில் பறந்து சென்றதாகவும், தீய நோக்கத்துடனான அவனின் வருகை பற்றி, நாமக்கல்-நாட்டாமங்கலம் சாலையில், 7 கல் தொலைவில் குடிகொண்டிருக்கும் ‘பிடாரி அம்மன்’ தன் வாகனமான ‘கொடுவாள் மூக்கன்’ என்னும் கருடன்[ராவணனின் ஊர்தியைக் கடந்து சென்ற ராட்சதக் கழுகு] மூலம் தகவல் அனுப்பி எச்சரித்தார் என்பது கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுச் செய்தி.