பக்கங்கள்

ஞாயிறு, 28 ஜனவரி, 2024

‘பிரியா விடை’யும் இறப்பவருக்கு இருப்பவர் அளிக்கும் ஆறுதல் பரிசுகளும்!!!

இறக்கவிருப்பவர் நம் உறவினராகவோ, வேறு துணை இல்லாத  உற்ற நண்பராகவோ இருந்தால், அவரின் உடல் நோவைச் சற்றேனும் குறைக்கவும், மன வலியையும் மரண பயத்தையும் ஓரளவுக்கேனும் தணிக்கவும் நம்மாலான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

அவற்றில் குறிப்பிடத்தக்கவை பின்வருமாறு:

*அறை விளக்கைச் சற்றே மங்கலாக ஒளிரவிட்டு மனதுக்கு இதமான சூழலை உருவாக்கலாம்.

*அவரின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டிருப்பது, பிரிவை எதிர்கொள்ளவிருக்கும் அந்த நேரத்தில் அவருக்கும் நமக்கும் ஆறுதல் அளிப்பதாக அமையும்.

*பிரியாவிடை பெறும் அந்தக் கணங்களில் ஆரவாரமற்ற அமைதியான சூழல் அவசியம் என்பதால், அதிக அளவில் கூட்டம் சேரவிடாமல், அவரின் அன்புக்குரிய சிலரை மட்டும் அறைக்குள் அனுமதிப்பது நல்லது.

*அவருடைய செவிப்புலன் நல்ல நிலையில் இருந்தால், அவருக்கு மிக விருப்பமான பாடல்களைக் குறைந்த தொனியில் ஒலிக்கவிடலாம்; அவர் மிக விரும்பும் நூலிலிருந்து சில பகுதிகளைப் படிக்கலாம்.

*அவர் உரையாடும் நிலையில் இருந்தால், அவருக்கு என்ன தேவை என்று கேட்பதன் மூலம் அவர் மீதான நம் பாசத்தை உணரச் செய்யமுடியும்.

*அவர் சொல்வதை மிகக் கவனமாகக் கேட்பது, அந்தத் துயரம் மிகுந்த நேரத்திலும் அவருக்கு ஆதரவாக நாம் இருக்கிறோம் என்பதை அவர் அறிந்து ஆறுதல் பெற உதவும்.

*தேவைப்பட்டால், குறைந்த அளவில் அவருக்கு மிகப் பிடித்தமான உணவைத் திரவ வடிவில் அருந்தச் செய்யலாம்.


*தூக்கத்தில் அல்லது மயக்கத்தில் அவர் இருந்தால் அந்நிலையிலேயே இருக்க விடுவது நல்லது. பாச மிகுதியால் பேச்சுக்கொடுப்பது மரண வலி அதிகரிக்க வழிவகுக்கும்.


*அவர் நம்மைப் பிரியவிருக்கும் இறுதி வினாடிகளில்.....


இரத்த அழுத்தம் குறையும். சுவாசம் ஏறுமாறாக இருக்கும்; இதயத் துடிப்பும் குறையும்; வெப்பநிலை தணிந்து உடம்பெங்கும் குளிர்ச்சி பரவும்.

 
எனவே, 

*நம்மிடமிருந்து அவர் ‘பிரியாவிடை’ பெறும் தருணம் அது என்பதைப் புரிந்துகொண்டு, சில வினாடியாயினும் அவரைப் பிரியாமலிருப்பது மிக மிக முக்கியம்.

மேற்குறிப்பிட்ட செயல்களை மனம் கோணாமல் செய்து முடிப்பதால், இறப்பவர் அனுபவிக்கும் மரண வலி சற்றே குறைய வாய்ப்புள்ளது; இருப்பவரும் ஓரளவு மன அமைதி பெறலாம்.

                                               *   *   *   *   *
***தளங்கள் சிலவற்றில் பொறுக்கிச் சேர்த்த கருத்துகளுடன் என் பரிந்துரைகளையும் இணைத்து வடிவமைத்த பதிவு இது.