எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

ஞாயிறு, 2 ஜூன், 2024

கருத்துக் கணிப்பும் ஊடகக் கேடர்களும்!!!

தேர்தல் முடிவுகள் பற்றியக் கருத்துக் கணிப்புகள் இன்று[02.06.2024] வெளியாகியுள்ளன. ‘முடிவுகள்’ நாளை மறுநாள்[04.06.2024] வெளியாகவுள்ளன.

இரு நிகழ்வுகளுக்கும் இடையே ஒரே ஒரு நாள் மட்டுமே உள்ளது.

ஆட்சியைக் கைப்பற்றும் கட்சி[கள்] ஆதரவாளர்கள் ஒரு நாள் முன்னதாகத் தங்களுக்குள் மகிழ்ச்சியைப் பகிர்வார்கள். தோற்கும் கட்சிகளின் ஆதரவாளர்கள் கவலைக்குள்ளாவது ஒரு நாள் முன்னதாகவே ஆரம்பமாகும்.

மற்றபடி, கட்சிச் சார்பில்லாத பொது மக்களுக்கு இதனால் விளையும் பயன் என்ன?

எதுவுமே இல்லை.

அப்புறம் எதற்கு இந்தத் தேர்தலுக்குப் பிறகான கருத்துக் கணிப்பு?

யாருக்கும் விடை தெரியாது, கருத்துக் கணிப்பு நடத்திய ஊடக உரிமையாளர்களைத் தவிர.

இவர்களுடையது அச்சு இதழ்களாயின் விற்பனை பெருகும். இணைய இதழ்களாயின் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதன் மூலம் அதிக விளம்பரங்கள் பெற்று வருமானத்தைப் பெருக்குவார்கள்.

இவர்களின் இந்தச் செயலால் பலரின் நேரம் விரையமாகிறது; கட்சிச் சார்புடையோரிடையே வீண் விவாதங்கள் நிகழும். அவை காரணமாக மோதல்கள் உருவாகவும் வாய்ப்புள்ளது. 

சுருங்கச் சொன்னால்.....

தேர்தலுக்குப் பிறகான ஊடகங்களின் கருத்துக் கணிப்புகள் சமுதாயத்திற்குக் கேடு விளைவிக்கும் என்பது உறுதி[தேர்தலுக்கு முற்பட்ட கருத்துக் கணிப்பு தனி ஆய்வுக்குரியது].

ஊடகக்காரர்கள் திருந்த வேண்டும். தவறினால், மக்கள் அவர்களைத் திருத்த வேண்டும்.