எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

திங்கள், 16 செப்டம்பர், 2024

மனிதர்களுக்கு ஆறறிவு! மற்ற உயிர்களுக்கு ஐந்தறிவு[அதிகபட்சம்]!! கடவுளுக்கு?!

10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் கடவுள் மனிதர்களைப் படைத்தார் என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள். 

படைத்ததோடு அமையாமல், இவர்களுக்குச் சிந்திக்கும் அறிவையும்[ஆறறிவு] அருளியிருக்கிறார்.

அதன் விளைவு, இவருக்குக் கோயில் கட்டி, விழாக்கள் எடுத்துக் கும்மாளம் அடித்து வழிபட்டால் துன்பங்கள் அகன்று இன்பமாக வாழலாம் என்று நம்புகிறார்கள் இவர்கள்[மிகப் பெரும்பாலோர்].

ஆனால்.....

10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் தன்னால் படைக்கப்பட்ட மனிதர்களுக்கு ஆறறிவைக் கொடுத்த கடவுள், 100 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தன்னால் உருவாக்கப்பட்ட பிற உயிரினங்களுக்கு[எண்ணிக்கையில் மனிதர்களைக் காட்டிலும் மிகப் பல மடங்கு அதிகம்] அந்த ஆறறிவை வழங்கவில்லை.

அவற்றிற்கு வழங்கியிருப்பது ஐந்தறிவு[ஒன்று முதல் ஐந்து] மட்டுமே.

ஆறறிவு வழங்கியிருந்தால், அவைகளும் அவரை வழிபட்டு மனிதர்களைப் போலவே[சுகபோகமாக?] வாழ்வது சாத்தியம் ஆகியிருக்கும்.

கருணைவடிவானவனும் அனைத்திற்கும் மேலான அறிவு படைத்தவனுமான அவர்ன்[கடவுள்] அதைச் செய்யவில்லை.

தான் படைத்த உயிர்களுக்கிடையே பெரிதும் பாரபட்சம் காட்டிய ‘அவன்’ கருணை வடிவானவன் அல்ல; மேலான பேரறிவாளனும் அல்ல. எனவே, அவனை ‘அறிவிலி’ என்று சொல்லலாம் அவனின் இருப்பு உண்மையானால்!