எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

வியாழன், 28 நவம்பர், 2024

சபரிமலைப் படிகள்... நின்றபோது கெடாத புனிதம் குழுவாய்ப் படம் எடுத்தபோது கெட்டது எப்படி!?

சபரிமலை ஐயப்பன் கோயிலின் 18 படிகளில்[படிகள் புனிதமானவையாம். சரி என்றே கொள்வோம்]  நின்று படம் எடுத்துக்கொண்டதற்குப் பந்தளம் மன்னர் குடும்பம், தந்திரி, கண்டகறு, குண்டகறு, நீதிபதி என்று ஆளாளுக்குக் கண்டனம் தெரிவித்ததால் காவல்துறையினர் 30 பேரும் மன்னிப்புக் கேட்டுக் கடிதம் எழுதித் தந்திருக்கிறார்களாம்.

கேரளக் காவலர் சங்கத்தினரிடம் கலந்தாலோசிக்காமல்[அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள்] எதிர்ப்பாளர்களிடம் சரணடைந்தது மிகவும் வருந்தத்தக்கது.

படிகளில் நின்று[அமர்ந்தல்ல] படம் எடுத்துக்கொண்டவர்களுக்குக் கொஞ்சமேனும் புத்தி இருந்தால், “புனிதமான படிகளில் குழுமிப் படம் எடுத்தது குற்றம் என்றால், நெரிசலைக் கட்டுப்படுத்த நாங்கள் அந்தப் படிகளில் நிறுத்தப்பட்டது[நகல் பதிவின் முதல் பத்தி காண்க] குற்றம் இல்லையா? படிகளில் நின்று பணி செய்தபோது கெடாத புனிதம் வரிசையில் நின்று படம் எடுத்தபோது கெட்டழிந்தது எப்படி?” என்றிப்படிக் கேட்டிருப்பார்கள்.

ஒருவர்கூடக் கேட்கவில்லை.

இவர்கள் மட்டுமல்ல, கற்றவர்கள் மிக அதிகமாக உள்ள கேரள மக்களில் வேறு எவருமே கேட்டதாகத் தெரியவில்லை.

இம்மாதிரி நிகழ்வுகள் தொடர்ந்தால், கடவுள் தேசமான கேரளா முட்டள்களின் தேசம் என்று அழைக்கப்படக்கூடும்!