பழைய இடுகைகளில் சேர்க்கப்பட்டிருந்த படங்கள் முற்றிலுமாய் அழிந்துவிட்டன[அழிக்கப்பட்டன?]. மீட்டெடுக்கும் முயற்சிகள் வெற்றிபெறவில்லை. வருந்துகிறேன்.

திங்கள், 17 மார்ச், 2025

நிரந்தரப் பிரதமர் ஆவதற்கு இந்தப் ‘பஞ்சப்பாட்டு’ போதாது மோடி அவர்களே!

மேதகு மோடிஜி அவர்களே, 

இதற்கு முன்பு தேர்தல்களில் போட்டியிட்டபோதெல்லாம், “என் அப்பா தேனீர்க் கடை நடத்தியபோது நான்தான் எச்சில் தம்ளர் கழுவினேன்” என்று சொல்லிச் சொல்லியும், கோயில் கண்ட இடமில்லாம் குப்புறக் கவிழ்ந்து விழுந்து சாமி கும்பிட்டும், எனக்கென்று குடும்பம் ஏதுமில்லை. மக்களின் ஒவ்வொரு குடும்பமும் என் குடும்பமே என்றிப்படிப் பேசிப் பேசியும் மக்களின் அனுதாபத்தைப் பெற்று குஜராத் மாநில முதல்வராகிப் பின்னர் இந்திய நாட்டின் பிரதமராகவும் ஆனீர்கள்.

இந்த நாட்டின் நிரந்தரப் பிரதமராக நீடிக்க வேண்டும் என்பது உங்களின் ஆசை.

அந்த ஆசை நிறைவேற, உங்கள் மீது மக்களுக்குள்ள அனுதாபத்தை இழந்துவிடாமல் இருப்பதோடு, அதை அதிகரிக்கும் திட்டத்தில்தான் உங்களின் பிள்ளைப் பருவச் சோகக் கதையை மேற்கண்டவாறு பிழிந்து தந்திருக்கிறீர்கள்.

ஆனால், "ஆர்.எஸ்.எஸ். போன்ற புனிதமான அமைப்பின் மூலமாக நான் வாழ்க்கையின் நோக்கத்தையும் விழுமியங்களையும் கற்றுக்கொண்டதை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன்” என்று அண்மையில் நீங்கள் பேசியது எதிர்மறையான விளைவுகளை உண்டுபண்ணும் என்பதை மறந்துவிட்டீர்கள்


பஜ்ரங்கள், விஸ்வ ஹிந்து பரிஷத், அனுமன் சேனா, ஹிந்து ஜன் ஜக்ருதி சமீதி, ஹிந்து யுவ சேனா போன்ற பல பெயர்களில் செயல்படுகின்ற பாசிசக் குண்டர் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் ஆர்.எஸ்.எஸ். காரர்கள். 


 பகுத்தறிவாளர்களும் மூடநம்பிக்கை ஒழிப்பாளர்களுமான ரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே (2015), கல்புர்கி (2015), கவுரி லங்கேஷ் (2017) போன்றோரைக் கொன்றவர்கள் இவர்களே. 


நாட்டில் நடைபெற்ற/நடைபெறும் மிகப் பெரும்பாலான மதக் கலவரங்களைத் தூண்டிவிட்டு, உயிர்ப் பலிகளுக்கும் கொள்ளைகளுக்கும் காரணமாக இருந்தவர்களும், இந்தி வெறியையும் இந்துத்துவா வெறியையும் தூண்டுகிறவர்களும் இவர்களே. 


இந்த அயோக்கியர்களைப் ‘புனிதர்கள்’ என்று நீங்கள் புகழ்ந்தது மிகப் பெரிய தவறு. இதனால், மக்களுக்கு உங்கள் மீதான அனுதாபம் குறைத்துவிட்டது என்று உறுதிபடச் சொல்லலாம்.


நம் மக்களுக்கு மீண்டும் உங்கள் மீதான அனுதாபம் அபிரிதமாக அதிகரிக்க வேண்டுமாயின்.....


ஒரு வேளை உணவுகூட உண்ணாமல் மாதத்தில் பல நாட்கள் பட்டினி கிடந்தது, சொந்தபந்தங்களிடம் கையேந்தி உதவி பெற்று கல்லூரிப் படிப்பை முடித்துப் பட்டதாரி ஆனது போன்ற சோக நிகழ்வுகளைத் தொகுத்து வெளியிடுங்கள்.


இறுதியில் உங்கள் பெயருக்கு முன்னால், ‘கடவுளால் அனுப்பப்பட்டவர்’ என்னும் வாசகத்தைச் சேர்க்க மறவாதீர்கள்.


வெல்க உங்கள் முயற்சி! தொடர்க உங்கள் மக்கள் பணி!!

                                     

                                         *   *   *   *   *


https://www.maalaimalar.com/news/national/rss-taught-me-the-purpose-of-life-pm-modi-764704