அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 16 ஜூன், 2018

அறிவை முடக்கும் ஆன்மிக நாளிதழ்க் கதைகள்!!

தமிழ் நாளிதழ்களின் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கதாக உள்ளது. வாரம்தோறும் போட்டிபோட்டுக்கொண்டு ஆன்மிகச் செய்திகளை[இணைப்பின் மூலம்] வெளியிடுகின்றன. அவற்றில் மிகப் பல, சிந்திக்கும் அறிவைச் சிதைக்கின்ற பழைய மூடநம்பிக்கைக் கதைகள். அண்மையில் வாசித்த ஒரு கதை கீழே[வார இதழ்கள் வெளியிடும் இம்மாதிரிக் கதைகளுக்கான விமர்சனம் இனி அவ்வப்போது தவறாமல் வெளிவரும். வாசிக்கத் தவறாதீர்].

கதை:

#ஒரு ஜென் துறவி. பெயர் 'நான்சன்'.

அவருக்கு ஒரு மாணவன். பெயர் 'ரிகோ'.
ஒரு நாள்.....

நான்சனிடம்  ரிகோ ஒரு  புதிரை முன்வைத்தான்.. 

'ஒருவன் ஒரு வாத்துக் குஞ்சைக் கண்ணாடிப் புட்டியில் இடுகிறான். அதற்கு நாள்தோறும் உணவு கொடுக்கிறான். வாத்து வளர்ந்துகொண்டிருக்கிறது. இப்போது ஒரு கேள்வி.....

வாத்து வளர்ந்து பெரிதாகிவிட்ட நிலையில், அதைக் கொல்லாமல் புட்டியையும் உடைக்காமல்.  முழுமையாக உயிருடன் வெளியே கொண்டுவர வேண்டும். எப்படி?' என்பதே அந்தப் புதிர்.

குரு நான்சன் புதிரை விடுவிக்க முயன்றார். இயலவில்லை. எத்தனை சிந்தித்தும் விடை கிடைக்கவில்லை.

வெறுமனே சிந்தித்தால் விடை கிடைக்காது என்று நினைத்தவர் தியானத்தில் ஆழ்ந்தார்.

விடை கிடைத்தது!

'ரிகோ'வை விளித்து,  ''புட்டிக்கு எந்தவிதச் சேதாரமும் இல்லாமலே. வளர்ந்து பெரிதாகிவிட்ட வாத்து உயிருடன் இப்போது வெளியே வந்துவிட்டது'' என்றார், மிகுந்த உற்சாகத்துடன்.

ரிகோ வாய் பிளந்தான். தன் கேள்விக்குத் தத்துவார்த்தமான ஒரு விடையை எதிர்பார்த்த அவன் நான்சனை உற்று நோக்கினான்.

நான்சன் தொடர்ந்தார்.

''இயல்பு நிலையில், வாத்தைச் சேதாரமில்லாமல் வெளியே கொண்டுவர இயலாது. தியானத்தால் மட்டுமே முடியும். வாத்து வெளியே வந்துவிட்டதை நீ அறிய வேண்டுமானால் நீயும் தியானத்தில் மூழ்குதல் வேண்டும்.''

குருவின் அறிவுரைப்படியே ரெகோவும் தியானத்தில் ஆழ்ந்தான்.

எல்லாத் திரைகளும் அகன்றுவிட்ட நிலையில் அவன் இருந்தான். சொன்னான்:

''நான் புட்டியை உடைக்கவில்லை. அது அங்கேயேதான் இருக்கிறது. நான் வாத்தையும் கொல்லவில்லை. ஆனால், அது உயிரோடு வெளியே வந்துவிட்டது.''#

இந்தக் கதையைச் சொன்னவர், பத்திரிகைகளால் 'செக்ஸ் சாமியார்' என்று சிறப்புப் பட்டம் சூட்டப்பட்ட 'ஓஷோ'.

கதையின் கருதுகோள் புரிந்ததா? ''புரியவில்லை'' என்பவர்களுக்காகக் கதையை எடுத்தாண்ட ஆன்மிக எழுத்தாளரே விளக்கம் தருகிறார்.

'வாத்து', ஆன்மாவுக்கான குறியீடு. 'புட்டி', வாழ்க்கையின் மீதான பற்றுதல். பற்றுதல் காரணமாக இன்பதுன்பங்களுக்கு ஆளாகிறோம். அவற்றிலிருந்து ஆன்மாவை விடுவிப்பது நம் குறிக்கோள்[புட்டியிலிருந்து வாத்து விடுபடுதல்].

ஆன்மாவைச் சிதைத்துவிடாமல் ஆசாபாசங்களையும் அறுத்துவிடாமல் விடுபடுவதற்கான ஒரே வழி.....

தியானம். 

வாழ்க்கையின் சுகபோகங்களை அனுபவித்துக்கொண்டே தியானம் செய்வதன் மூலம் ஆன்மா விடுதலை பெறுவது சாத்தியம் என்று ஓஷோ சொல்வதாகச் சொல்கிறார் ஆன்மிக எழுத்தர்.

ஓஷோ சொன்ன கதையும் ஆன்மிகர் தந்த விளக்கமும் பகுத்தறிவுக்கு உகந்தனவா?

சற்றே சிந்திப்போம்.

'ஆன்மா' என்பதே நம் முன்னோர்களால் அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். அறிவுபூர்வமாக அதை நம்புவது சாத்தியமே அல்ல[தனித்து ஆராயப்படவேண்டிய ஒன்று அது. நான் சில பதிவுகள் எழுதியிருக்கிறேன்].

தியானம் தியானம் என்று பரப்புரை செய்து மக்கள் மனங்களில் அதைப் பதியச் செய்துவிட்டார்களே தவிர, தியானம் செய்யும் முறை குறித்தோ அதன் பயன்கள் குறித்தோ நம்பத்தகுந்த விளக்க உரைகளை எவரும் தந்தாரில்லை.

இந்த வாத்து கதையையே உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம்.

இதைச் சேதாரமில்லாமல் வெளியே கொணர, குருவும் சீடனும் செய்த தியானங்கள் எவை?

மூடிய கண்களுடன் குந்திக்கொண்டு[மனதையும் ஒருமுகப்படுத்துவதாக வைத்துக்கொள்ளுங்கள்],....

''கடவுளே...கடவுளே...என் ஆன்மாவை விடுவிப்பாயாக... சேதாரமில்லாமல் விடுவிப்பாயாக. கடவுளே[விரும்பிய சாமி பெயரைச் சொல்லலாம்]...கடவுளே...உன் தாழ்பணிந்து இறைஞ்சுகிறேன்... எவ்வாறேனும் என் ஆன்மாவுக்கு விடுதலை வழங்கு...கடவுளே...வழங்கு...வழங்கு...'' என்றிப்படி நெடுநேரம் முணுமுணுப்பதுதான் தியானமா?

இவ்வாறு தியானம் செய்து ஆன்மாவை விடுவித்தவர் யாரெல்லாம்?

விடுவிக்கப்பட்ட ஆன்மாக்கள் எங்கே?

விடுவித்தவர்கள் எங்கே?

செத்துத்தொலைத்து, உடல் என்னும் பிண்டம் அழிந்த பிறகும் ஏதேனும் ஓர் உருவில் வாழ்ந்துகொண்டே இருத்தல் வேண்டும் என்னும் பேராசையில் கட்டிவிடப்பட்ட இம்மாதிரிக் கதைகளை இன்னும் எத்தனை காலங்களுக்குச் சொல்லிச் சொல்லிச் சொல்லி நம் முட்டாள்தனங்களைத் தக்கவைக்கப் போகிறோம்?

நம் கேள்வி இது.  பதில்.....?!?!
========================================================================
குறிப்பு:
கருத்துப்பெட்டியை அழகுபடுத்த முயன்றதில் அது பழுதடைந்துவிட்டது. மீட்டெடுக்கும் முயற்சி தொடர்கிறது. பொறுத்தருள்க.