அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

கலைஞர் மறைவும் காலம் கடந்த விருதும்!!

#'தன்னிகரில்லாத் தலைவர் கருணாநிதி..... எழுத்தாற்றலும் சொல்லாற்றலும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற ஒரே மக்கள் தலைவர்; 'குறளோவியம்', 'தொல்காப்பியப் பூங்கா', 'சங்கத் தமிழ்', 'ரோமாபுரிப் பாண்டியன்', 'பொன்னர் சங்கர்' போன்ற அவரின் படைப்புகள் சாகாவரம்  பெற்றவை.

5 முறை தமிழக முதல்வராக இருந்து அளப்பரிய சாதனைகள் நிகழ்த்தியவர்; கூட்டாட்சித் தத்துவத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் தமிழகச் சட்டப்பேரவையில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றிய வரலாறு கருணாநிதிக்கு மட்டுமே உண்டு.

திராவிட இயக்கத்தின் ஆணிவேரான சமூக நீதி தழைப்பதற்காகப் பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு வழங்கி, இட ஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்டியவர்.

பெண்களுக்குச் சொத்துரிமை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என எண்ணற்ற சமூக நலத்திட்டங்களைச் செயபல்படுத்தித் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றியவர். மாநில எல்லைகளைக் கடந்து நாட்டு மக்கள் அனைவரது பேரன்புக்கும் போற்றுதலுக்கும் உரிய தலைவரான கருணாநிதிக்கு நடுவணரசு நாட்டின் உயரிய 'பாரத ரத்னா' விருதை வழங்கிச் சிறப்பித்தல் வேண்டும்.#

மேற்கண்டவகையில் பாராட்டுக்குரிய ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் ம.தி.மு.க. தலைவர் 'வைகோ' அவர்கள்[மேலும் சில தலைவர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள்]. 

விருது வழங்குவது குறித்துப் பரிசீலிப்பதற்கென்று குழு அமைக்கப்பட்டிருப்பதாகப் 'பாசக' தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் அவர்களும் அறிவித்திருக்கிறார்.

வைகோ குறிப்பிட்டிருப்பது போல, 'பாரத ரத்னா' விருது பெறுவதற்குரிய முழுத் தகுதியும் பெற்றவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.

இந்த விருது, ராஜாஜி, சி,வி,ராமன், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு அவர்கள் உயிர்வாழ்ந்த போதே வழங்கப்பட்டிருக்கிறது. இன்றளவும் வாழ்ந்துகொண்டிருக்கும் அடல் பிகாரி வாஜ்பேய் அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

'மதன்மோகன் மாளவியா'வுக்கு, அவரின் மறைவுக்குப் பின்னர் வழங்கப்பட்டது.

இம்மாதிரி விருதுகள் வழங்கப்படுவதன் முக்கிய நோக்கம், விருது பெறுபவர்களின் சேவையைப் பாராட்டுவதுதான்; நாடு அவர்களுக்கான தன் நன்றிக்கடனை வெளிப்படுத்துவதற்காக என்றும் சொல்லலாம். இதன் மூலம் விருது பெறுபவர் தொடர்ந்து சேவை புரிவதற்கான கூடுதல் ஊக்கத்தைப் பெறுகிறார்[சிலருக்கு இவை தேவையற்றனவாகவும் இருத்தல்கூடும்].

எனவே, சேவை புரிபவர் உயிர் வாழும்போதே விருது வழங்குவது மிக்க பயன் தருவதாக அமையும்.

கலைஞர், தம் மறைவுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே 'பாரத ரத்னா' விருதைப் பெறுவதற்கான முழுத் தகுதியும் பெற்றவராக இருந்தார். இதை நடுவண் ஆட்சியாளர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் அறிவார்கள்.

கலைஞர் காலமாவதற்கு முன்பே இவ்விருது வழங்கப்பட்டிருந்தால் அது போற்றுதலுக்குரியதாக அமைந்திருக்கும். இப்போதைய நடவடிக்கை காலம் கடந்த ஒன்று[விருது பெறுவதற்கான தகுதி பெற்ற ஒருவர் எதிர்பாராத வகையில் இறந்துபடுவாரேயானால் இறப்புக்குப் பின்னர் விருது வழங்குவதில் தவறில்லை].

பாரத ரத்னா பதக்கத்தில், அரச மர இலையில் சூரியனின் உருவமும் 'பாரத ரத்னா' என்னும் சொல்லும் இடம்பெற்றுள்ளன.  அச்சொல் இந்தியில் எழுதப்பட்டுள்ளது. பதக்கத்தின் மறு பக்கத்திலும் அதுவே இடம்பெற்றுள்ளது.

விருது பெறுபவரின் தாய்மொழியில் அது எழுதப்படுதல் வேண்டும். பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற விருதுகளின் பெயர்களும் விருது பெறுபவரின் தாய்மொழியிலேயே அமைவது மிக அவசியம்[தேசிய கீதத்தைக்கூட அவரவர் தாய்மொழியில் மொழியாக்கம் செய்து பாடுவதற்கு அனுமதித்தல் வேண்டும்]. இந்தியா ஒரு தேசம் என்பதற்காக மற்ற மொழிகளைப் புறக்கணித்து இந்தியை மட்டுமே முதன்மைப்படுத்தும் வழக்கத்தை நடுவணரசு கைவிடுதல் நாட்டு நலனுக்கு நல்லது.

மறைந்த கலைஞருக்கு[பெறுவோரிடம்]ப் 'பாரத ரத்னா' என்னும் இந்திச் சொல் தாங்கிய பதக்கம் வழங்கப்படுமேயானால், கலைஞர்[ஆவி வடிவில் அலைவது சாத்தியம் என்றால்] மட்டுமல்ல, அந்நிகழ்வை ஊடகங்கள் வாயிலாகக் காணுகிற அனைத்துத் தமிழ் நெஞ்சங்களும் மிக வருந்தும் என்பதை நடுவண் ஆட்சியாளர்கள் உணர்தல் வேண்டும்.
=======================================================================







11 கருத்துகள்:

  1. தங்களது கோரிக்கையின் ஆதங்கம் புரிகிறது நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆதங்கம் நிறைவேற வேண்டும் என்பது நம் ஆசை.

      நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  2. விருது பெறுபவரின் தாய்மொழியில் அது எழுதப்படுதல் வேண்டும். பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற விருதுகளின் பெயர்களும் விருது பெறுபவரின் தாய்மொழியிலேயே அமைவது மிக அவசியம்[

    உண்மை ஐயா
    தாய்மொழியில்தான் விருதுகள் வழங்கப்பட வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மற்ற மாநிலத்தவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். காத்திருப்போம்.

      நன்றி ஜெயக்குமார்.

      நீக்கு
  3. பாரத ரத்தினாவை எப்படி தமிழில் சொல்லலாம் ?
    சம்ஸ்கிருத எதிர்ப்பு கொண்ட கருணாநிதியின் பெயரே தூய சம்ஸ்கிருத சொல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா... தமிழர்களின் வரலாறா நீங்கள்?! மெத்த மகிழ்ச்சி!

      'பாரத ரத்னா' என்பது பிறமொழிச் சொல்லாக்கம். அதைத் தமிழ்ப்படுத்த வேண்டிய அவசியம் தமிழர்களுக்கு இல்லை. நடுவணரசு அனுமதித்தால், இதைவிடவும் சிறந்த விருதுப் பெயரைத் தமிழில் உருவாக்கித் தரமுடியும்.

      'நாங்கள் தமிழர்கள். எங்களுக்கு வழங்கும் விருதில் தமிழ் இடம்பெற வேண்டும்' என்றால் அது உங்களுக்கு வருத்தத்தைத் தருகிறதா?! ஏன்?

      எதற்கு இந்தத் 'தமிழர் வரலாறு' என்ற முகமூடி? 'சமஸ்கிருத வரலாறு', என்றோ 'இந்தி வரலாறு' என்றோ மாட்டிக் கொண்டிருக்கலாமே?

      கருணாநிதி சமற்கிருதச் சொல் அல்ல[பாவாணர் நூல்களைப் படியுங்கள்]. அது தூய தமிழ்ச் சொல்தான். சொற்கள் மட்டுமல்ல, தரமான கருத்துரு எதுவானாலும் அதை 'அவர்கள்' தம்முடையதாக்கிக் கொண்டார்கள்.

      கருணாநிதி ஒருவரின் தனிப்பட்ட பெயர். அது சமற்கிருதமாகவே இருந்தாலும் அதைப் பொருட்படுத்தத் தேவையில்லை. ஒரு மொழியில் பிறமொழிச் சொற்கள் கலப்பது தவிர்க்க இயலாதது. அதை நாம் எதிர்க்கவில்லை [தமிழ் மன்னர்களின் அமோக ஆதரவினால் வடமொழி இங்கே ஆதிக்கம் செலுத்தியது. சொற்கள் தமிழில் கலந்தன; பின்னர், அரபுச் சொற்கள், ஆங்கிலச் சொற்கள் எல்லாமும் கலந்தன]. பிற மொழி ஆதிக்கத்தையே எதிர்க்கிறோம்.

      மொழி உரிமை கோரும் பதிவு இது. தமிழில் எழுதுகிறீர்கள். தமிழராக இருக்க வாய்ப்புள்ளது. தமிழ் வளர்ச்சிக்குத் துணைபுரியாவிடினும் அதற்குத் தடைக்கல்லாக இருக்க வேண்டாம்.

      நன்றி நண்பரே.

      நீக்கு
    2. 'பாரத ரத்னம்'[ரத்தினம் என்பது ஒரு பொருளின்[கல்] பெயர். அதை மொழியாக்கம் செய்ய இயலாது] இருக்கட்டும்.

      'பத்ம பூஷன்', 'பத்ம விபூஷன்' என்ற சொற்களுக்குப் பொருள் அறிந்த பிற மொழிக்காரர்கள் எத்தனை பேர்? புரியாத மொழியை அவர்கள் மீது ஏன் திணிக்க வேண்டும்? அவரவர் தாய்மொழியில் வேறு பெயர்களை உருவாக்குதல் தவறல்லவே.

      இந்தியா ஒரு நாடு என்பதற்காக, ஒரு மொழிக்காரனின்[மாநிலத்தவன்] புரியாத மொழியை மற்ற மொழிக்காரர்கள் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை.

      நீக்கு
  4. பதில்கள்
    1. அதிராவைக் காணவில்லையே என்று, 'என் பக்கம்'புகுந்து புகுந்து தேடித் தேடிச் சலித்தேன். இப்போதுகூட, அங்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பினேன்.

      மீள்வரவும் பாராட்டுரையும் மகிழ்ச்சி தந்தன.

      நன்றி அதிரா.

      நீக்கு