பக்கங்கள்

வியாழன், 17 அக்டோபர், 2019

பாதம் தரிசிக்கப் பத்தாயிரமா?! அடேய்.....

காப்பீட்டு நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்த  ஒரு நபரால்[விஜயகுமார் நாயுடு], பதவியைத் துறந்து, ஒரு கல்வி நிறுவனத்தைத் தொடங்கி, அதையே ஓர் ஆசிரமமாக மாற்றி, கொஞ்ச நாள் தலைமறைவு வாழ்க்கை நடத்தித் திடீரென, “விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான ‘கல்கி’ நான்தான்” என்று பிரகடனம் செய்ய முடிகிறது என்றால், அந்த நபர்.....

உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையினர், கடவுளின் பெயரால் பரப்பப்படும் கட்டுக்கதைகளை நம்பும் படுமூடர்கள் என்பதைப் புரிந்துகொண்டுவிட்ட புத்திசாலி என்பதில் எள்முனையளவும் சந்தேகத்திற்கு இடமில்லை.

இம்மாதிரியான புத்திசாலிகள் பலர் இம்மண்ணில் உலவினார்கள்; உலவிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஓர் ஆள்தான் உலக அளவிலான பக்தர்களால் ‘கடவுள்’ என்று போற்றி வழிபடப்படும் ‘கல்கி பகவான்’.

கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்பவனைத் திருடன் என்கிறோம். பக்தர்களின் புத்தியை மழுங்கடித்துத் திருடுகிற கும்பலைச் சேர்ந்த இந்த ஆளை என்ன சொல்லி அழைப்பது?

வன்முறையால் பணம் பறிக்கும் திருடர்களைச் சிறை செய்து வழக்குத் தொடுத்துத் தண்டிக்கும் நம் அரசுகள், அவதார வேடம் புனைந்து கொள்ளையடிக்கும் இந்தத் திருடர்களை வளரவிட்டு வேடிக்கை பார்ப்பது ஏன்? ஆட்சியாளர்களிலும் அதிகாரிகளிலும் சிலரே இவர்களின் பாதம் தரிசித்துச் சேவகம் புரிவது காரணமா?[இப்போதுதான் கொஞ்சம் விழிப்புணர்வு பெற்ற அரசு, வருமானத்துறையை ஏவி, சோதனை நடத்தியிருக்கிறது. ஆதாரம்: 17.10.2019 நாளிதழ்களில் வெளிவாகியுள்ள செய்தி]

நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இந்த அவதாரபுருஷனின் பாதம் தொழும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். பக்தர்களின் எண்ணிக்கை பெருகியது போலவே செல்வமும் பெருகியது.

ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி அருகே பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட, பிரமாண்டமான ஆசிரமம் இருக்கிறதாம் உலகம் புகழும் இந்த ஆன்மிகத் தோன்றலுக்கு. 

ஆசிரமா அது? அல்ல...அல்ல. பிரமாண்ட அரண்மனை. 



ஆசிரமம் நோக்கி அலை அலையாய்ச் சென்று குவியும் பக்தர்கள் இந்த அவதாரக் கடவுளின் பாதம் தரிசிக்கச் செலுத்தும் காணிக்கை ரூபாய் பத்தாயிரமாம்.

இந்த ஆளின் பாதங்களைக் கத்தியால் கீறியிருந்தால் ரத்தம் பெருகி வழிந்திருக்கும். கூரிய ஊசியால் ‘நறுக்’ என்று குத்தியிருந்தால் “ஐயோ” என்னும் அலறல் ஒலி கேட்டிருக்கும். கொஞ்சமே கொஞ்சம் தோலைச் சீவி எடுத்திருந்தால், “ஐயய்யோ..வேண்டாம் விட்டுவிடு” என்று கெஞ்சிக் கூப்பாடு போடுவதைக் கேட்டிருக்கலாம்.

இவற்றில் ஏதாவது ஒன்றை நிறைவேற்றியிருந்தால் போதும் இந்த நபர் கடவுளின் அவதாரம் அல்ல; கடவுளும் அல்ல என்பது புரிந்திருக்கும்.

சிந்திக்கும் அறிவு கிஞ்சித்தும் வாய்க்காத நம் உடனுறையும் மூடர்களை எப்படித்தான் திருத்துவது?!
===========================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக