அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 17 செப்டம்பர், 2020

தினமலரின் 'அரைவேக்காடு' ஆன்மிகப்பணி!!!

#"கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?" என்று ஆன்மிகவாதி பகுத்தறிவாளரிடம் கேட்டார்.

"இல்லை" என்று திடமாகச் சொன்னார் பகுத்தறிவாளர்.

"உங்கள் இருதயம் துடிப்பதைப் பார்த்திருக்கிறீர்களா?" -இது, ஆன்மிகவாதியின் அடுத்த கேள்வி.

"இல்லை" -பகுத்தறிவாளர்.

"உங்கள் மார்பின் மீது கை வையுங்கள்."

வைத்தார் பகுத்தறிவாளர்.

"இப்போது எதை உணருகிறீர்கள்?"

"என் இருதயம் துடிப்பதை உணர்கிறேன்."

"கண்ணால் பார்க்க முடியாத இருதயத் துடிப்பை உங்களால் உணர முடிந்தது. அதைப் போல, கடவுளையும் பார்க்க முடியாது; உணரத்தான் முடியும்" என்று சொன்னார் ஆன்மிகவாதி.

பகுத்தறிவாளர் வாயடைத்துப்போனார்.#

-இப்படி முடிகிறது கதை.[https://temple.dinamalar.com/news_detail.php?id=107587]

தன்னிச்சையாய்த் தரப்பட்ட 'முடிவு' இது.

"இருதயத் துடிப்பைத் தொட்டு உணருவதுபோல் எதைத் தொட்டால் கடவுளை உணரலாம்?' என்று ஒரு கேள்வியை எழுப்பி, எதையும் தொட்டு மட்டுமல்ல, பார்த்தோ, கேட்டோ, நாக்கால் சுவைத்தோ, மூக்கால் நுகர்ந்தோ கடவுளை உணர முடியாது" என்பதைக் கொஞ்சம் சிந்தித்தாலே அறிய முடியும்.

உணர்கிறார்களோ இல்லையோ, தினமலர்க்காரர்களின் நோக்கம் நம் மக்கள் எக்காலத்தும் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டுவிடக் கூடாது என்பதுதான். 

                              **************************************

'கோயில்'[temple.dinamalar.com] என்று ஒரு தளத்தை உருவாக்கி வைத்துக்கொண்டு, நம்பவே இயலாத புராணக் கதைகளை வெளியிட்டுவருகிறது இந்த 'அரைவேக்காடு' நாளிதழ்.

பக்தகோடிகளுக்கு, சிவபெருமானைத் தெரியும்; பார்வதி தேவியையும் தெரியும். பார்வதிக்கு மாமியார் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

'பார்வதியின் மாமியார்' என்றொரு கதையைக்[இது காரைக்காலம்மையார் புராணத்தில் இல்லை] கற்பனை செய்து வெளியிட்டிருக்கிறது தினமலர். 

ஒரு நாள், "எல்லாப் பெண்களுக்கும் மாமியார் இருப்பார். அப்படியொருவர் எனக்கு இல்லையே"ன்னு அம்மை அப்பனிடம் வருத்தப்பட்டாராம்.

"காரைக்காலம்மையார்தான் என் தாய். அவர்தான் உனக்கு மாமியார். நம்மைக் காண வந்துகொண்டிருக்கிறார்" என்றார் ஐயன்.

அம்மை, காரைக்காலம்மையின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தார்.

கணவன் தன்னைத் தெய்வமாக மதித்து வணங்கியதால் வருத்தப்பட்ட அந்த அம்மையார், இறைவனை வேண்டிப் பேய் உருவம் பெற்றிருந்தார்[கூகுள் தேடலில், 'காரைக்காலம்மையார்'ஐத் தேடிக் கதையைப் படித்துவிடுங்கள்].

நடந்து சென்றால் அது சிவனை அவதித்ததாகும் என்று நினைத்துக் கைகளால் நடந்து[தலைகீழாக] கயிலைமலைக்குப் போனார் காரைக்கால் அம்மையார். அது கண்டு நெகிழ்ந்த சிவபெருமான், அவரைத் தன்னருகே அமர்த்தி, "இவர்தான் உன் மாமியார்" என்று தன் துணைவியிடம் சொன்னார்[*இதுவரையிலான கதை நிகழ்வு தினமலரின் கைங்கரியம். உண்மைக் கதையின் இறுதி நிகழ்வைக் கீழே தந்திருக்கிறேன்.]

பார்வதிதேவி பெரு மகிழ்ச்சியில் திளைத்தார்.

இம்மாதிரி, கிஞ்சித்தும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கதைகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுத்தான் ஆன்மிகப் அழிப்புப் பணி செய்துகொண்டிருக்கிறது தினமலர்.

* "சுவாமீ! இங்கே தலையினால் நடந்து ஏறிவருகின்ற எற்புடம்பை யுடையவரது அன்பின் மகிமை இருந்தபடி என்னை" என்று விண்ணப்பஞ்செய்ய, பரமசிவன் "இங்கே வருகின்றவள் நம்மைத் துதிக்கின்ற அம்மை என்றறி இந்தப் பெருமை பொருந்திய வடிவத்தையும் வேண்டிப் பெற்றாள்' என்றார். 

பின் புனிதவதியார் சமீபத்தில் வந்தவுடனே உலகமெல்லாம் உய்யும் பொருட்டு, அவரை நோக்கி, "அம்மையே" என்று அழைத்தார். அது கேட்ட புனிதவதியார் "அப்பா" என்று சொல்லிக்கொண்டு அவருடைய திருவடிகளிலே விழுந்து நமஸ்கரித்து எழுந்தார். 

சுவாமி அவரை நோக்கி, "உனக்கு வேண்டும் வரம் யாது" என்று வினாவ; புனிதவதியார் வணங்கி நின்று, "சுவாமி! அடியேனுக்கு இறவாத பேரின்பமயமாகிய அன்பு வேண்டும்; இனி பிறவாமை வேண்டும்; பிறக்கினும் தேவரீரை ஒரு காலமும் மறவாமை வேண்டும்; இன்னும் தேவரீர் திருநிருத்தஞ் செய்யும்பொழுது, தேவரீருடைய திருவடியின் கீழே சிவானந்தத்தை உடையேனாகி, தேவரீரைப் பாடிக் கொண்டு இருத்தல் வேண்டும்." என்று விண்ணப்பஞ்செய்தார். 

சுவாமி அவரை நோக்கித் "தென்றிசையிலுள்ள ஆலங்காட்டிலே நம்முடைய நடனத்தைத் தரிசித்து, பேரானந்தத்தோடு நம்மைப் பாடிக்கொண்டிரு" என்று அருளிச்செய்தார். 

அதுகேட்ட காரைக்காலம்மையார் சுவாமியை நமஸ்கரித்து அநுமதி பெற்றுக்கொண்டு, திருவாலங்காட்டுக்குத் தலையினால் நடந்து சென்று, சுவாமியுடைய திருநடனத்தைத் தரிசித்து, "கொங்கை திரங்கி" என்னும் மூத்த திருப்பதிகத்தையும், "எட்டியிலவமீகை" என்னுந் திருப்பதிகத்தையும் பாடினார். அவர் சுவாமியுடைய தூக்கிய திருவடியின் கீழே சிவானந்தத்தை அநுபவித்துக் கொண்டு எக்காலமும் இருக்கின்றார்...'[நகல் பதிவு].

===============================================================