பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 7 ஜனவரி, 2024

பாவி மருமகளும் அப்பாவி மாமியார்க் கிழவியும்![நெஞ்சைச் சுட்ட உண்மைக் கதை]

ன் மருமகளுடனான சண்டையில் வழக்கம்போல் தோல்வியைத் தழுவிய நிலையில், “எனக்குச் சாவு எப்ப வருமோ?” என்று விரக்தியுடன் ‘அருக்காணி’க் கிழவி தொணதொணத்தபோது, “சாவு நம் வீடு தேடி வந்து கதவைத் தட்டாது. நாமதான் சாவைத் தேடிக்கணும்” என்று சொல்லி மருமகள் முறைத்துவிட்டுப் போனது கிழவியை வெகுவாக நோகடித்துவிட்டது.

“என்னைச் செத்துத் தொலைன்னு சொல்லிட்டாளே” என்று நாள் முழுக்கப் புலம்பித் தீர்த்தாள் கிழவி.  

“ஏதோ ஒரு கோபத்தில் சொல்லிட்டா போல. அப்புறமா அவ வருத்தப்பட்டிருப்பா” என்று ஒரு வழியாய் மனம் தேறி உறங்குவதற்குப் பாய் விரித்தபோது மருமகள் உச்சத் தொனியில் தன் புருஷன்காரனிடம் சொல்வது கேட்டது. “எலித் தொல்லை தாங்க முடியல. மறக்காம நாளைக்கு ‘எலி மருந்து’ வாங்கிட்டு வாங்க.”

இப்போது கிழவி மனதில் வேறொரு சந்தேகம் முளைவிட்டது. “வூட்ல எலி நடமாட்டமே இல்லியே. எலி மருந்து மனுசரைக் கொல்லுற விஷமாச்சே. அதை எதுக்கு இவ வாங்கியாரச் சொன்னா?”

எத்தனை யோசித்தும் விடை கிடைக்கவில்லை. ஜாமக்கோழி கூவும் நேரத்தில், “நான் முக்காக் குருடி. எலி வர்றதும் போறதும் எனக்கு எப்படித் தெரியும்? அவ பார்த்திருப்பாளாக்கும்” என்று சமாதானமாகி உறங்கிப் போனாள் அருக்காணிக் கிழவி.

அடுத்த இரண்டு நாட்களில், மீண்டும் ஒரு சந்தேகம் கிழவியின் மனதைக் குடையலாயிற்று. “என் மவன் பொண்டாட்டி சொல்லைத் தட்டாதவனாச்சே, எலி மருந்து வாங்கியாந்திருப்பானா?”

மருமகள் இல்லாத நேரத்தில் மகனிடம் கேட்க நினைத்தாள் கிழவி. அவன் வெளியூர் போயிருந்ததால் அது சாத்தியப்படவில்லை.

அன்று மாலை அவன் வீடு திரும்பினான். அவன் வந்ததும் வராததுமாக, மருமகள் உரத்த குரலில் சொல்வது கேட்டது. “வெச்ச மருந்து அப்படியே இருக்குது. அது சாகல.”

அதிர்ச்சிகுள்ளானாள் கிழவி. “சாகலைன்னு பொத்தாம்பொதுவாச் சொல்றாளே, எலியைச் சொல்றாளா, என்னைச் சொல்றாளா?” -இப்படியான புதியதொரு சந்தேகம் கிழவியை ஆட்டிப்படைக்கலாயிற்று. எதிர்ப்படுவோரிடம் எல்லாம் தன் சந்தேகத்தைச் சொல்லிப் பதிலை எதிர்பார்த்தாள். 

யாரும் பதில் சொல்லவில்லை; சிரித்து மழுப்பிவிட்டுப் போனார்கள்.

அதற்கப்புறமும்,

“சாகலயேன்னு சொல்லுறாளே மருமவ, எலியையா என்னையா?” என்று தனக்குத்தானே கேள்வி கேட்டுப் புலம்புவது கிழவிக்கு வழக்கமாகிப்போனது.