எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

வியாழன், 22 ஜனவரி, 2026

ஸ்ரீமதி நீதிபதியா, பகுத்தறிவாளர்களின் பரம எதிரியா?!

 

மைச்சரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை[அதர்மம்] விமர்சித்தது தொடர்பான ஒரு வழக்கில்[அதை விவரிப்பது இங்குத் தேவையற்றது], சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி*** வழங்கியுள்ள தீர்ப்பின் சில அம்சங்கள் இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

+++//அமைச்சரின்[உதயநிதி] பேச்சு 80 சதவீத இந்துக்களுக்கு எதிரானது> நீதி[துறை] அதிகாரி[நீதிபதி]//

எந்தவொரு புள்ளிவிவரத்தையும் ஆதாரமாகக்கொண்டு இந்தச் சதவீதக் கணக்கை நீதி(துறை) அதிகாரி[நீதி‘பதி’ அல்ல]முன்வைக்கவில்லை. இது அவரின் விருப்பம் சார்ந்தது.

நடுநிலையாளர் குழு அமைத்துக் கணக்கெடுத்தால், இந்துக்கள் பலரும் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டிருப்பது அறியப்படக்கூடும். அவர்கள் பெரும்பாலும் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற மட்டுமே கடவுளை வழிபடுபவர்கள்.  இதை நீதி(துறை) அதிகாரி அறிந்திருக்கவில்லை.

அவர் தன் தீர்ப்பில், “சனாதனியான மனுதாரர்..... சனாதன தர்மத்தைப் பாதுகாத்துள்ளார்” என்று குறிப்பிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.

நம் கேள்வி: சாதி மதம் போன்ற தற்சார்பு நிலைகளிலிருந்து விடுபட்டுத் தீர்ப்பு வழங்குவதைக் கடமையாகக் கொள்ள வேண்டிய இந்த நீதி(துறை)  அதிகாரி, சனாதனப் பாதுகாப்பில் இத்தனை அக்கறை காட்டியிருப்பது ஏன்?

காரணத்தை அவர் மட்டுமே அறிவார்.

உதயநிதி கருத்துச் சொன்னது, சனாதனம் என்னும் பெயரில் அளவு கடந்த மூடநம்பிக்கைகளை மக்கள் மீது[இந்து மதத்தின் பெயரால்] திணிக்கும் கூட்டத்தாரைத்தானே[சனாதனவாதிகள்] தவிர, அனைத்து இந்து மதம் சார்ந்தவர்களையும் அல்ல என்பதையும் அறிந்துணரத் தவறிவிட்டார் அவர்.

எனவே,

நீதி வழங்கும் நீதிமன்ற அதிகாரிகளிடம் நாம் வேண்டிக்கொள்வது, சட்டப் புத்தகங்களை நீங்கள் ஆழ்ந்து படிப்பது போலவே, சிந்திக்கத் தூண்டுகிற அறிஞர்களின் நூல்களையும் படித்துத் தெளிதல் வேண்டும் என்பதுதான்.

தொடர்புடையதொரு செய்தி:

'Judge' என்னும் சொல்லை, ‘நீதிபதி’ என்று மொழியாக்கம் செய்வது தவறு, அவர்கள் நீதியின் தலைவர்[பதி]கள் அல்ல என்பதால். அவர்களை நீதி அதிகாரி என்று அழைக்கலாம், அமலாக்கத்துறை அதிகாரி, வருவாய்த்துறை அதிகாரி என்பன போல.

                                  *   *   *   *   *
***நீதி அதிகாரி[நீதிபதி> Judge) என்பவர் சட்டப்படி நீதியை வழங்கும் அதிகாரம் பெற்ற, நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்து, சான்றுகளை ஆராய்ந்து தீர்ப்புகளை வழங்கும் ஒரு பொது அதிகாரி[The word "judge" has multiple meanings, referring to a legal official in a court] ஆவார்.

                                          ===========================

புதன், 21 ஜனவரி, 2026

பக்திமான்களுக்கான ஒரு ‘பத்தரைமாற்று’க் குட்டிக் கதை!

சாலையைக் கடந்துகொண்டிருந்த ஒரு பள்ளிச் சிறுவனை மோதித் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது அந்த வாகனம்.

ரத்தக் காயங்களுடன் கிடந்த அவனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, அவனுடைய அடையாள அட்டையிலிருந்த தொ.பே. எண்ணுக்குத் தகவல் தந்தான் கூலித் தொழிலாளி தங்கராசு.

விரைந்து வந்த சிறுவனின் பெற்றோர், மருத்துவரைப் பார்த்துவிட்டு, தங்கராசுவை அணுகினார்கள்.

“பத்து நிமிசம் தாமதம் ஆகியிருந்தா உங்க பிள்ளையைக் காப்பாத்தியிருக்க முடியாதுன்னு டாக்டர் சொன்னார். ஆண்டவனாப் பார்த்து உங்களை அனுப்பியிருக்கார்.  ரொம்ப நன்றிங்க” என்று சொல்லித் தங்கராசுவின் இரு கைகளையும் பற்றித் தன் கண்களில் ஒற்றிக் கொண்டார் சிறுவனின் தந்தை.

நீங்க வேண்டிக்காமலே அவராகப் பார்த்து உங்களுக்கு உதவி செய்ய என்னை அனுப்பியிருக்கார். ஆனா, என் ஏழு வயசுக் குழந்தை காணாம போயி ரெண்டு வருசம் ஆச்சு. நான் தப்புச் செஞ்சிருந்தா அதுக்கான தண்டனையை எனக்குக் கொடுத்துட்டு, என் ஏதுமறியாப் புள்ளையை மீட்டுத் தந்துடுன்னு அவரை வேண்டிக்காத நாளே இல்ல. இன்னிக்கிவரை அவர் கருணை காட்டல.” -தங்கராசுவின் கண்களில் மடை திறந்தாற்போல் கண்ணீர்.

ஆறுதல் சொல்லும் வகையறியாமல் மனம் கலங்கினார் சிறுவனின் தந்தை.

செவ்வாய், 20 ஜனவரி, 2026

“இது கட்டங்கடைசி வாய்ப்பு! ‘தி.மு.க.’ காலிகள் ஆட்சியைக் கலைச்சிடுங்க பிரதமரே!”

நவீன அரசியல் சாணக்கியர் அமித்ஷுவைத் தளபதியாகக்கொண்ட பிரதமர் மோடி அவர்களே,

ஆளுநராம் ஆர்.என்.ரவி[ஆட்சியாளர்களுக்குத் தொடர்ந்து குடைச்சல் கொடுப்பதற்கென்றே உம்மால் அனுப்பப்பட்டவர்] தி.மு.க. அரசால் தொடர்ந்து அவமதிக்கப்பட்டால், அதைக் கலைத்துவிடுவது முன்கூட்டியே நீர் தீட்டியுள்ள திட்டம்.

கடந்த ஆண்டுகளில், சட்டமன்றம் தொடங்கும்போதெல்லாம் உம்முடைய அறிவுறுத்தலின்படி, ஏடாகூடமாக எதையேனும் உளறிக்கொட்டிவிட்டு மன்றத்திலிருந்து ரவியார் வெளியேறுவார். தி.மு.க.வினர் அவரைச் சற்றேனும் அவமதிக்கும் வகையில் விமர்சனம் செய்வார்கள். 

அந்த அவமதிப்பு அத்தனைக் கனமானதாக இருந்ததில்லை என்பதாலோ என்னவோ, தி.மு.க. ஆட்சியைக் கலைப்பதை நீர் தவிர்த்துவந்தீர்.

இன்று[20.01.2026] நடந்த சட்டமன்றக் கூட்டத்திலும், ரவியானவர் அவமதிக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன[குறிப்பாக, 'பாஜக’ ஆதரவு ஊடகங்கள்> வரிவிடாமல் படித்திருப்பீர் என்பது எம் நம்பிக்கை].

ரவி அவமானப்படுத்தப்பட்டதைக்[கனமானதாக இல்லாமல் லேசானதாக இருப்பினும்] காரணம் காட்டி, உடனடியாகக் கலைப்பு[தி.மு.க. ஆட்சி] வேலையைச் செய்துமுடிப்பீர் என்று நம்புகிறோம்.

2026 தேர்தல்வரை தி.மு.க. ஆட்சி நீடித்தால், தில்லுமுல்லுகள் பல செய்து, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அவர்கள் கைப்பற்றுவார்கள் என்பதைக் குறிப்பிட விரும்புகிறோம்.

கில்லாடி ரவியின் முழுமையான ஆளுகையின் கீழ் தமிழ்நாடு இருந்தால்தான், கூட்டணிக் கட்சிகளின்[கொத்தடிமைகள்] துணையுடன் அதிதீவிரப் பிரச்சாரம் செய்து, தேர்தலில் வெற்றிக் கனியைப் பறிப்பது சாத்தியமாகும் என்றும் உம்மை எச்சரிக்கிறோம்.

வெல்க நீவிர்! தமிழ்நாட்டில் மலர்க ‘பாஜக’ ஆட்சி!!

திங்கள், 19 ஜனவரி, 2026

ஆன்மா இல்லை என்றால் கடவுளின் கதி?!

செத்தொழிந்த பிறகு, ஆன்மா என்றோ ஆவி, பூதம், பேய், பிசாசு என்றோ ஏதோ ஒரு வடிவில் மரணம் இல்லாப் பெரு வாழ்வு வாழ்வதுதான் மனிதராய்ப் பிறந்தவர்களின் ஆசை.

மேற்கண்டவற்றில், ‘ஆன்மா’ மீதான நம்பிக்கை மனித மனங்களில் அழுத்தமாகப் பதிந்ததுவிட்டது.

மரணித்த பிறகு, அந்த ஆன்மா வெறுமனே அண்டவெளியில் திரிந்துகொண்டிருப்பதை அவர்கள் விரும்பாததால், பரலோகம்[ஏதோ ஓர் உலகம்], தேவலோகம், சொர்க்கம் எல்லாம் இருப்பதாகவும், புண்ணியம் செய்தால் அங்கெல்லாம் சென்று[ஆன்மாவாக] காலவரையறை இல்லாமல் களித்திருக்கலாம் என்றும் ஆசைப்பட்டார்கள்.

புண்ணியத்திற்கு எதிரான பாவமும் நினைவுக்கு வரவே, பாவம் செய்தவர்கள் நரகம் சேர்ந்து பெரும் துயரத்தில் மூழ்கிக் கிடப்பார்கள் என்று முடிவு செய்தார்கள்.

பாவமோ புண்ணியமோ, நரகமோ சொர்க்கமோ, ஆன்மா இடம் மாறி மாறித் துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்தாலும், தங்களுக்கெறு ஓர் ஆன்மா தேவை என்பது மனிதர்களின் விருப்பம். அதன் மூலம் இறந்த பிறகும் இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்பது அவர்களின் அழிவில்லாத ஆசையாக உள்ளது.

என்றேனும் ஒரு நாள்.....

ஆன்மாவோ, சாகும்போது உடம்புக்குள்ளிருந்து வெளியேறுகிற எதுவுமோ இல்லை என்று அறிவியல் ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுவிட்டால்....

கடவுள் என்றொருவர்[ஆன்மாவைச் சொர்க்கத்திற்கு நரகத்திற்கும் அனுப்புபவர்] இருந்தாலும்[அவர் மீதான நம்பிக்கை சிதையவும் வாய்ப்புள்ளது], மற்ற உயிரினங்களுக்கு உள்ளது போல், இன்பத் துன்பங்களுடனான அற்ப ஆயுளை மட்டும் தந்ததற்காக[ஆன்மா, பாவம், புண்ணியம் என்று கதையளந்து பிழைப்பு நடத்தும் ‘சத்துக்குரு’ ஜக்கி போன்றோர் பாடு திண்டாட்டம்] மனிதர்கள் அவரை நிந்திப்பார்கள்.

கோயில் கட்டுதல், விழா எடுத்தல், கொண்டாடுதல் என்று கோடிக்கணக்கில் மனித மண்டூகங்கள் செய்யும் செலவு மிச்சமாகும்! 

ஹி... ஹி... ஹி!!!

ஞாயிறு, 18 ஜனவரி, 2026

வைகுண்டத்திலா, கைலாயத்திலா எங்கே தேடலாம் அவதாரம் மோடியை?

//Dhaka: In Bangladesh’s Gazipur district, a Hindu man was beaten to death after he tried to protect a teenage worker from an attack, police told local media//

Bangladesh: Hindu Shop Owner Beaten To Death While Protecting Teen Worker-இது அண்மை நிகழ்வு.

இதற்கு முன்பான இஸ்லாமியரின் தாக்குதல்களில், 116 இந்துக்கள்[+பிற சிறுபான்மையினர்> குறைந்த எண்ணிக்கையில்] கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

அவதாரம் மோடி எங்கே போனார்? ராமச்சந்திர மூர்த்தியைத் தேடி வைகுண்டத்திற்கா, சிவபெருமானைச் சந்திக்கக் கைலாயத்திற்கா?

அவரைக் கண்டுபிடித்துத் தகவல் சொல்வாரா ‘சத்துக்குரு’ ஜக்கிப் பகவான்?

https://www.msn.com/en-in/money/news/hindu-man-killed-with-shovel-while-trying-to-save-employee-in-bangladesh/ar-AA1UpAzm?ocid=BingHp01&pc=BG00&cvid=c6a2d9fcb9684a309e39d3bba853b49a&ei=

சனி, 17 ஜனவரி, 2026

பக்தர்களே, ஆஞ்சநேயரை[நாமக்கல்] அடிமுட்டாள் ஆக்காதீர்கள்!!!

ஆஞ்சநேயரின் ஆயுட்காலப் பரிசுத்தப் பக்தர்களே,
ஆண்டாண்டுதோறும் விசேட நாட்களில், பிரசித்திப் பெற்ற ஆஞ்சநேயச் சாமி[நாமக்கல்]க்கு, வெண்ணெய்க் காப்பு, திருமஞ்சனக் காப்பு(மஞ்சள், பால், தயிர், சந்தனம்) என்றிவற்றால் குளிப்பாட்டி, விதம் விதமாய் அலங்கரித்து, அபிஷேக ஆரதனைகள் நிகழ்த்தி வழிபடுகிறீர்கள். மகிழ்ச்சி.

வெறும் தகரக் கவசம், பித்தளைக் கவசம், செம்புக் கவசம் எல்லாம் அணிவிக்காமல், முலாம் பூசிய தங்கக் கவசத்தை அவருக்கு அணிவித்து, தீபாராதனை காட்டி[அர்ச்சகர்கள் மூலம்]ஆனந்தப் பரவசத்துடன் நீங்கள் பிரார்த்திப்பது கண்கொள்ளாக் காட்சி; காண்போரின் இரு கண்களிலும் மாலை மாலையாய் ஆனந்தக் கண்ணீர் வழிய வைப்பதும்கூட.

ஆனால், நீங்கள் மாமூலாகச் செய்கிற ஒரு பெரிய தவற்றை உணரத் தவறிவிட்டீர்கள். அத்தவறு உங்கள் மீது ஆஞ்சநேயக் கடவுள் கடும் சினம்கொள்ளத் தூண்டும் என்பதை அடியோடு மறந்துவிட்டீர்கள்.

தங்க முலாம் பூசிய கவசத்தை அவருக்கு அணிவித்துவிட்டு, தங்கக் கவசம் அணிவித்து வழிபட்டதாக ஊடகங்களுக்குச் செய்தி அளிப்பதுதான் அந்தத் தவறு.

இனியேனும் அந்தத் தவற்றைச் செய்யாதீர்கள். 

‘தங்க முலாம் பூசிய கவசம் அணிவிக்கப்பட்டது’ என்றே செய்தி வெளியிடுங்கள். அதைச் செய்தால், உங்களின் நேர்மையையும் அளப்பரிய பக்தியையும் மெச்சி,  உங்களுக்கு[எங்களைப் போன்ற தெய்வ நிந்தனை செய்யும் பாவிகளுக்கும்தான்] அனுமார் சாமி அருள்மழை பொழிவார் என்பது உறுதி.

நலம் தரும் நாமக்கல் ஆஞ்சநேயரின் திருவடி போற்றி!

வெள்ளி, 16 ஜனவரி, 2026

ஆட்டு மூளை மனிதர்களுக்கும் தேவை ‘காப்புக்கட்டு’!!!

தை மாத அறுவடை முடிந்து விளைபொருள்கள் வீட்டுக்கு வந்துசேர்ந்த பிறகு கொண்டாடப்படுகிறது பொங்கல் பண்டிகை. அந்த விளைபொருட்கள்தான் ஓர் ஆண்டுக்கான உணவாகவும், அடுத்த விளைச்சலுக்கான விதையாகவும் இருக்கின்றன. அவை கெட்டுப்போகாமல் இருப்பதற்குத்தான் வீடுகளுக்குக் காப்புக் கட்டுவதாகச் சொல்கிறார்கள்.

இதற்கு வேப்பிலை, சங்கராந்திப் பூடு, ஆவாரம் பூக்கொத்து ஆகியவற்றின் தொகுப்பு வீடுகளின் முகப்பில் காட்சிக்கு[காவலுக்கு?] வைக்கப்படுகின்றன.

”நம்மவர்களால்[தமிழர்கள்] பாரம்பரியமாக இது செய்யப்படுவதால் இதைப் புத்திசாலித்தனமான செயல் என்று ஏற்க இயலாது. மேற்கண்ட மூன்று பொருட்களுக்கும் பண்டம் கெட்டுப்போகாமலிருப்பதற்கும் தொடர்பு ஏதுமில்லை. தமிழர்கள் தூக்கிச் சுமக்கும் மூடநம்பிக்கை[திணிக்கப்பட்டது> மகர சங்கராந்தி என்னும் பெயரில் கொண்டாடப்படும் போகிப் பண்டிகை]களில் இதுவும் ஒன்று” என்கிறார் என் நெருங்கிய நண்பர் ஒருவர்.

மேலும், காப்புக்கட்டு அன்று[14.01.2026], மேற்கண்ட முப்பொருள்களின் தொகுப்பைத் தன் கழுத்தில் தொங்கவிட்டுத் தெருத்தெருவாகச் சுற்றிவந்தார்.

இதை வேடிக்கை பார்த்து, கமுக்கமாகப் பலர் சிரிக்க, நெருங்கிவந்து விசாரித்தவர்களிடம், “வீட்டிலுள்ள அறுவடை செய்யப்பட்ட உணவுப் பொருள் கெட்டுப்போகாமலிருக்க வீடுகளில் கட்டுற மாதிரி, சில நாட்களேனும் என் மனசு கெடாமலிருக்கக் ‘காப்புக்கட்டு’ கட்டியிருக்கேன். இது முட்டாள்தனம்னா, வீடு, மிதிவண்டி, பைக், கார் போன்ற வாகனங்களுக்கும் கட்டுவது இதைவிடவும் பல மடங்கு முட்டாள்தனமானது. தைப் பொங்கல் கொண்டாடுவதில் புத்திசாலித்தனம் இருக்கிறது. தமிழனை முட்டாள் ஆக்குவதற்காகவே நம் இனத் துரோகிகள் வலிந்து திணித்தது இந்த வழக்கம்” என்று ஒரு குட்டிச் சொற்பொழிவு நிகழ்த்தி அவர்களைத் திகைக்க வைத்தார்.

இன்றுதான் அவரின் கழுத்தில் ‘காப்புக்கட்டு’ தொங்கிக்கொண்டிருப்பதைக் கவனிக்க நேர்ந்தது. படம் எடுத்து[படத்தில் முகம் தெரியக்கூடாது என்பது அவர் விதித்த கட்டுப்பாடு] வெளியிட்டிருக்கிறேன்.

                                                ====================

கடைந்தெடுத்த கயவர்கள் பரப்பிய கட்டுக்கதை:

//போகிப் பண்டிகை, மார்கழி மாதத்தின் கடைசித் தினத்தில் [பழையன கழிந்து புதியன புகும் நாளான அன்று] நமது முன்னோர்கள் நம் இல்லத்திற்கு வருவதாகச் சாஸ்திரம்[எந்தச் சாஸ்திரம் சொல்லுதுன்னு எவனாவது கேட்டிருக்கிறானா?] சொல்கிறது. 

அதனால் அவர்களுக்குப் பிடித்த உணவைப் படைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், புத்தாடைகளை வைத்து, தீப ஆராதனை செய்து வணங்க வேண்டும்.

பொங்கலிடுவதற்கு முன்னர் "காப்புக்கட்டுதல்" என்ற பெயரில் வீட்டின் வாசலில்  வேப்பிலை, பீளைப்பூ, ஆவாரம்பூ கொத்துகளைச் சொருகி, சுற்றியுள்ள ஆன்மாக்களை வீட்டருகே வரச் செய்வார்கள்//

                                          =================

இதற்கு எதற்கு ஒரு பண்டிகை?!

//போகி என்ற சொல் சமஸ்கிருதத்தின் போக அல்லது போக்ய என்ற சொல்லிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் பொருள் – அனுபவம், செல்வம், வளம் என்பதாகும். மேலும், பழைய துன்பங்கள், சோம்பல், துக்கங்கள் ஆகியவற்றை ஒதுக்கி வைத்து> பழைய பொருட்களை எரிப்பதற்கும் இதற்கும் என்ன தொடர்பு?], புதிய நம்பிக்கைகளுடன் வாழ்க்கையைத் தொடங்கும் நாளாகவும்[மற்ற நாட்களில் இந்த நம்பிக்கைகள் தேவையில்லையா?] போகி கருதப்படுகிறது//

வியாழன், 15 ஜனவரி, 2026

தாங்காது மோடி மகானே, இந்தப் பூமி தாங்கவே தாங்காது!!!

“பொய் பேசினாலும் பொருந்தப் பேசு” எனபது வழக்கு மொழி. 

“மனம்போனபடியெல்லாம் புளுகிப் பிறரை மனம் நோகச் செய்யாதே” என்பது இதன் மூலம் நாம் பெறும் அறிவுரை; வாழ்க்கைக்கான நெறிமுறையும்கூட.

இது சாமானிய மக்களுக்கு மட்டுமே ஆனது; நாட்டை ஆளும் பெரிய தலைவர்களுக்குப் பொருந்தாது என்று சொல்லத் தோன்றுகிறது.

சொல்ல வைப்பது.....

கீழ்க்காணும் நாளிதழ்ச் செய்திகள்[நகல் பதிவு].

மேற்கண்டவாறு, எக்காலத்தும் நிலைகொண்டிருப்பதான[கீதையில் சொல்லப்பட்டது போல்] சோம்நாத் கோயில்[சூரியனையும் சந்திரனையும் போல் அழியாதிருப்பது] முழுமுதல் கடவுளான சிவபெருமானால் கட்டப்பட்டது என்பதால்[புராணங்கள் சொல்லியிருக்கின்றன] எக்காலத்தும் அழியாது என்று அருளுரை வழங்கியிருக்கிறார் ‘அவதாரம்’ மோடி.

சாமானிய அறிவிலி மாந்தர்களில் அடியேனும் ஒருவன் என்ற வகையில், மோடிப் பெருமகனாரிடம், அவரின் திருத்தாள் பணிந்து முன்வைக்கும் வேண்டுகோள்.....

“அருட்பெருந்திரு பிரதமர் அவர்களே, ஒட்டுமொத்தப் பிரபஞ்சம் எப்படியோ,  நீங்கள் சொல்லும் பொய்களைப் பல்லுயிர் வாழும் இந்தப் பூமி தாங்காது; இது துகள் துகளாய் வெடித்துச் சிதறுவது 100% உறுதி என்பதால் இனியும் இம்மாதிரியான பொய்மொழிகளை மக்களிடையே பரப்பாதிருப்பீர் ஐயனே!”

புதன், 14 ஜனவரி, 2026

உடலுறுப்பை முடமாக்குவது தண்டனைக்குரிய குற்றம். ஆறறிவை முடமாக்குவது?

ஒருவன் மீது மற்றொருவன் தாக்குதல் நடத்தி, அவனின் உடலுறுப்பை முடமாக்குவது குற்றம். குற்றத்திற்கு அரசியல் சட்டப்படி தண்டனை வழங்குவது நடைமுறையில் உள்ளது.

இதற்கு எடுத்துக்காட்டு எதுவும் தேவையில்லை.

உடலுறுப்பைச் சிதைப்பது போலவே, மூடநம்பிக்கைகளைத் திணித்துச் சிந்திக்கப் பயன்படும் அறிவைச்  செயலற்றதாக்கும் அட்டூழியமும் இவ்வுலகில்  காலங்காலமாக நடைபெறுகிறது.

இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் தரலாம்.

இப்போதைக்கு ஓர் அண்மை நிகழ்வு மட்டும்[காணொலி காண்க].


உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் மார்ச் 3, 2026 தேதியன்று மூடப்படுகிறது.

இது எத்தனைப் பெரிய அயோக்கியத்தனம் என்பது கொஞ்சம் சிந்தித்தாலே புரியும்.

ஏழுமலையான் என்னும் கடவுளைக் கற்பித்து, வழிபட்டால் கோரிக்கைகள் நிறைவேறும் என்று பொய்யான பரப்புரைகள் செய்து, அவரைக் கோடீஸ்வரக் கடவுள் ஆக்கிய சூழ்ச்சிக்காரர்களிடம் நாம் கேட்பது.....

அண்டசராசரத்தையும் அதிலுள்ள அத்தனைக் கோள்களையும் நட்சத்திரங்களையும் படைத்து இயக்குபவர் கடவுள்[இப்போதைக்கு ஏழுமலையானாகவே இருக்கட்டும்].

அவற்றுள் சந்திரனும் ஒன்று[சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது, சூரியனின் ஒளி சந்திரனை அடையாமல் பூமி தடுப்பதால், பூமியின் நிழல் சந்திரனின் மீது விழுந்து, சந்திரனை இருட்டடிப்பு செய்யும் ஒரு வானியல் நிகழ்வாகும்.மேலும், பூமியின் வளிமண்டலத்தால் சிவப்பு நிற ஒளிக்கதிர்கள் சந்திரனை அடைவதால் சந்திரன் சிவப்பாகத் தோன்றும்].

இது நிகழ்வதும்[சந்திர கிரகணம்] ஏழுமலையானின் ஆணைப்படிதான்.

சந்திரனைப் படைத்தவனும் அவனே. சந்திர கிரகணம் நிகழக் காரணமானவனும் அவனே.

அந்த அவனை, கிரகணம் நிகழும் பௌர்ணமி நாளில் பக்தர்கள் தரிசிக்கக் கூடாது என்று கோயிலை[திருப்பதி] இழுத்து மூடுவது முட்டாள்தனத்தின் உச்சம் அல்லவா? பக்தன் பாதிக்கப்படுவதை அல்லது, தண்டிக்கப்படுவதை ஏழுமலையான் வேடிக்கை பார்ப்பாரா?

இம்மாதிரியான நடைமுறைகளை உருவாக்கி, அவற்றை மக்கள் மீது திணித்தவர்கள்/திணிப்பவர்கள் கடும் தண்டனைக்கு உரியவர்கள்.

திணிப்பவர்கள் மட்டுமல்ல, திணிப்புக்குப் பக்கப் பலமாக இருப்பவர்களும் தண்டனைக்குரியவர்கள்தான்.

தண்டனை வழங்கும் அதிகாரம் படைத்தவர்கள் மக்கள். அவர்களில் மிகப் பெரும்பாலோர் மூடர்களாக இருப்பதையே விரும்புபவர்கள். எனவே, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது இப்போதைக்கு இல்லை.

போதிய ஆதரவாளர்களுடன், ஒரு பகுத்தறிவாளன் சர்வாதிகாரி ஆகி இந்த நாட்டை ஆண்டால் மட்டுமே அது சாத்தியம் ஆகும்.

செவ்வாய், 13 ஜனவரி, 2026

அணுவும் அணுக்களும் கடவுளும்... ஒரு சிறு குறு ஆய்வு!

//பொருள்கள் உருவாகக் காரணமாக இருப்பவை அணுக்கள். பொருள்கள் அழிந்தாலும்,  மீண்டும் மீண்டும் இணைந்து வேறு வேறு வடிவங்களாக[பொருள்களாக> உயிர்களாக] அணுக்கள் மாறுகின்றனவே தவிர அழிவதில்லை. மேலும், அவை சுழற்சியில்[அண்டவெளியில்> பிரபஞ்சத்தில்] இருந்துகொண்டே இருக்கின்றன//

இதன் மூலம், அணுக்கள் இணைவதையும்[இரண்டறக் கலந்து?] பிரிவதையும் வழக்கமாக்கிகொண்டிருப்பவை என்பதை அறிய இயலுகிறது.

இங்கே ‘அணுக்கள்’ என்பது அணுக் கூட்டத்தைக் குறிக்கிறது. அதாவது, கூட்டமாக இயங்குகிற அணுக்களில் எதுவும் அழிவதில்லை என்பதும் உறுதியாகிறது.

கூட்டமாக இயங்கும்போது எந்தவொரு அணுவும் அழிவதில்லை என்றால்.....

ஓர் அணு தனித்திருக்கும்போதும் அழியாமல் இருக்குமா? 

இணையத் தேடலில் கிடைத்த விடை:

  • அறிவியல் ஆராய்ச்சிகளின்படி, அது அழிவதில்லை.

  • Scanning Tunneling Microscope (STM) மற்றும் Atomic Force Microscope (AFM) போன்ற கருவிகள் மூலம் தனி அணுக்களைப் பிடித்து நகர்த்த முடியும், இது அணுக்கள் தனித்து இயங்க முடியும் என்பதைக் காட்டுகிறது; அது ஒரு ஆதரவுப் பொருளுடன் இணைந்து ஒரு அமைப்பாகச் செயல்படுகிறது. வாயு நிலையில்(Gaseous state): அணுக்கள் வாயு நிலையில் தனித்திருக்கலாம், ஆனால் திடப்பொருட்களில் அவை பெரும்பாலும் கூட்டாகவே இருக்கும். 

  • சுருக்கமாக, அறிவியல் நுட்பங்களைப் பயன்படுத்தி ஓர் அணுவைத் தனிமைப்படுத்தி இயக்க முடியும்[விரிவான தகவல்கள் இங்கு இடம்பெறவில்லை]. ஆனால் இயற்கையில், அணுக்கள் பெரும்பாலும் கூட்டாகவே இயங்குகின்றன.

ஐயம்:

அணு தனித்து இயங்கட்டும், கூட்டணி[அணுக் கூட்டம்] சேர்ந்தும் இயங்கட்டும், சுற்றிவளைத்து இங்கே முன்வைக்கப்படும் கேள்வி.....

அண்டவெளியிலுள்ள கணக்கிலடங்காத அணுக்களுக்கு அழிவே இல்லை என்றால், இவற்றை[என்றென்றும் இருந்துகொண்டே இருப்பவை]ப் படைப்பதற்கு எவரும் தேவையில்லை என்பதை அறிய இயலுகிறது. அப்புறம் ஏன் இந்தக் கூரு கெட்ட மனிதர்கள் கடவுளென்று ஒருவரைக் கற்பனை செய்து அவருக்குக் கோயில்கள் கட்டி, வழிபாடுகள் நிகழ்த்திக் கூத்தடிக்கிறார்கள்?                                                         *   *   *  *  * 
*****அணு அழிவின்மை விதி(Law of Conservation of Mass): பொருள்கள் உருவாவதற்கு மூல காரணமாக இருக்கும் அணுக்கள், ஒருபோதும் உருவாக்கப்படுவதோ அழிக்கப்படுவதோ இல்லை; மாற்றப்படுகின்றன.

உடல் சிதைவு: நம் உடல் அணுக்களால் ஆன மூலக்கூறுகளால் ஆனது; நாம் இறந்த பிறகு, இந்த மூலக்கூறுகள் சிதைந்து, அணுக்கள் மீண்டும் மண்ணில் கலந்து, தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்களின் பகுதிகளாக மாறுகின்றன.

புதிய வடிவங்கள்: ஒரு கட்டிடம் இடிந்து போனாலும் அல்லது ஒரு பொருள் எரிந்து போனாலும், அதிலுள்ள அணுக்கள் அழிவதில்லை; அவை காற்று, சாம்பல் மற்றும் பிற பொருட்களின் பகுதிகளாக மாறுகின்றன. 

திங்கள், 12 ஜனவரி, 2026

மோடியே சிவபெருமான்! சிவபெருமானே மோடி!!

முன் குறிப்பு:

மோடி பற்றிய விமர்சனங்களை இயன்ற அளவுக்குத் தவிர்ப்பதே என் விருப்பம். எனினும், இவருடைய குறிப்பிடத்தக்க சில நடவடிக்கைகள் அவ்வப்போது எழுதத் தூண்டுகின்றன என்பது விரும்பத்தகாதது.

                                   *   *   *   *   *

//குஜராத்தில் உள்ள சோம்நாத் ஆலயத்தில் நடைபெற்றுவரும் சோம்நாத் சுவாபிமான் பர்வ் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். ஜனவரி 8 முதல் 11 வரை நடைபெறும் இந்த ஆன்மிக & பண்பாட்டு நிகழ்வின் ஒரு பகுதியாக, சோம்நாத் ஆலயத்தில் 72 மணி நேரம் தொடர்ந்து நடைபெறும் ‘ஓம்’ ஜபத்தில் பிரதமர் கலந்துகொண்டார்//* என்பது செய்தி.

ஒரு நாட்டின் பிரதமருடைய அன்றாட வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதைக் கொஞ்சம் கற்பனை செய்யுங்கள்.

நிலுவையில் உள்ள மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து கண்டறிவது[சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் & அலுவலர்களுடன்], அண்ட நாடுகளுடனான மோதல்களைச் சமாளிப்பதற்கும் உறவை மேம்படுத்துவதற்குமான நடவடிக்கைகள் பற்றிப் பரிசீலிப்பது, நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்கள் பல தீட்டுவது என்றிப்படி ஏராளமான பொறுப்புகளைச் சுமந்துகொண்டிருப்பவர் அவர்.

போதுமான அளவுக்கு ஓய்வெடுப்பதற்கும், போதிய அளவுக்கு உறங்குவதற்கும்கூட நேரம் இல்லாமல் உழைப்பவர் அவர்.

மோடி நம் நாட்டுப் பிரதமர். இவர் எப்படி?

இதுவரையினான தன் பதவிக் காலத்தில், அதிக அளவிலான நாட்கள் உலகம் சுற்றுவதில்[பிற நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதற்கு அயல்நாட்டுப் பயணம் மேற்கொள்வது தேவைதான். அதற்கு ஓர் எல்லையுண்டு]செலவழித்திருக்கிறார். எஞ்சிய நேரத்தில் பெரும்பகுதியைக் கோயில் கட்டுவதற்கும், கோயில்களுக்குச் செல்வதிலும் கழித்தார்; கழிக்கிறார். மிச்சமிருக்கும் கொஞ்சமே கொஞ்சம் நேரத்தைத்தான் பிரதமருக்கான அலுவல் நிமித்தம் செலவழித்தார்; செலவழிக்கிறார்.

அண்மையில் சோம்நாத் கோயிலுக்குச் சென்று, பக்தியின் மீதான தன் ஈடுபாட்டைப் படம் எடுத்துவெளியிட்டு, அந்தக் கொஞ்சம் நேரத்திலும் பெரும் பகுதியை வீணடித்திருக்கிறார்.

பக்தி வளர்ப்பதற்கென்றே[+பணம் சம்பாதிப்பதும் சொகுசாக வாழ்வதும்] இந்த நாட்டில் பல சாமியார்கள் இருக்கும்போது இவருக்கு எதற்கு அவ்வப்போது சாமியார் வேடமும் நாடகமும்?

இவருடைய இம்மாதிரியான நடவடிக்கைகளைக் கண்டுகொள்ளாமலும், குறைந்தபட்சம் கொஞ்சம் கண்டனங்கள்கூடத் தெரிவிக்காமலும், நம் மக்கள் ‘தேமே’ன்னு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது நம்மைப் பெரு வியப்பில் ஆழ்த்துகிறது!

* * * * *

எத்தனை எத்தனை இன்பங்கள்! அத்தனையும் அனுபவிக்க ஆயுள் இல்லை!!

பிழை திருத்தம்: ‘உண்டு மகிழ்ச்சி’... பிழை. ‘உண்டு மகிழ[ச்]’... சரி.

ஞாயிறு, 11 ஜனவரி, 2026

அதிகாரப் போதையில் மிதக்கும் அவதாரி மோடி!!!

னிதர்கள் சைவ உணவு உண்பதும் அசைவம் சேர்த்துக்கொள்வதும், அவரவர் மனப்பக்குவத்தையும் வாழும் சூழலையும் உணவுப் பண்டங்களைப் பெறுவதற்கான வாய்ப்பையும் பொருத்தது.

எனவே, எந்தவொரு இடத்திலும், எந்த ஒருவரையும் சைவ உணவுதான் உண்ண வேண்டும், அசைவம் கூடாது என்று கட்டுப்படுத்துவதோ கட்டளையிடுவதோ கூடாது. அப்படிச் செய்வது அதிகாரப் போதையில் செய்யும் அடாவடித்தனம் ஆகும்.

அயோத்தியைச் சுற்றி 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு அசைவ உணவு பயன்படுத்தக்கூடாது என்னும் மோடி[அயோத்தி மாவட்ட நிர்வாகம்] அரசு பிறப்பித்துள்ள உத்தரவு* அத்தகையதுதான்.

கோயிலைச் சுற்றிக் குறைந்த அளவிலான தூரத்தை[100 மீட்டர், 150 மீட்டர் என்றிப்படி] நிர்ணயித்தல் போதுமானது.

100 மீட்டர், 150 மீட்டர் தொலைவுக்குள் அசைவம் பயன்படுத்தினால், அதன் கெட்ட வாசம் கோயிலுக்குள் குடியிருக்கும் ராமனின் மூக்கைத் துளைக்குமா?

”ஆம்” என்கிறார் ராமச்சந்திர மூர்த்தியால் ஆசீர்வதித்து அனுப்பப்பட்ட மோடி. கோயிலின் புனிதமும் கெட்டுவிடுமாம்.

கடவுள் என்று சொல்லப்படுபவர் படைத்த அத்தனை இடங்களுமே புனிதமானவைதான். இந்தியாவில் எங்குமே அசைவம் உண்ணக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கலாமே? செய்வாரா செயற்கரிய செயல்கள் செய்யும் மோடி?

15 கிலோ மீட்டர் என்றால் எத்தனை வேகமான காற்று வீசினாலும் இறைச்சியின் கெட்ட வாசனை ராமனைச் சென்றடையாதா?

“அடையாது” என்கிறார் மோடி.

அதிகார மமதையில் இவர் மக்களுக்கு எதிராகச் செய்யும் மாபாதகங்களில் இதுவும் ஒன்று.

முட்டாள் பக்தர்களின் ஆதரவைத் தக்க வைப்பதற்காக, இனியேனும் இம்மாதிரி ஆறறிவுக்கு ஒவ்வாத நடவடிக்கைகளில் ஈடுபடாமலிருப்பது மோடிக்கு நல்லதோ அல்லவோ, இந்த நாட்டிற்கு நன்மை தருவதாக அமையும்.

======================

*அயோத்தி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டது. இந்தக் கோவிலைப் பிரதமர் மோடி திறந்து  வைத்தார். இந்நிலையில், இந்த ராமர் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இறைச்சி மற்றும் அசைவ உணவு விற்பனை மற்றும் விநியோகத்திற்கு அயோத்தி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ”அயோத்தி ராமர் கோவிலைச் சுற்றி 15 கி.மீ., தொலைவில் உணவகங்கள் இந்தப் பகுதிக்குள் அசைவ உணவுகளைத் தயாரிக்கவோ அல்லது சேமித்து வைக்கவோ கூடாது. அதே போல, அசைவ உணவுகளை விநியோகம் செய்யவும் கூடாது. அயோத்தியின் புனிதத் தன்மையைப் பாதுகாக்கவும், பக்தர்களின் உணர்வுகளை மதிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என அயோத்தி மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. https://theekkathir.in/News/states/delhi/meat-should-not-be-sold-within-a-15-km-radius-around-the-ram-temple!#google_vignette - ஜனவரி 10, 2026


சனி, 10 ஜனவரி, 2026

"ஆண்களும் நாய்களும் ஒன்று”... நடிகை ஸ்பந்தனாவுக்கு ஆயிரம் கோடி வந்தனங்கள்!!!

 

மேற்கண்டது நாளிதழில் வெளியான செய்தி[நகல் பதிவு].

இதைவிடவும் வேறெவ்வகையிலும் ஆணினத்தை இழிவுபடுத்துதல் சாத்தியமே இல்ல.

இந்த நடிகைக்கு ஓர் ஆண்மகனாக நம் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.

இந்த அடாவடித்தனமான விமர்சனத்திற்காக இவர் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுப்பது நீதிப் ‘பெரும் பேரரசர்’ சுவாமிநாதன் போன்ற நீதிபதிகளின்(ஆண்கள்) கடமை என்றாலும், அவர்கள் தாங்களும் ஆண் வர்க்கத்தினரே என்பதை மனதில்கொண்டு, இவரைக் கைது செய்து விசாரித்து, இவருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்குவார்கள் என்று நம்புகிறோம்.

இவருக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து அறிந்துகொள்ளவும் பேரார்வத்துடன் காத்திருக்கிறோம்.

தண்டனை எதுவாயினும், பெண்ணின வரலாற்றிலேயே மிக மிகத் துணிச்சலான நடிகையாக அறியப்படும் இவரை மனதாரப் பாராட்டுகிறோம்.

நடிகை திவ்யா பந்தனாவுக்கு நம் ஆயிரம் கோடி வந்தனங்கள்! ஹி... ஹி... ஹி!!! 

பெண்களின் அடங்காத காமமும் ‘அது’ விசயத்தில் அப்பாவி ஆண்களும்!!!

//கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் தேதி இரவு தன் கணவன் ரமேஷூக்கு அதிகளவு தூக்க மாத்திரைகளைத் தண்ணீரில் கலந்து கொடுத்துள்ளார் சவுமியா. இதனால் அயர்ந்து தூங்கிய ரமேஷை, சவுமியா தனது கள்ளக்காதலன் திலீப்பையும் ரவுடி கும்பலையும் வரவழைத்து, கணவனின் கழுத்தைத் துணியால் சுற்றி மூச்சைத் திணறடித்துக் கொலை செய்தாள்.

மறுநாள் காலையில் தன் கணவன் மாரடைப்பால் இறந்துவிட்டதாக, அவள் அக்கம் பக்கத்தினர்களிடமும் உறவினர்களிடமும் கூறிக் கதறி அழுது நாடகமாடினாள். இறுதிச் சடங்கு முடிந்து சடலம் அடக்கம் செய்யப்பட்டது//

மேற்கண்டது ஊடகத்தில் வெளியான செய்தியின் ஒரு பகுதி.

இதன் பிறகு, வெளிநாட்டில் இருக்கும் ரமேஷின் தம்பி கோதாரிக்கு [அண்ணனின் இறுதிச் சடங்குக்கு வரமுடியாத நிலையில்] அவர் கேட்டுக்கொண்டதால் செல்போனில் இறுதிச் சடங்குப் புகைப்படங்கள் அனுப்பப்பட்டன. சடலத்தின் கழுத்தில் தென்பட்ட காயத்தைப் பார்த்துச் சந்தேகப்பட்டு, இங்கே இருக்கும் தன் மனைவிக்குக் கோதாரி தகவல் சொல்ல, அவர் காவல்துறையினரிடம் புகார் அளிக்க, அவர்கள் புலனாய்வு செய்ததில், நடந்த உண்மை வெளிப்பட்டு சவுமியா கள்ளக் காதலனுடன் கைது செய்யப்பட்டாள்[புகைப்படங்களை அனுப்பாமல் இருந்திருந்தால் தப்பித்திருப்பாள்].

இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நம் நாட்டில் இடம்பெறுவதால் இதை விவரிப்பது தேவையற்றது.

ஆனாலும்,

கள்ளப் புணர்ச்சிக்குத் தடையாக இருக்கும் கணவனைப் போட்டுத்தள்ளும் கொடூர மனைவிமார்களில், எத்தனைப்பேர் பிடிபட்டுத் தண்டிக்கப்படுகிறார்கள் என்னும் கேள்வி எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

அது மிக அரிதாக இருக்கவே வாய்ப்புள்ளது என்பதால், தண்டனையிலிருந்து தப்பித்து, காதலனுடன்(காமுகர்களுடன்) ஜாலிலோ ஜிம்கானா பாடிக்கொண்டு குஷியாக வாழும் காமுகிகள் கணக்குவழக்கில்லாமல் பெருகிவிட்டார்களோ என்று கேட்கத் தோன்றுகிறது.

“ஆம்” என்றால்.....

‘அது’விசயத்தில் பலவீனமான ஆண்களாக இருந்து, 'அப்பாவி'களாகவும் வாழ்பவர்களைப் பார்த்து, “ஐயோ பாவம் அவர்கள்” என்று அனுதாபப்படத் தோன்றுகிறது.

அனுதாபம் தீர்வுக்கு வழிவகுக்குமா என்ன?

முழுத் தகவலுக்கு:

https://www.dinakaran.com/news/wife-kills-husband-for-opposing-illicit-affair/

                                           ====================

பின்குறிப்பு:

பெண்களிலும் அப்பாவிகள் நிறையவே உள்ளனர்.

வெள்ளி, 9 ஜனவரி, 2026

'அதிமுக' அல்லாத, ஆளுங்கட்சியை ஆதரிக்காத உதிரிக் கட்சிகளுக்குக் கடும் எச்சரிக்கை!!!

இந்தியா பல்வேறு இனத்தவருக்கும் உரிமையானது என்றாலும், ஒவ்வொரு இந்திக்காரனும் இந்தியாவை இந்திக்காரனே ஆள வேண்டும்[குறிப்பாக, ‘பாஜக’ ஆட்சியில்] என்று நினைக்கிறான். 

இந்தியைப் பரப்புவதற்கு இந்திய மக்களின் வரிப்பணத்தில் மிகப் பெரும் தொகையை ஆளும் பாஜக செல்விடுவது, இந்திக்காரன்களின் ஆதரவைத் தக்கவைத்து, ஆட்சி[ஒன்றியம்]யில் நீடிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைக் கைப்பற்றினால், இந்தியை எதிர்க்கும் இனத்தவரை மிக எளிதாக அடக்கி முடக்கிவிட முடியும் என்பது ‘இரட்டைத் தலைமை’ போடும் கணக்கு.

ஆட்சியில் இருந்தபோதும், இல்லாத இன்றைய நிலையிலும் உரிய சன்மானம் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு உடந்தையாக இருந்து சேவகம் செய்பவர் ‘அதிமுக’ பழனிசாமி[எடப்பாடியார்> அவ்வப்போது அவர்களைப் புறக்கணிப்பது போல் பேசுவதும் நடந்துகொள்வதும் வெறும் பாசாங்கு].

எடப்பாடி ‘ருசி’ கண்ட அடிமை. இந்த அடிமையை ஆண்டவானாலும்[இருந்தால்] திருத்த இயலாது.

இந்தத் தந்திரக்கார நரியின் ஒத்துழைப்புடன், சங்கித் தலைவர்கள்[நம்பர் 1 & நம்பர் 2]  ‘தமிழ் ஆதரவாளர்’களாகத் தங்களைக் காட்டிக்கொள்வதெல்லாம் ‘வெளி வேடம்’ என்பது தமிழர்களுக்கு அத்துபடியாய்த் தெரியும் என்பதால்.....

சங்கிகளின் கட்சி[+கூட்டணி] இங்கு வேரூன்றுவதோ, ஆட்சியைக் கைப்பற்றுவதோ ஒருபோதும்  நடைபெறாது.

மீண்டும் முதல்வராகும் எடப்பாடியின் கனவும் பலிக்காது.

ஆகவேதான், ‘அதிமுக’வுடனும் ‘பாஜக’வுடனும் கூட்டணி அமைத்துப் பலன் பெறலாம் என்று கனவுகூடக் காண வேண்டாம் என்று அமமுக, தேமுதிக, பாமக[இரு அணிகள்] ஆகிய கட்சிகளின் தலைவர்களையும், வெற்றிக் கட்சித் தலைவர், ஓபிஎஸ், சீமான், சசி அம்மா ஆகியோரையும் வேண்டிக்கொள்கிறோம்.

பரிந்துரை> எச்சரிக்கையும்கூட:

பெருமதிப்பிற்குரியீர், வடக்கன்களுக்கு அடிமை ஆகாமல், தமிழருக்காகக் கட்சி நடத்துங்கள்.

நடத்தினால்.....

2026 தேர்தலில் அதிக அளவில் வெற்றி வாய்ப்பைப் பெறாவிட்டாலும், மக்களிடம் இப்போது உள்ள ஆதரவையேனும் தக்கவைக்கலாம்.

ஆகவே, எப்போதும் தமிழர்களாகவே இருங்கள்; தமிழர்களுக்காகவே கட்சி நடத்துங்கள்; அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கத்துடனேயே தேர்தலில் போட்டியிடுங்கள்.

எதிர்பார்க்கும் பலன் கிட்டுகிறதோ அல்லவோ, தமிழினம் உங்களை வாழ்த்தும்; நன்றி செலுத்தும்; என்றென்றும் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கும்.

வியாழன், 8 ஜனவரி, 2026

கேளுங்கள் கிடைக்காது[அறுவைத் தத்துவம்]!

பிறப்பெடுத்ததன் விளைவாகப் பிற உயிர்களை வதைத்துச் சிதைத்து உணவாக்கி உயிர் வாழ்கிறோம்.

ஆசைப்பட்டபடியெல்லாம் வாழ்ந்து முடிப்பதற்குள், வகை வகையான கண்ணுக்குத் தெரிந்த, தெரியாத பிற உயிரினங்களின் தாக்குதலுக்கு உள்ளாகி, அவற்றிற்கு உணவும் ஆகி அழிந்துபோகிறோம்.

பிறப்புக்கும் இறப்புக்குமான இடைப்பட்ட காலத்தில் ஆணும் பெண்ணுமாய்ச்  சதையோடு சதை தேய்த்து, உறுப்பினுள் உறுப்பு சேர்த்துப் புணர்ந்து சந்ததிகளை உருவாக்குகிறோம். இதன் காரணமாக நாம் எதிர்கொள்ளும் போராட்டங்களும் படும் துன்பங்களும் எண்ணிலடங்காதவை.

ஆழ்ந்து சிந்தித்தால்.....

மிக மிக மிக இழிந்ததொரு உயிரினமாக நாம் இருந்துகொண்டிருப்பது புரியும்.

கடவுள் எனப்படுபவர் கருணை வடிவானவர் என்று பரப்புரை செய்பவர்களிடமும், அதை நம்பி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் நிகழ்த்தி வழிபடுகிறவர்களிடமும் நாம் முன்வைக்கும் கேள்வி.....

மேற்குறிப்பிட்டவாறும், அற்ப ஆயுளுடனும், காலமெல்லாம் அளவிறந்த துயரங்களைச் சுமந்து அலைந்து திரிந்து சோர்ந்து மடியும் வகையிலும் நம்மைப் படைத்த ஒரு நபரையா கருணை வடிவானவன் என்கிறீர்கள்? வேண்டாம். இனியேனும் அவரைப் புறக்கணியுங்கள். மதவாதிகள் திணித்த பொய்க் கதைகளையும் ஒதுக்குங்கள்.

கணக்கில் அடங்காத வகை வகையான பொருள்களையும் உயிர்களையும் உள்ளடக்கிய பிரபஞ்சம் எப்போதும் இருந்துகொண்டே இருப்பதா, படைக்கப்பட்டதா? நேர்ந்தது எதுவாயினும் அது சாத்தியமானது எப்படி? உயிர்களின் தோற்றம் ஏன்? அவற்றிடையேயான போராட்டங்கள் ஏன்?  என்றெல்லாம் கேளுங்கள்; கேட்போம்.

விடை கிடைக்கிறதோ அல்லவோ கேட்டுக்கொண்டே இருப்போம். நம் சந்ததிகளும் கேட்கட்டும். இதனால், சிந்திக்கும் திறன் அதிகரிக்கும்.