திங்கள், 3 மார்ச், 2025

ஜெய் ஜோதிர்லிங்கம்! அடுத்த நம் பிரதமரும் மோடிஜியே!!

கீழே, நம் பிரதமர் மோடிஜி அவர்கள் சோம்நாத்[குஜராத்] கோயிலில் உள்ள ஜோதிர்லிங்கத்திற்குப் பூஜை, சிறப்பு அபிஷேகம்[வேறு எவரையும் அண்டவிடாமல் தானே தனியராய்ச் செய்வது?] எல்லாம் செய்து வழிபட்ட காட்சி[காணொலி] இடம்பெற்றுள்ளது.

பல்வேறு மதத்தவரும், மதச் சார்பு இல்லாதவர்களும், நாத்திகர்களும், கடவுள் சிந்தனையே இல்லாத அனாதைகளும் இரண்டறக் கலந்து வாழும் இந்த மதச்சார்பற்ற[என்று சொல்கிறார்கள்] நாட்டில், வழிபாட்டைப் பிறர் அறியாமலும், யூடியூப் காணொலியாகப் பதிவு செய்து வெளியிடாமலும் இவர் நிகழ்த்தியிருக்கலாமே என்று கேட்கத் தோன்றியதே தவிர கேட்பது சாத்தியப்படவில்லை.

காரணம்.....

100% மனம் ஒன்றிய நிலையில்[அருகில் அணுகுண்டு வெடித்திருந்தாலும் அவர் கவனம் சிதறியிருக்காது] ஜோதிர்லிங்கத்திற்கு மலர்கள் தூவி,  வாசனைத் திரவியங்கள் சொரிந்து, நெய்யும் பாலும் பெய்து மோடிஜி அதை வழிபட்டார் என்பதே.

முன்பு எப்போதும் இல்லாத வகையில் பக்திச் சிரத்தையுடன், வேதமந்திரங்கள் ஒலிக்க  இவர் செய்த பூஜை ஏறத்தாழ ஒரு நாத்திகனான அடியேனின் முழு நெஞ்சையும் நெகிழ்வித்தது.

இந்த நாட்டில் மிகப் பெரும்பான்மையாக உள்ள அத்தனை இந்துக் குடிமக்களும் மோடிஜியின் வழிபாட்டை, விழிகளில் ஆனந்தக் கண்ணீர் வழியக் கண்டு கண்டு மெய் சிலிர்த்திருப்பார்கள் என்பதில் சந்தேகத்திற்கு இடமே இல்லை.

இதன் பயனாக, இந்தப் புண்ணியப் பூமியில் அடுத்து நடைபெறும் தேர்தலிலும் நம் மோடிஜியே வெற்றி பெற்றுப் பிரதமராகி நல்லாட்சி நடத்துவார் என்பது உறுதி.

ஜெய் பாரதம்! ஜெய் ஜெய் மோடிஜி!!

                                       *   *   *   *   *
உள்மன உறுத்தல்!
அனைத்து உலகங்களையும் அதில் வாழ்கிற அனைத்து உயிர்களையும் அரவணைத்துப் பாதுகாக்கிற ஜோதிர்லிங்கத்தை வழிபடும் கடவுளின் வாரிசான[கடவுளின் குழந்தை] மோடிக்கு, கோட்டும் சூட்டும் அணிந்தவர்களின் பாதுகாப்புத் தேவையா?

ஞாயிறு, 2 மார்ச், 2025

சிந்திப்பாரா ‘பிறவி இந்து’ சிவக்குமார்[கர்னாடகா து.முதல்வர்]?!?!?

#புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பின்போது சிவகுமாரிடம்[கர்னாடகா துணை முதல்வர்], அவரது கோவை வருகை[ஈஷா நவராத்திரிக் கூத்து]  குறித்துச் செய்தியாளர்கள் கேட்டபோது, ​​ "..... நான் ஒரு இந்து. நான் பிறந்தது இந்துவாக. நான் ஒரு இந்துவாகவே இறப்பேன் என்று அவர் கூறினார்# [https://english.varthabharati.in/karnataka/i-am-born-hindu-and-will-die-hindu-karnataka-dcm-shivakumar].

அன்புக்குரிய கன்னடச் சகோதரர் சிவக்குமார் அவர்களே,

உங்களுடைய இந்துமதப் பற்றைப் பாராட்டுகிறோம்.

ஆனால், நீங்கள் பிறந்தபோதோ, வளர்ந்து சிந்திக்கும் பருவத்தை எட்டும்வரையோ நீங்கள் ஒரு மனிதப் பிறவி என்பதேகூட உங்களுக்குத் தெரியாது என்று நாம் சொன்னால் அதை மறுக்கமாட்டீர்கள் என்று நம்புகிறோம்.

அறிவு வளரும் வயதில் நீங்கள் ஒரு இந்துக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதையே உங்களின் பெற்றோர் சொல்லித்தான் அறிந்துகொண்டிருப்பீர்கள். அவர்கள் சொன்னதை வைத்துத்தான் “நான் பிறந்தது இந்துவாக” என்று சொல்லியிருக்கிறீர்கள். இது ஒரு பொருட்டல்ல.

“நான் இந்துவாகவே இறப்பேன்” என்று உறுதி மொழிந்திருக்கிறீர்களே, இங்கேதான் தவறிழைத்திருக்கிறீர்கள்.

இறப்பு என்பது மூளை உட்பட உடல் உறுப்புகள் முற்றிலுமாய்ச் செயலிழக்கும்போது நிகழ்வது. அதாவது, அந்த நேரத்தில் முழுமையாகச் சுயநினைவை இழக்கிறோம்.

இறப்பது மனிதனாகவாக, மிருகமாகவா வேறு எதுவாகவும் ஆகவா என்பது பற்றியெல்லாம் சாகும்போது அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. இருந்துகொண்டிருந்தவர் ‘இல்லாமல்’ ஆகிறார் என்பதே உண்மை.

அறிவு, உணர்ச்சி, குணம் என்று பெற்றிருந்த அனைத்தையும் இழந்து நாம் ‘வெறுமை’யில் கலக்கும் நிலையில் மதம் இல்லை; ஒரு மண்ணும் இல்லை.

இவ்வாறெல்லாம் சிந்தித்திருந்தால்.....

“அவர்[சத்துக்குரு] எனக்குத் தெரிந்தவர்; நேரில் வந்து அழைத்தார். போனேன். சொல்வதற்கு வேறு எதுவுமில்லை” என்று சொல்லிப் பேட்டியை முடித்துக்கொண்டிருப்பீர்கள்.

மாறாக, அந்த வேடதாரியை வெகுவாகப் புகழ்ந்திருப்பது உங்கள் மீதான மதிப்பை மிகவும் குறைத்திருக்கிறது.

கடவுளுக்குக் குரு[சத்குரு: சத்> பரம்பொருள்> கடவுள்; சத்குரு> கடவுளுக்குக் குரு] என்று புளுகி[உலகின் நம்பர் 1 புளுகன்] உலகின் ஒட்டுமொத்த மக்களையும் முட்டாள்களாக்கி, கோடி கோடியாய்ப் பணம் கொள்ளையடித்துச்[+ஏராள குற்றச்சாட்டுகள்] சொகுசாக வாழும் ஓர் அயோக்கியனுடனான உங்களின் தொடர்பு நீடித்தால், விளைவு என்னவாக இருக்கும் என்பதைச் சிந்தித்து அறியும் அறிவு உங்களுக்கு உண்டு என்று நம்புகிறோம்.

கர்னாடகச் சகோதரர்களுக்கான உங்களின் தொண்டு தொடர்வதாக.

சனி, 1 மார்ச், 2025

பெண்ணைத் ‘திருப்தி’படுத்தலும் அடிமை ஆக்குதலும்!!![வாழ்வியல் கதை]

பிறந்த கிராமத்திலேயே பள்ளிப் படிப்புப் படித்து, வெவ்வேறு நகரங்களில் மேற்படிப்பை முடித்து, அவன் சென்னையிலும் நான்[‘நான்’ அடியேன் அல்ல; தன்னை முன்னிலைப்படுத்திக் கதை சொல்வது ஒருவகை உத்தி] கோவையிலும் வேலை பார்க்கிறோம்.

அவன்? ஆறுமுகம்.

இப்போதெல்லாம் நாங்கள் சந்திப்பது எப்போதாவதுதான்.

கிராமத்தில் ஒரு வாரம்போல நடைபெறும் மாரியம்மன் பண்டிகை அன்று எங்களைச் சந்திக்க வைத்தது.

சிறிது நேரப் பொத்தாம்பொதுவான கலந்துரையாடலுக்குப் பிறகு, “ரெண்டுபேருக்கும் ஒரே வயசு. நான் ரெண்டு குழந்தைகளுக்குத் தகப்பன். நீ இன்னும் கட்டைப் பிரமச்சாரி. ஏண்டா கல்யாணம் பண்ணிக்கலேன்னு கேட்டா ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லுவே. இன்னிக்கி உண்மையைச் சொல்லுடா” என்றேன் ஆறுமுகத்திடம்.

“இதுவரைக்கும் தரகர் மூலமா நிறையப் பொண்ணுகளைப் பார்த்துட்டேன். ஒடுக்கு விழுந்த கன்னமும், துறுத்திய பல்லும், பருத்த உதடுமா கரிக்கட்டை நிறத்தில் இருக்கிற என்னைப் அதுகளுக்குப் பிடிக்கல. போன வாரம் பார்த்த ஒரு பொண்ணு மட்டும் என்னைக் கட்டிக்கச் சம்மதிக்கிறதா தரகர் சொன்னார்” என்றான் உணர்ச்சியற்ற குரலில்.

“அப்புறம் என்ன, அவளையே கட்டிக்கலாமே?”
“அவர் சொன்னதில் எனக்கு நம்பிக்கை இல்ல. அவளைத் தனியே சந்திச்சி என்னைப் பிடிச்சிருக்கான்னு கேட்க நினைச்சேன். அவளைப் பெத்தவங்க சம்மதிக்கல. தரகர் என்னைத் தனியே அழைச்சிட்டுப் போய், ‘ஆணுக்குப் பெருசா அழகெல்லாம் தேவையில்லை. பலான விசயத்தில் பெண்டாட்டியைத் திருப்திப்படுத்திட்டா அவள் புருசனுக்கு அடிமை ஆயிடுவா’ என்று கண் சிமிட்டினார்…..”
பேச்சை நிறுத்தினான் ஆறுமுகம். அவன் சொன்ன பதிலை அறிய ஆவலுடன் காத்திருந்தேன்.

எதுவும் சொல்லாமல், “நீ என்ன நினைக்கிறே?” என்றான்.

“அவர் சொல்வதிலும் உண்மை இருக்குதானே?” என்றேன் நான் பட்டும் படாமலும்.
"மற்ற ஆண்கள் விசயத்தில் உண்மையாக இருக்கலாம். முன் அனுபவம் இல்லாததால், ‘அது’ விசயத்தில் நான் மேம்பட்டவனா, சராசரியா, அதுக்கும் கீழேயான்னு எனக்குத் தெரியாது. என்னைக் கட்டிக்கப்போறவ அது விசயத்தில் எப்படிப்பட்டவளா இருப்பாள்னும் எனக்குத் தெரியாது. இப்படி எதுவும் தெரியாம, ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிட்டு எதிர்பார்ப்பது எதுவும் நடக்கனேன்னா வாழ்க்கை நரகம் ஆயிடும். அதனால, ‘நான் பிரமச்சாரியாவே இருந்துடப்போறேன்னு அவர்கிட்டே திட்டவட்டமாச் சொல்லிட்டேன்" என்றான்.

“கல்யாணம் செய்துக்காம வாழுறது அத்தனைச் சுலபம் இல்லையே?” என்றேன்.

“மனுசனுக்கு ஆறிவு வளர்ச்சி இல்லாம இருந்தபோது, உடலுறவுச் சுகம் மட்டுமே அவனுக்குப் பிரதானமா இருந்தது. அறிவு வளர வளர, இயற்கை அழகை ரசிக்கிறது, நாட்டு நடப்பைப் பற்றிச் சிந்திக்கிறது, எழுதுறது, நல்ல எழுத்துகளைத் தேடித் தேடிப் படிக்கிறது, ஓவியம் வரையறது, கவிதைகள் எழுதுறது, மேடையில் பேசுவது, ஆடுவது பாடுவதுன்னு இயன்றவரை மகிழ்ச்சியோடு பொழுதைக் கழிக்கப் பல வழிகளைக் கண்டுபிடிச்சிட்டான் மனுசன். வாழ்ந்து முடிக்கிறதுக்குக் குடும்ப வாழ்க்கை அவசியத் தேவைங்கிற காலம் மாறிப்போச்சு. அதனால, நான் ஒருத்தன் பிரமச்சாரியாகவே காலம் கழிச்சுடுறது பெரிய விசயம் அல்ல” என்றான் ஆறுமுகம்.

அவனுக்கு ஆறுதல் சொல்லும் வகையறியாமல், “உன் நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும்” என்று சொல்லி அழுத்தமாக அவன் தோள் வருடினேன்.
‘திருமணம் செய்யாமல் தனிமையில் காலம் கழிக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை நாளும் அதிகரிக்கிறது” என்ற, அண்மையில் படித்த இந்த ஊடகச் செய்தி நினைவுக்கு வந்தது.

செய்தி:

//According to recent data, a significant portion of the Indian population remains unmarried, with estimates suggesting that over 23% of young people are not interested in marriage, which translates to a large number of unmarried bachelors in India in 2024; however, the exact number is difficult to pinpoint due to variations in data sources and age brackets considered// -https://www.google.com/search?q=number+of+unmarried+bachelors+in+india+2024