புதன், 25 ஜூன், 2014

கடவுளுக்கு நன்றியுணர்ச்சி உண்டா? [பத்துக் கேள்விகளும் பதில்களும்]

கேள்வி1: உங்கள் நூறாவது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?
பதில்: கீழ்க்காணும் வாசகத்தைப் பத்திரிகைகளில் விளம்பரமாகக் கொடுப்பேன். வேறு கொண்டாட்டம் ஏதுமில்லை.
வாசகம்: ‘கடவுளே, நீர் இருப்பது உண்மையானால்..........இனவிருத்தி செய்யவும், இன்பதுன்பங்களை அனுபவிக்கவும் என்னைப் படைத்தீர். என்னைப் பொருத்தவரை நூறாண்டுகள் வாழ்ந்து உம்முடைய நோக்கத்தை நிறைவு செய்திருக்கிறேன். நீர் எனக்கு நன்றியுடையவர் ஆகிறீர். அந்த நன்றியை எவ்வாறு வெளிப்படுத்தப் போகிறீர் என்பதை நான் அறியச் சொல்வீரா? உணர்த்தவாவது செய்வீரா?’

கேள்வி 2: என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
பதில்: 150 ஆண்டுகள் வாழ்வதற்கான வழிவகைகளை!

கேள்வி 3: கடைசியாகச் சிரித்தது எப்போது?
பதில்: நான்கு நாட்கள் முன்பு, பேருந்து நிலையத்தில் ஒரு கிழட்டுப் பிச்சைக்காரன் கை நீட்டியபோது, சட்டைப்பையில் சில்லரை இருக்க, “சில்லரை இல்லப்பா” என்று சொன்னதை நினைக்கும்போதெல்லாம் என் அடிமனதிலிருந்து சிரிப்பொலி எழுகிறது. சிரிப்பது நானல்ல; என் மனசாட்சி!

கேள்வி 4: 24 மணி நேரம் ‘பவர்கட்’ ஆனால் நீங்கள் செய்வது என்னவாக இருக்கும்?
பதில்: பவர்கட்டா? நீங்கள் இந்த மண்ணுலகைச் சொல்கிறீர்கள். நான் உணவு உண்ட நேரமும் உறங்கிய நேரமும் போக, எந்நேரமும் வான வெளியில் சஞ்சரிப்பவன். அங்க ஏதுங்க பவர்கட்? கோடானுகோடி நட்சத்திரங்கள் ஜொலித்துக்கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியாதா என்ன?!

கேள்வி 5: உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?
பதில்: வேறு எதனையும்விட வலிமை வாய்ந்தது காம உணர்ச்சி. அதைக் கட்டுப்படுத்தி வாழப் பழகிவிட்டால் வாழ்க்கையில் நிறையவே சாதிக்கலாம்.

கேள்வி 6: உலகத்தில் உள்ள பிரச்சினையில், உங்களால் தீர்க்க முடியுமென்றால் எந்தப் பிரச்சினையைத் தீர்க்க விரும்புகிறீர்கள்?
பதில்: பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணங்களாய் இருப்பவை ‘வயிற்றுப்பசி’யும் ‘சதைப்பசி’யும்தான். இவற்றைத் தீர்ப்பதே என் விருப்பம்.


கேள்வி 7: நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

பதில்: என்னிடமேதான். என்மீது என்னைவிட அக்கறை கொண்டவர் வேறு எவர் இருக்க முடியும்?


கேள்வி 8: உங்களைப் பற்றித் தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?

பதில்: நான் மிக மிகச் சாதாரணன். என்னைப் பற்றித் தவறான தகவலைப் பரப்புவதால், பரப்புவருக்கு எந்தவிதப் பலனும் விளையாது. இதைப் பற்றிய கவலை எனக்கு எப்போதும் இருந்ததில்லை.


கேள்வி 9: உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

பதில்: ஆரத்தழுவி முதுகில் தட்டிக்கொடுப்பேன். ஆறுதல் வார்த்தைகளைவிடவும் இது அதிகப் பலன் தரும்.


கேள்வி 10: உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

பதில்: எதுவும் செய்யலாம். உற்ற நண்பனிடம்கூடக் கேட்கக் கூடாத கேள்வி இது.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

‘பத்துக் கேள்வி’களுக்குப் பதில் எழுதத் தூண்டிய நண்பர் ‘கில்லர்ஜி’ அவர்களுக்கும், ‘கேள்வி-பதிலை’த் தொடங்கி வைத்த மதுரைத் தமிழன் அவர்களுக்கும் என் நன்றி.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

35 கருத்துகள்:

  1. பதில்கள் சிந்திக்க வைக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெருந்தன்மையுடன் வருகைபுரிந்து பாராட்டியிருக்கிறீர்கள்.

      மிக்க நன்றி King Raj.

      நீக்கு
  2. பதில்கள் ஒவ்வொன்றும் இயல்பானதாகவும் ஏற்றுக்கொள்ளத் தக்க சிறப்பான
    பதில்களாகவும் இருந்தன அருமை ! வாழ்த்துக்கள் கிழவா :))

    பதிலளிநீக்கு
  3. பத்துக்குப் பத்தும்
    உங்கள்
    முத்தான பதில்கள்
    எங்கள்
    உள்ளத்தை உரசுதே!

    பதிலளிநீக்கு
  4. தங்களுடைய பதில்களைப் படித்தேன். அவை எதார்த்தமானவை; சுவை மிக்கவை.

    என் பதில்கள் தங்களின் பாராட்டுதலைப் பெற்றதில் மகிழ்ச்சி. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. நண்பரே! பதில்கள் அனைத்தும் அருமை அருமை அருமை!!!!!!!!!!!!! மிகவும் ரசித்தோம்! உண்மையான, யதார்த்தமான, ரசனையான பதில்கள்! அசத்திவிட்டன நண்பரே!

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. கலக்கல் பதில்கள்.அதிலும் 2 வது சுப்பர்.

    பதிலளிநீக்கு
  7. #என்னிடமேதான். என்மீது என்னைவிட அக்கறை கொண்டவர் வேறு எவர் இருக்க முடியும்?#
    இந்த பதில் நேர்மையானது ,மிகவும் ரசித்தேன் !
    த ம 4

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. தங்களை தூண்டி(ல்)விட்ட நானே தாமதமாக வருவதற்க்கும் மன்னிக்கவும் ஐயா... 2 வது பதில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது காரணம் யாருமே இப்படி சொன்னதில்லை ஆக, தங்களுக்கு 100 ஆண்டுகள் போதாது.. ? அதைப்போல 6 வது பதிலும் வித்தியாசமாக இருந்தது, 9 வது பதில் அனுபவத்தின் பதில் அருமை.
    எனது வார்த்தைக்கு மதிப்பளித்து பதிவிட்ட தங்களுக்கு நன்றி ஐயா
    எனது ''வீட்டில் வளர்த்த விட்டில் பூச்சிகள்'' படிக்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிப்பா? இனியும் இப்படிக் கூற வேண்டாம். தங்களால் பயனடைந்தவன் நான்தானே.

      ''வீட்டில் வளர்த்த விட்டில் பூச்சிகள்' தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது; படிக்கத் தூண்டுகிறது.

      மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  10. // என்மீது என்னைவிட அக்கறை கொண்டவர் வேறு எவர்...? // - பல பதில்கள் உங்கள் பாணியில் வித்தியாசம் + சுவாரஸ்யம்...

    பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  11. வலைப்பதிவில் பிரச்சினையென்றால் ஓடிப்போய் உதவுகிற தாங்கள், மனம் திறந்து பதிவர்களைப் பாராட்டவும் தயங்குவதில்லை.

    மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  12. சிறப்பாக பதில்களை தந்து இந்த தொடர் ஒட்டத்தில் பங்கு கொண்டதற்கு மிகவும் நன்றி & பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகை தந்து பாராட்டியதற்கு என் நெஞ்சார்ந்த நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  13. பளிச் பதிகள்.... நேர்மையான பதில்கள் போல தெரிகிறது... நேர்மையாகவே இருக்கட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 2, 4 ஆகிய கேள்விகளுக்கான பதில்கள் மிகைப்படுத்தப்பட்டவை ஆயினும், அதுவும் தேவையே என்று நான் நினைத்ததில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

      மனப்பூர்வ நன்றி பாண்டியன்.

      நீக்கு
  14. பதில்கள் எல்லாமே நன்று. அதிலும் 1, 3, 7 ஆகியவற்றை மிக ரசித்தேன். அசத்திட்டீங்க கா.கி.

    பதிலளிநீக்கு
  15. தங்கள் வருகையும் பாராட்டும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

    நன்றி...நன்றி பால கணேஷ்.

    பதிலளிநீக்கு
  16. " வேறு எதனையும்விட வலிமை வாய்ந்தது காம உணர்ச்சி. அதைக் கட்டுப்படுத்தி வாழப் பழகிவிட்டால் வாழ்க்கையில் நிறையவே சாதிக்கலாம் "

    மிகவும் உண்மை ஐயா ! " சீ இவ்வளவுதானா என புரிந்துகொள்ளும் " அளவுக்கு நமது சமூக சூழ்நிலை அமையாததே அத்தனை பாலியல் வக்கிரங்களுக்கும் காரணம்

    " பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணங்களாய் இருப்பவை ‘வயிற்றுப்பசி’யும் ‘சதைப்பசி’யும்தான். "

    பெரும்பாலான அல்ல ஐயா, ஆதிகாலம் தொட்டு இன்றுவரை எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமே இவையிரண்டுதான் !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்திட்ட யாருமே இந்தப் பதில்கள் குறித்து ஏதும் சொன்னதில்லை.

      உங்கள் துணிச்சல் என்னை மகிழ்வித்தது.

      மிக்க நன்றி சாமானியன்.

      நீக்கு
  17. ஐயா.... ஆறாவதுக்கான பதில் கொஞ்சம் அபத்தமாக இல்லை....

    இருப்பினும் பதில்கள் அனைத்தையும் இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னை வெகுவாகப் பாராட்டியே பழக்கப்பட்ட நீங்கள் முதன்முறையாக விமர்சித்திருக்கிறீர்கள். இந்த நடுநிலைதான் விமர்சகருக்கான முக்கிய தகுதி. மகிழ்ச்சி அருணா.

      இந்தப் பதிலும், கேள்வி 10க்கான பதிலும் ‘அசிங்கம்...ஆபாசம்’ என்று ஒரு நண்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். [ஏனோ அதைப் பின்னூட்டமாக வெளியிடவில்லை!]

      நண்பர்களுடன் நேரில் விவாதித்துமிருக்கிறேன். ஆனாலும், இந்த என் அபிப்ராயத்தில் மாற்றம் சிறிதும் ஏற்படவில்லை. என் வாழ்க்கை அனுபவங்களும், பொது அறிவும் காரணங்களோ என்னவோ? [நண்பர் சாமானியனின் கருத்தை ஒருமுறை படியுங்கள்]

      பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றி அருணா.

      நீக்கு
  18. ஐயா வணக்கம்.

    உங்களின் இன்றைய பதிவு என்னை வெகவாக பாதிக்கிறது.

    ஏன் என்ன காரணம்....? நீங்கள் சொல்லி இரக்கும் காரணங்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
    ஒரு கலைஞருக்கு விமர்சனங்கள் வரத்தானே செய்யும்....?
    அதற்கெல்லாம் கவலைப்படுவதா...?

    நான் ,ஆறாவது கேள்விக்கான பதிலைப்பற்றி சொல்லி இருப்பதை நீங்கள் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் அதில் நகைச்சுவை தான் ஒளிந்திருக்கும்.

    அசிங்கம் ஆபாசம் அபத்தங்களன் எங்கே இல்லை...?

    நம் பண்பாட்டு உடையான சேலையைக் கூட கவர்ச்சியாக (ஆபாசமாக) கட்டலாம்.
    பார்வையில் கோளாறு உள்ளவனுக்கு சேலை கட்டினாலும் உள்ளிருக்கும் உறுப்புகள் தான் அவன் கண்ணுக்குத் தெரியும் என்பதை அறியாதவரா நீங்கள்?

    நீங்கள் வேறு காரணத்திற்காகக் கூட இந்த முடிவை எடுத்திருக்கலாம். அதற்கான விளக்கத்தையும் நீங்கள் கொடுத்திருந்தாலும்....
    நீங்கள் தயவு செய்து உங்களின் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டுகிறேன். இல்லையென்றால் ஒரு நல்ல எழுத்தாளரின் கைகளுக்கு விலங்கிட்டு அவர் மனத்திற்கு வலி கொடுத்த வலியைச் சுமர்ந்து கொண்டே என் வாழ்நாளெல்லாம் வாழ வேண்டி இருக்கும். அந்த வலியை உங்களின் இந்தக் குழந்தைக்குக் கொடுக்காதீர்கள். தாங்க முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அருணா.

      ஒரு மாதத்திற்கு முன்பே “எனக்கொரு ‘வணக்கம்’ சொல்வீர்” என்னும் இப்பதிவை எழுதி முடித்து ’இருப்பில்’[Draft] வைத்திருந்தேன் என்று நான் சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

      இது உண்மை.

      ‘கடவுளுக்கு நன்றியுணர்ச்சி உண்டா?’ என்ற பதிவிற்கான உங்கள் கருத்துக்குப் பதில் சொன்ன சூட்டோடு, இந்த நன்றியறிவிப்புப் பதிவை நான் வெளியிட்டது பெரும் தவறாகிவிட்டது. சற்றே தாமதித்து வெளியிட்டிருக்கலாம். ‘எழுதுவது போரடிக்கிறது. ஓய்வுக்குப் பிறகு மீண்டும் எழுதுவேன்’ என்று யதார்த்தமாகச் சொல்லாமல் வார்த்தைகளை வைத்து விளையாடிவிட்டேன். இது நான் செய்த மிகப் பெரிய குற்றம்.

      அது, நான் எழுதுவதை நிறுத்துவதற்கு நீங்களே காரணம் என்பதான பழியைச் சுமக்கச் செய்ததோடு, அளவுகடந்து வருந்தவும் செய்துவிட்டது.

      என்னைச் சிறப்பித்துத் தனிப் பதிவே வெளியிட்ட உங்களின் பெருந்தன்மை அவ்வளவு எளிதில் மறக்கக் கூடியதா?

      எத்தனை கடுமையாக நீங்கள் விமர்சனம் செய்திருந்தாலும் மகிழவே செய்வேன். என் பதிலிலும் அந்த மகிழ்ச்சிதான் நிரம்பியிருக்கிறது.

      #இல்லையென்றால் ஒரு நல்ல எழுத்தாளரின் கைகளுக்கு விலங்கிட்டு அவர் மனத்திற்கு வலி கொடுத்த வலியைச் சுமர்ந்து கொண்டே என் வாழ்நாளெல்லாம் வாழ வேண்டி இருக்கும். அந்த வலியை உங்களின் இந்தக் குழந்தைக்குக் கொடுக்காதீர்கள். தாங்க முடியாது# என்ற உங்களின் வார்த்தைகள் என்னையும் கலங்கடிக்கிறது.

      ஆயினும், இப்போது என் முடிவை மாற்றினால்.........

      உங்களைப் போன்ற குழந்தை மனம் படைத்தவர்களைப் பயன்படுத்தி நான் விளம்பரம் தேடுகிறேன் என்றாகிவிடும்.

      எனவே, ஏற்கனவே எடுத்த முடிவின்படி ஒரு குறிப்பிட்ட காலம் வரை எழுதுவதைத் தவிர்க்கவே விரும்புகிறேன்.

      என்னுடைய இந்த முடிவிற்கு என் குடும்பச் சூழலும் ஒரு காரணம். அதிலிருந்து விடுபட்ட பின்னர் தொடர்ந்து எழுத முயல்வேன்.

      முகமறியாத என்பால் நீங்கள் கொண்டிருக்கும் பெருமதிப்பிற்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

      மனம் நெகிழ்ந்த நன்றி அருணா.


      நீக்கு
    2. நீங்கள் குறிப்பிட்ட கால வரையரை ஒரு சில நாட்களாக இருந்தால் நன்றாக இருக்கும்.

      நல்லது ஐயா. காத்திருக்கிறோம்.

      நன்றியுடன் வணங்குகிறேன்.

      நீக்கு
  19. தங்களுடைய கருத்துக்கள் எனக்கு ஒத்துப்போவதில்லை. ஆனால் தங்களுடைய கருத்துக்களில் நல்லது நடக்கவேண்டும் என்ற சிந்தனை இருப்பதை நான் உணர்கிறேன். வாழ்வில் எதுவும் நிச்சயமில்லை, நிரந்தரமுமில்லை. தற்காலிகமாக எழுதுவதை நிறுத்திவைக்கிறேன் என்று கூறியிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பக்கிரிசாமி.

      என் உள்மன உணர்வுகளைப் புரிந்துகொண்டதற்கு என் மகிழ்ச்சியும் நன்றியும்.

      அமைதியான வாழ்வுக்கு உதவத்தான் ‘கருத்துகள்’. அவை ஆளுக்கு ஆள் மாறுபடுவதில் தவறில்லை. நல்லது நடந்தால் போதும். நம் எல்லோரையும் இணைப்பதற்கு ‘மனிதாபிமானம்’ ஒன்று போதும் என்று வலியுறுத்துவதுதான் நான் பதிவிடுவதன் நோக்கமும்கூட.

      மிக்க நன்றி பக்கிரிசாமி.

      நீக்கு