அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 3 மே, 2014

ஒரு ‘தினக்கூலி’ கடவுள் ஆன கதை!!!

இது ஏற்கனவே 90 பேர் மட்டுமே படித்த கதை. 900000 பேராவது படித்துப் பாராட்ட வேண்டும் என்னும் ‘பெரும்பேராசை’யில் மீள்பதிவாக [தலைப்பு மாற்றப்பட்டுள்ளது] வெளியிடுகிறேன். [உண்மையான காரணம், சரக்கு தீர்ந்துடிச்சிங்க!]

                  
ண்ணுச்சாமி ரொம்பவும் இளகிய மனசுக்காரன்.

காலை நேரத்தில், வழக்கம்போல வேலைக்குப் போய்க் கொண்டிருந்தபோது, அவனுக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த எழுபது வயது மதிக்கத் தக்க ஒரு முதியவரை மோதித் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டான் ஒரு வாகன ஓட்டி.

ரத்த காயங்களுடன் தார்ச்சாலையில் சரிந்து விழுந்தார் பெரியவர்.

யாரும் உதவாத நிலையில், ஆட்டோ பிடித்து அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தான். சோதித்த மருத்துவர்கள், “மயக்கமா இருக்கார். பயப்பட ஒன்னுமில்ல” என்றார்கள்; மிகவும் தாமதமாகவே சிகிச்சையளித்தார்கள்.

நீண்ட நேரக் காத்திருப்புக்குப் பிறகு, அவரைப் பார்க்க அவன் அனுமதிக்கப் பட்டான்.

முதியவருக்குச் சுயநினைவு திரும்பியிருந்தது.

அவரை நெருங்கி, “நல்லா இருக்கியா பெரியவரே?” என்று குரலில் கனிவு பொங்கக் கேட்டான் கண்ணுச்சாமி.

அவனை உற்றுப் பார்த்த அவர், “நல்லா இருக்கேன்பா. நீ.....நீதான் என்னை இங்கே கொண்டுவந்து சேர்த்தியா?” என்றார்.

“ஆமா. மோட்டார் சைக்கிளில் அடிபட்டு மயங்கி விழுந்துட்டே. உன்கிட்டே செல்ஃபோன் இல்ல. ஒரு அடையாள அட்டைகூட இல்ல. உன் குடும்பத்தார்க்குத் தகவல் தர முடியல. உனக்கு மயக்கம் தெளியட்டும்னு காத்திருந்தேன்” என்றான்.

“நீ கடவுள் மாதிரி வந்து என்னைக் காப்பாத்தினே. நீ நல்லா இருக்கணும்ப்பா”. குரல் தழுதழுக்கச் சொன்னார் முதியவர்.

“பெரியவரே, நான் கடவுள் மாதிரியெல்லாம் வரல. சாதாரண மனுசனாத்தான் வந்தேன். நான் பஸ் ஸ்டாண்டில் மூட்டை சுமக்கிறவன். உனக்கு உதவி பண்ணினதில் இன்னிக்கி வேலை கெட்டுது. கைவசம் இருந்த அம்பது ரூபாயை ஆட்டோவுக்குக் கொடுத்துட்டேன். வெறும் கையோட வீட்டுக்குப் போனா, ‘கைப்பிடி அரிசியில்ல; மறக்காம வாங்கி வான்னு சொல்லி அனுப்பிச்சேன். யாருக்கோ உதவி பண்ணினேன்னு இப்படி வெறுங்கையோட வந்து நிக்கிறியே, உனக்கு ஏன்தான் இப்படிப் புத்தி கெட்டுப் போச்சோ’ன்னு என் பெண்டாட்டி கத்துவா. எப்படிச் சமாளிக்கப் போறனோ? அந்தக் கடவுள்தான் வழிகாட்டணும்” என்று சொல்லி வெறுமையாய்ச் சிரித்தான் கண்ணுச்சாமி.

“எனக்கு ஒரே புள்ள. ஒன்னுக்கும் உபயோகம் இல்லாத இந்தக் கிழவனை வீட்டோட இருக்க வெச்சி ஒரு வேளைச் சோறு போடுறான். எப்பவாவது அஞ்சோ பத்தோ தருவான்.” என்று சொல்லிவிட்டு, சட்டைப் பையைத் துழாவிய முதியவர் கொஞ்சம் சில்லரையை எடுத்துக் காட்டினார்.

அதில் ஒரு ரூபாயை மட்டும் எடுத்துக்கொண்ட கண்ணுச்சாமி, “காயின் ஃபோனில் உன் வீட்டுக்குத் தகவல் தந்துட்டுப் போறேன். ஃபோன் நம்பர் சொல்லு” என்றான்.

#####################################################################################