பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 23 நவம்பர், 2019

ஆழ்மனதில் பதிந்த ஆனந்த விகடன் சிறுகதை!

‘முல்லை எம்.வசந்த்’ என்பவரின் படைப்பாக, ஆனந்த விகடனில் [14.04.1985]  வெளியான கதை இது. வாசியுங்கள். ஆண்டுகள் பல கடந்தும் மனதைவிட்டு அகலாத படைப்பு.


தலைப்பு: “போட்டதுதானுங்களே முளைக்கும்”

ரு ஆலமரத்தடியில் சோமனூர் கூடியிருந்தது.

‘டாப்லெஸ்’ ஆக நின்ற முனியப்பனின் கண்கள் சங்கடமாய்ப் புரண்டன.

பஞ்சாயத்துத் தலைவர் ஆதிலிங்கம், ஒரு செருமலை உதிர்த்துவிட்டுச் சொன்னார்: “ முனியப்பா, உங்க காலனிக்குன்னுதான் தனிக் கிணறு ஒதுக்கித் தந்துட்டமே. அப்புறம், ஊர்க் கெணத்துல ஒங்க வீட்டுப் பொம்பள தண்ணி எடுக்கிறது பெரிய அடாவடித்தனம் இல்லையா?”

வாணலியில் அப்பளமாய் நெளிந்தான் முனியப்பன்.

“அது நம்ம ஊருப் புள்ள இல்ல சாமி. கொளத்தூர்லே இருந்து நம்ம வூட்டுக்கு விருந்தாளியா வந்தவ. தெரியாம உங்க கெணத்துல எறச்சிட்டா. அவள நல்லா திட்டிபுட்டமுங்க. பெரிய மனசு பண்ணி.....”

“.....மன்னிக்க முடியாதுப்பா. தண்டனையை வேணுன்னா கொஞ்சம் கொறைக்கலாம்...ம்ம்...”

அபராதத் தொகையைச் சொன்னார் ஆதிலிங்கம். முனியப்பனும் லேசாகத் தலையசைத்தான்.

முனியப்பன் நகரவில்லை: ஆதிலிங்கத்திடம் தலையைச் சொறிந்து நின்றான்; தயக்கத்துடன் சொன்னான். “ஐயா, பெரியவங்க சமூகத்தில் ஒன்னு சொல்லணுமுங்க.....”

“சொல்லு.”

“வயசுக்கு வந்த என் புள்ளகிட்டச் சின்ன எசமான் தாறுமாறா நடந்துக்கிறதும், மெரட்டி உருட்டி அவ வாயை அடைக்கிறதும்.....”

கூட்டம் ஆக்ரோஷித்தது.

“அடி செருப்பால...”

“எங்களப் பத்தியே ‘கம்ப்ளேன்’ கொண்டு வர்றியா...?”

“அவ்வளவும் திமிரு...” -சத்தம் அதிககமாக, முனியப்பன் நடுங்கிப் போய்ப் பின் வாங்க, “சரி...சரி...போவட்டும் விடுங்க...” என்று பஞ்சாயத்தைக் கலைத்தார் ஆதிலிங்கம்.

முனியப்பன் எழுப்பிய பிரச்சினை அனாதையாய் நின்றது!

தலை குனிந்தவாறு நடந்தான்.

ருபது வருடங்கள் கழிந்தன.

பஞ்சாயத்தைக் கூட்டி ஆதிலிங்கம் கேட்டார்:

“என்னவே முனியப்பன்! ஒம் பேரனுக்குத் தெனாவெட்டு கூடிப் போச்சு. டிரான்சிஸ்டரைக் கழுத்தில் மாட்டிகிட்டு, சிகரெட் பிடிச்சிட்டு, சீட்டியடிச்சுட்டு, நெஞ்சை நிமிர்த்தி எங்க தெருவில் அலையறான். எங்க ஓட்டலில் எங்களுக்குச் சமதையா பேப்பர் படிக்கிறான்.....”

முதுமையில் தளர்ந்து ஒடுங்கிய முனியப்பன், இடுங்கிய கண்களால், அதே சமயம் நேர்க்கோட்டில் பார்த்தார். அவர் முகத்தில் லேசான புன்னகை அரும்பியது. பயமின்றி வந்தன வார்த்தைகள்.

“இருபது வருஷம் முந்தி நான் சொன்னபோது நீங்க மதிக்கல... என் வாயைக் கட்டி அனுப்பினீங்க...இப்பவும் என் வாரிசுகள் அடக்கமாத்தான் நடந்துக்கிறாங்க. ஆனா, என் பேரன் விதிவிலக்கா இருக்கான். அவன் ஒடம்புல எங்க பரம்பரை ரத்தம் ஓடல. யாரு ரத்தம் ஓடுதுன்னு உங்களுக்கே தெரியும். நான் என்ன செய்யட்டும்? எங்க வாரிசா இருந்தா நான் ‘கண்ரோலு’ பண்ண முடியும்!”

அவமானத்தில் தலை குனிந்தபடி நகர்ந்தார் ஆதிலிங்கம்!
****************************************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக