திங்கள், 5 ஏப்ரல், 2021

கடவுள் கற்பிக்கப்படாமல் இருந்திருந்தால்.....

100 விழுக்காடு விலங்காக வாழ்ந்து கொண்டிருந்த மனிதன், சிக்கிமுக்கிக் கற்களை உரசி நெருப்பு உண்டாக்கக் கற்றபோதே அவனது ஆறாவது அறிவு செயல்படத் தொடங்கிவிட்டது.

அது படிப்படியாக  வளர, ஒரு தலைவனின் ஆளுமையின் கீழ் குழு சேர்ந்து [பல்வேறு குழுக்களாக]வாழக் கற்றுக்கொண்டான்; பாதுகாப்பான குடியிருப்புகளை உருவாக்குதல், உணவைப் பதப்படுத்துதல், வேட்டைக்கான கருவிகளைப் படைத்தல் என்றிப்படி .....

மனிதனின் வாழ்க்கையைப் பாதுகாப்பானதாக மாற்றவும் வசதிகள் நிறைந்ததாக ஆக்கவும் அந்த ஆறாவது அறிவு பயன்பட்டது.

மனிதகுலத்தின் நல்வாழ்வுக்காக மட்டுமே அது பயன்படும் நிலை நீடித்திருந்தால்.....

கடவுளைக் கற்பித்து, அச்சுறுத்தி மனிதனின் பகுத்தறிவு முடக்கப்படாமல் இருந்திருந்தால்.....

மனித இனத்தின் முன்னேற்றம் இன்று இருப்பதைக் காட்டிலும் மிகப் பல மடங்கு அதிகரித்திருக்கும். மனிதன் வேற்றுக் கிரகங்களில் குடியேறியிருக்கக்கூடும்; அவனுடைய ஆயுள் நிச்சயமாகச் சில நூறுகளைக் கடந்திருப்பதும் சாத்தியமே!

அன்றிலிருந்து இன்றுவரை, கடவுளை நம்ப வைப்பதிலும், அவர் பற்றி விதம் விதமான கதைகளை இட்டுக்கட்டுவதிலும், அவை பற்றி விவாதிப்பதிலும், மத அழிப்பு நடவடிக்கைகளிலும், இம்மாதிரியான பிற செயல்களிலும் மனித அறிவில் பெரும் பகுதி வீணடிக்கப்பட்டுவிட்டது.

ஆதிமனிதன் இயற்கையின் சீற்றங்கள் கண்டு அஞ்சினான்.

சீற்றங்கள் கண்டு அஞ்சியதில் வியப்பில்லை; தவறுமில்லை. ஏனென்றால், தன்னைத் தாக்கி அழிக்கவல்ல அதீத சக்திகளைக்  கண்டு அஞ்சுவது உயிர்களின் இயல்பு.

அஞ்சியதோடு நில்லாமல், அந்த அழிவுச் சக்திகளையே அவன் வழிபட ஆரம்பித்ததுதான் பெரும் தவறாக அமைந்துவிட்டது. [நீரையும் நெருப்பையும் காற்றையும் மனித இனம் கடவுள்களாக வழிபட்டதும், இன்றும் வழிபடுவதும் அறியத்தக்கது]

வலியவனால் தாக்கப்பட்டபோது, எளியவன் அவனைப் பணிந்து  வழிபட்டுத் தன்னைக் காத்துக்கொண்ட அந்த வாழ்க்கை அனுபவம்தான் மனிதன் கடவுளை வழிபடக் காரணமாக அமைந்தது என்பது அனைவரும் உணர வேண்டிய உண்மை.

அந்த அடிப்படையில்தான் ‘மேலானவர்’ என்று நம்பப்பட்ட கடவுளும் மனிதர்களால் பணிந்து துதிக்கப்பட்டார்.

அறிவைச் செலவழித்து ஆழ்ந்து சிந்திப்பது என்பது அரிய செயல்.

மூளை உழைப்பு என்பது கடினமான ஒன்று.

தனக்கு வேண்டியவற்றை, அயராமல் ஓயாமல் நம்பிக்கை இழக்காமல் சிந்தித்துச் சிந்தித்து, உழைத்துப் பெறுவதைக் காட்டிலும், குறுக்கு வழியிலும் குறுகிய காலத்திலும் தன்னை வருத்திக் கொள்ளாமல் ஆசைப்பட்டதையெல்லாம்  அடைய நினைப்பதும் மனித குணம்தான் !

இக்காரணத்தால்.....

தன் விருப்பங்களை நிறைவேற்ற மனிதன் ‘கடவுள்’ என்ற ஒருவரை நாடியதில் ஆச்சரியம் இல்லை!

அமைதியான வாழ்வுக்கு வழிகாட்டிய கவுதம புத்தன் போன்ற அறிஞர்கள் கடவுளைப் பற்றி ஒருபோதும் கவலைப்படவில்லை; அந்த அறிஞர்களையே கடவுளாக்கியது மட்டுமல்ல, மனிதராய்ப் பிறந்து மனிதராகவே வாழ்ந்து மரித்தவர்களையே கடவுளின் மறுபிரதி ஆக்கி, 'மகான்' என்றும், 'அவதாரம்' என்றும் போற்றி வழிபட்டு, சிந்திக்கும் அறிவை மழுங்கடித்துக்கொண்டார்கள் நம் மக்களில் மிக மிக மிகப் பெரும்பாலோர்.

மக்களை மூடர்கள் ஆக்கியதில் மதவாதிகளின் பங்கு அளப்பரியது. மனிதனின் ஆறறிவு வளர்ச்சிக்குத் தடைக் கற்களாய் அமைந்தவர்கள் இவர்களே.

இவர்கள் கடவுளைக் காட்டி, மக்களை மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடாமல் தடுத்ததுடன் நில்லாமல், தம் பகுத்தறிவைப் பயன்படுத்தி அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய பல  அறிஞர்களைத் தண்டித்தார்கள். இதனால், மனிதனின் ஆறறிவு வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டது.

‘ஆயிரம். ஆண்டுகள்தான் வாழ்ந்தென்ன பயன்? மனிதனை மனிதனாக வாழ வைத்திருப்பது கடவுள் நம்பிக்கைதானே? அந்த நம்பிக்கையை மனிதனின் அடிமனதில் ஆழப் பதித்தவர்கள் மதவாதிகள் அல்லவா?’ என்றெல்லாம் பக்தியுள்ளம் கொண்டவர்கள் நினைப்பது புரிகிறது. அது தவறு என்பது என் அசைக்க இயலாத நம்பிக்கை.

மனிதனை மனிதனாக, அதாவது, நற்பண்புகளும் உயர் குணங்களும் உள்ளவனாக வாழத் தூண்டியது அவனுக்கு இயற்கையாக வாய்த்த பகுத்தறிவுதான்; மதமோ கடவுள் நம்பிக்கையோ அல்ல. ஆழ்ந்து சிந்தித்தால் இந்த உண்மையைப் புரிந்துகொள்ளலாம்.

======================================================================================